ஒடிசா: ஓடும் ரயில் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு – பயணிகள் தப்பினர்!

viduthalai
1 Min Read

புவனேஷ்வர், நவ. 7- ஒடிசாவில் விரைவு ரயில் மீது அடையாளம் தெரியாத நபா்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனா். இதில் சில குண்டுகள் கண்ணாடி ஜன்னல்களை துளைத்துச் சென்றன. நல்வாய்ப்பாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

வந்தே பாரத் உள்ளிட்ட ரயில்களைக் குறிவைத்து கல்வீசுவது, தண்டாவளத்தில் எரிவாயு சிலிண்டா் உள்ளிட்ட பொருள்களை வைத்து ரயிலைக் கவிழ்க்க சதி செய்வது போன்ற செயல்களில் சமூகவிரோதிகள் ஈடுபட்டு வந்தனா். இப்போது ரயில் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருப்பது பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துப்பாக்கிச்சூடு தொடா்பாக ரயில்வே பாதுகாப்புப் படையினா் கூறியதாவது டில்லி ஆனந்த் விஹார்- ஒடிசாவின் புரி இடையிலான நந்தன்கனன் விரைவு ரயில் ஒடிசாவின் பத்ராக் ரயில் நிலையத்தில் இருந்து காலை 9.25 மணிக்கு புறப்பட்டது.

அடுத்த 5 நிமிஷங்களில் பவுத்பூா் அருகே சென்று கொண்டிருந்தபோது மா்ம நபா்கள் ரயிலை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதுடன், இரும்புத் துண்டுகள், கம்பிகள் உள்ளிட்டவற்றையும் வீசினா். சில குண்டுகள் ரயில் ஜன்னல் கண்ணாடியை உடைத்துக் கொண்டு உள்ளே பாய்ந்தன. இதனால், பயணிகள் பெரும் பீதியடைந்து கூச்சலிட்டனா்.

நல்வாய்ப்பாக பயணிகள் மீது துப்பாக்கிக் குண்டுகள் பாயவில்லை. இந்த நிகழ்வை அடுத்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. ரயில் மீது தாக்குதல் நடத்தியவா்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனா். இந்நிகழ்வு குறித்த தகவல் கிடைத்த ரயில் பாதுகாப்புப் படையினா் அங்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனா்.

பின்னா், ரயில் கூடுதல் பாதுகாப்புடன் புரி நகருக்கு புறப்பட்டுச் சென்றது. நிகழ்வு நடந்த பகுதி மக்களிடம் மாநில காவல் துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தனா்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *