சென்னை, நவ.5- ஓய்வூதியதாரர்கள், ராணுவ ஓய்வூதியதாரர்கள் மற்றும் இதர ஓய்வூதியதாரர்கள் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதியம் பெற தங்கள் வருடாந்திர ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இதுகுறித்து வடகோட்ட முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கி.லட்சுமணன் பிள்ளை விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறயிருப்பதாவது:
நேரில் சென்று உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்கள் பல சிரமங்களை சந்தித்துவருகின்றனர். இதனை தவிர்க்கும் வகையில், ஒன்றிய அரசு அறிமுகப்படுத்திய ‘ஜீவன் பிரமான்’ திட்டத்தின் மூலம், அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா அஞ்சல் வங்கி சார்பில் அஞ்சல்காரர்கள் ஓய்வூதியதாரர்களின் வீட்டிற்கு நேரடியாக சென்று, அவர்களின் கைவிரல் ரேகையை பயன்படுத்தி, டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க ஏற்பாடு செய்து வருகின்றனர். இதற்கு சேவை கட்டணமாக ரூ.70 அஞ்சல்காரரிடம் செலுத்த வேண்டும்.
ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி அஞ்சல்காரரிடம் ஆதார் எண், செல்போன் எண், பி.பி.ஓ. எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விவரங்களை தெரிவித்து, கைவிரல் ரேகை பதிவு செய்தால், ஒரு சில நிமிடங்களில், டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கவும் முடியும்.
இந்த சேவையை பெற விரும்பும் ஓய்வூதியதாரர்கள் அருகில் உள்ள அஞ்சல் அலுவலகம் அல்லது அஞ்சல்காரரை தொடர்புகொண்டு பயனடையலாம். https://ccc.cept.gov.in/ServiceRequest/ request.aspxஎன்ற இணையதள முகவரி மூலம் அல்லது ‘Postinfo’ செயலியை பதிவிறக்கம் செய்து பதிவு செய்யலாம். அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் கடந்த 1ஆம் தேதி முதல் சிறப்புமுகாம் கள் நடத்தப்படுகிறது என்று பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.