காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில் பங்கேற்க சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு ஆஸ்திரேலியா பயணம்

Viduthalai
1 Min Read

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை, நவ. 3- தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு காமன்வெல்த் நாடாளு மன்ற மாநாட்டில் பங்கேற்க ஆஸ்திரேலியா சென்றார்.
முன்னதாக, அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னியில் வருகிற 5ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் 67ஆவது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில் தமிழ்நாடு கிளையின் பிரதிநிதியாக பேரவை தலைவர் மு.அப்பாவு கலந்து கொள்கிறார்.
சட்டமன்ற பேரவை செயலக கூடுதல் செயலாளர் பா.சுப்பிரமணியம் மாநாட்டின்போது நடைபெறும் SOCATT கூட்டங்களில் கலந்து கொள்கிறார். தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு மற்றும் கூடுதல் செயலாளர் சீனிவாசன் ஆகியோர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று (2.11.2024) இரவு 11.25 மணிக்கு சென்னையில் இருந்து சிங்கப்பூர் சென்று, அங்கிருந்து மலேசியா நாட்டிற்கு செல்கின்றனர்.

பின்பு சிட்னி நகருக்கு 5ஆம் தேதி சென்றடைவார்கள்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (2.11.2024) தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை தலைவர் அறையில் சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவுவை சந்தித்து, ஆஸ்திரேலியா நாட்டின், சிட்னி நகரில் நடைபெற உள்ள 67ஆவது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில் கலந்துகொள்ள செல்வதையொட்டி அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். பேரவை தலைவர் மு.அப்பாவு மற்றும் கூடுதல் செயலாளர் சீனிவாசன் ஆகியோர் இந்த மாநாட்டில் கலந்துகொண்ட பிறகு நியூசிலாந்து நாட்டிற்கு சென்று, பின்னர் 17ஆம் தேதி (ஞாயிறு) இரவு 10.10 மணியளவில் சிங்கப்பூர் விமானம் மூலம் சென்னை திரும்புகின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *