இந்நாள் – அந்நாள் (5.11.1889) பெரியார் பேணிய பல்கலைப்புலவர் கா.சுப்பிரமணிய பிள்ளை பிறந்த நாள்

viduthalai
2 Min Read

திருநெல்வேலியில் காந்திமதிநாதப் பிள்ளை – மீனாட்சியம்மை இணையருக்கு மகனாகப் பிறந்தவர் கா.சுப்பிரமணியப் பிள்ளை. இவருடைய, தந்தை சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதன்முதலாக பி.ஏ. பட்டம் பெற்று, ‘பி.ஏ. பிள்ளை’ என்று அழைக்கப்பட்டவர். அவருடைய வாரிசாக உருவான கா.சு.பிள்ளை, தன்னுடைய ஆரம்பக் கல்வியை நெல்லையில் உள்ள திண்ணைப் பள்ளிக்கூடத்தில் கற்றார்.

இவர் படித்த காலத்தில், தங்கிய இடத்தில் மணியடித்துச் சிவ பூஜை செய்துவந்ததால், இவருக்குப் பூஜைப் பிள்ளை என்ற பெயரும் உண்டு. 1902ஆம் ஆண்டு அரசின் நடுத்தரத் தேர்வில் மாநிலத்திலேயே முதலிடம் பெற்றதால், மற்ற வகுப்புகளுக்கான கட்டணத்தை அரசே ஏற்றுக் கொண்டது. மதுரை தமிழ்ச் சங்கம் நடத்திய தேர்விலும் சென்னைப் பல்கலைக்கழகத் தேர்விலும் மாநில அளவில் இவர் முதலிடம் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத் தேர்வில் முதலிடம் பெற்றபோதுதான், ‘பவல்மூர்கெட்’ என்ற ஆங்கிலப் பெரியார் அமைத்த தமிழாராய்ச்சி நிறுவனப் பரிசைப் பெற்றார்.

சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டம் படித்தார். ‘எம்.எல்’ பட்டம் பெற்ற முதல் தமிழறிஞர் கா.சு.பிள்ளை என்பதால், தன் தந்தையைப்போலவே இவரும், ‘எம்.எல். பிள்ளை’ என்று பலராலும் அழைக்கப்பட்டார்.

எம்.எல்.பிள்ளை என்றும் கா. சு.பிள்ளை என்றும் அறியப்பட்டவர் – இந்திய அளவில் நடந்த சட்ட நூல் ஆய்வுப் போட்டியில் வெற்றி பெற்று தாகூர் சட்ட விரிவுரையாளர் பட்டத்தை வென்று 10 ஆயிரம் வெண் பொற்காசுகள் பரிசாகவும் பெற்றவர்.

இவர் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு, திருக்குறள் பொழிப்புரை ஆகியவை, பிற்கால வரலாற்று நூல்களும், திருக்குறள் உரைகளும் எழுதியவர்களுக்கு வழிகாட்டியாக அமைந்தன. சைவர் ஆனாலும் முற்போக்காளர் .
இவர் நினைவாக ” பல்கலைப்புலவர் தமிழ்க் கா.சு. நூறு” என்ற நூலில் 100 அறிஞர்கள் இவர் புகழ் பாடும், கட்டுரைகள், கவிதைகள் படைத்துள்ளனர்.

அதில் முதற்கட்டுரை அஞர் அண்ணா எழுதியது. அதில் ஒரு சிறு பகுதி இது……. “சைவமாம் கடலில் நீந்திச் செல்லும் போது எதிரே வந்த சில சீர்திருத்தமாம் பொற்றுரும்புகளை எம்மிடம் வீசி எறிந்துவிட்டு
மீண்டும் அச்சைவக் கடலிலேயே நீந்திச் சென்றவரைச் சைவ உலகம் கைவிட்டு விட்டதென்றால் அது பெரிதும் வருந்தக்கூடிய ஒரு நிகழ்ச்சியாகும் ”

காசு.பிள்ளை தமிழ் நாட்டில், தமிழராக சைவக் குடும்பத்தில் பிறந்ததால் அவருடைய அருமை பெருமை பாராட்டப் படவில்லை என்று அவரின் அன்னையார் ஆதங்கப்பட்டிருக்கிறார்” புகழ் பெற்ற இந்தச் சட்ட மேதை மேல் ஜாதியில் பிறந்திருந்தால் உலகப் புகழ் பெற்றிருப்பார்.

தமிழ் அறிஞர் கா.சு.பிள்ளை அவர்கள் பணியாற்றி ஓய்வு பெற்று திருநெல்வேலியில் இருந்து போது அவர் மிகவும் வறுமையில் வாடினார் என்று கேள்விப்பட்ட தந்தை பெரியார் கா.சு.பிள்ளை அவர்களுக்கு அவர் மறையும் வரை மாதா மாதம் 50ருபாய் கொடுத்து வந்தார் (இன்றைய ருபாய் மதிப்பு 70 ஆயிரம்). இதை குடிஅரசு, விடுதலை இதழ்களில் – எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை எந்த இடத்திலும் பேசவும் இல்லை என்ற செய்தியை மறைமலைஅடிகள் குறிப்பிட்டு இருக்கிறார். மறைமலையம் என்ற புத்தகத்தில்இந்த செய்தியை குறிப்பிட்டு உள்ளார்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *