பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் ஜார்க்கண்டில் பட்டினிச் சாவு நிகழும்-முதலமைச்சர் ஹேமந்த் சோரன்

viduthalai
1 Min Read

சென்னை, நவ. 5- ஜார்க்கண்டில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பட்டினிச் சாவுகள் நிகழும் என்று அந்த மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தெரிவித்தார்.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ரேஷன் கடைகளில் மாதம் 5 கிலோவுக்கு பதிலாக 7 கிலோ அரிசி வழங்கப்படும் என்றும் அவா் தெரிவித்தார். இது தொடா்பாக அவா் 3.11.2024 அன்று ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘முன்பு பாஜக ஆட்சி காலத்தில் ஜார்க்கண்டில் 11 லட்சம் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டன. 3 லட்சம் முதியோருக்கு ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது. இதனால், மாநிலத்தில் பட்டினிச் சாவுகள் ஏற்பட்டன.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆட்சி அமைத்த பிறகு இந்த நிலையை மாற்றினோம். பட்டினிச் சாவுகள் தடுக்கப்பட்டன. ஆனால், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மோசமான நிலை வந்துவிடும். மாநிலத்தில் மக்கள் பட்டினியால் உயிரிழக்க நேரிடும்.

அதே நேரத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ரேஷனில் இப்போது வழங்கப்படும் மாதம் 5 கிலோ அரிசிக்கு பதிலாக மாதம் 7 கிலோ அரிசி வழங்கப்படும். ஓய்வூதியமும் உயா்த்தி வழங்கப்படும்’ என்று கூறியுள்ளார். ஜார்க்கண்டில் நவம்பா் 13, 20-ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில், ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணிக்கும், பாஜக கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *