தீபாவளியின் பெயரால் கொள்ளை – சென்னைக்கு வந்த விமானங்களில் இரு மடங்கு கட்டணம் வசூலிப்பு!

viduthalai
2 Min Read

சென்னை, நவ.5- தீபாவளி விடுமுறைகள் முடிந்து, சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பிய மக்கள் பெரும் அளவு, நேற்று (4.11.2024) விமானங்களின் மூலம் சென்னை வந்தனர், மதுரை, தூத்துக்குடி, திருச்சி, கோவை, சேலம் ஆகிய இடங்களில் இருந்து சென்னைக்கு வரும் விமானங்களின் கட்டணங்கள் இருமடங்கு அதிகரித்தது.

அதேவேளையில், சென்னையில் இருந்து மற்ற மாநகர்களுக்கு செல்லும் விமானங்களின் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளது.ஒரே பயண தூரத்திற்கு, புறப்பாடு பயணிகளுக்கு ஒரு கட்டணமும், வருகை பயணிகளுக்கு கூடுதல் கட்டணமும் என இரட்டைக் கட்டண முறையை, விமான நிறுவனங்கள் அமல்படுத்தி, பயணிகளிடம் அதிக கட்டணங்கள் வசூலிப்பதால், பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தீபாவளி மற்றும் வாராந்திர விடுமுறைகள் தொடர்ச்சியாக 4 நாட்கள் வந்ததால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலான மக்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு ஒட்டுமொத்தமாக புறப்பட்டு சென்றனர்.இந்த நிலையில் நேற்று விடுமுறை முடிந்து, கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள், தொழிற் கூடங்கள் வேலை நாட்களாக தொடங்குவதால், சொந்த ஊருக்கு சென்றிருந்த மக்கள் ஒட்டு மொத்தமாக நேற்றைக்கு முந்தைய நாளிலிருந்து மாலையில் இருந்து, சாரை சாரையாக சென்னைக்கு திரும்பினர்.

அரசு பேருந்துகள், தனியார் ஆம்னி பேருந்துகள், ரயில்கள், தனியார் வாகனங்கள் என அனைத்துவகையான போக்குவரத்தின் வழியும், மக்கள் திரள் சென்னைக்குத் திரும்பி வந்து கொண்டிருக்கிறது. அவ்வகையில், பெரும்பாலானோர் விமானங்களில் நேற்றைக்கு முந்தைய இரவில் இருந்து, சென்னைக்கு திரும்பினர்.
மதுரையிலிருந்து சென்னை வருவதற்கு நேற்று (4.11.2024) விமானத்தில் ரூ.10,119 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால் சென்னையில் இருந்து மதுரை செல்வதற்கு நேற்று விமானக் கட்டணம் ரூ.4,260 மட்டுமே.அதைப்போல் தூத்துக்குடியில் இருந்து சென்னை வருவதற்கு நேற்று விமானக் கட்டணம் ரூ.11,925. ஆனால் சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்வதற்கு நேற்று விமானக் கட்டணம் ரூ.6,771 மட்டுமே.

விமானக் கட்டணங்கள் இருமடங்கு உயர்வு!

திருச்சி- சென்னை நேற்று விமானக் கட்டணம் ரூ.11,109. ஆனால் சென்னை- திருச்சி விமான கட்டணம் ரூ.5,796.
கோவை- சென்னை நேற்று விமான கட்டணம் ரூ.10,179. ஆனால் சென்னை- கோவை நேற்று, விமான கட்டணம் ரூ.4,466.சேலம்- சென்னை விமான கட்டணம் ரூ.9,516. ஆனால் சென்னை- சேலம் நேற்று விமான கட்டணம் ரூ.4,647.

இது பற்றி விமான நிறுவனங்கள் தரப்பில் கூறும் போது, சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு நேற்று (4.11.2024) புறப்பட்டு சென்ற விமானங்களில் பயணிகள் கூட்டம் மிகவும் குறைவாக இருந்தாலும், அதனால் ஏற்படும் இழப்பை தாங்கிக் கொண்டு, விமானங்களை இயக்குகிறோம். அதே நேரத்தில் வெளியூர்களில் இருந்து, சென்னைக்கு வரும் விமானங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால், கட்டண விகிதத்தை மாற்றி அமைத்து, போகும்போது ஏற்பட்ட இழப்பை, ஓரளவு சரி செய்கிறோம் என்று கூறினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *