வள்ளலார் பாட்டுக்கு பொருத்தமான உரை விளக்கம் தந்தார் சிந்தனையாளர் சாமி. சிதம்பரனார்!
திருக்குறளை உலகுக்குத் தந்த உயர் தனி அறிவுச் செம்மல் வள்ளுவர் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய குறளில் ஒன்று,
‘‘ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.’’ – (குறள் 214)
இது ‘ஒப்புரவு அறிதல்’ என்ற அதிகாரத்தின்கீழ் வரும் அருமையான, ஆழமான, சிந்தனைக்கு விருந்து படைக்கும் குறள் ஆகும்!
‘Empathy’ என்ற ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச் சொல்லை இதன் மூலமே கண்டறிந்தோம் நாம்.
மற்றவர் துன்பம் குறித்து இரங்கும்போது அந்த வெறும் இரங்கலோடு, பரிதாபத்தோடு நின்று விடாமல் (Mere Sympathy) அதையும் தாண்டிய அந்த வலியால் அவதிப்படும் நபராக மாறி அந்தத் துன்பத்தின் கொடுமையை உணர்ந்து அத்தகைய ஒருவருக்கு உதவுதல் என்பதையே ‘ஒத்தது அறிவான்’ என்ற இரண்டு சொற்களை வள்ளுவப் பேராசான் கூறுகிறார்!
அக்குறளின் முழுப் பொருள் இதோ:
‘ஒப்புரவை நன்கறிந்து, அதனைக் காப்பாற்றி, பிறர்க்கு உதவியாக இருந்து வாழ்க்கையை நடத்து கின்றவன் உள்ளபடியே உயிர் வாழ்கின்றவன் என்று கருதப்படுவான்;
ஒப்புரவு பண்பு இல்லாதவன், உயிரோடு இருந்தாலும் கூட, இறந்து போனவர்களில் ஒருவனாகவே வைத்து எண்ணப்படுவான்?
(நாவலர் இரா. நெடுஞ்செழியன் உரை)
உயிர் இருப்பதால் ‘வாழும் மனிதன்’ என்பது வெறும் சென்சஸ் கணக்கு; கூடுதலாக மருத்துவச் சான்று கொண்ட கணக்கு. ஆனால் அது மட்டுமே உண்மை யாகவே ‘வாழும் மனிதன்’ என்பதற்கான சரியான அடை யாளம் அல்ல என்கிறார் வள்ளுவர்.
தவறான வாழ்க்கை வாழ்ந்து கெட்டுப் போய் தவறை உணர்ந்து, திருந்தி நல்வாழ்வு வாழ உளப்பூர்வமான உணர்வுடன் வாழும் மனிதன், செத்துப் பிழைத்த மனிதன் ஆவான். ஆங்கிலத்தில்கூட சட்ட சொற்பிரயோகம் ஒன்று உண்டு.
‘Civil Death’ என்று ‘குடிமை மரணம்’ – அதென்ன?
சமூகத்தில் சட்டப்படி உள்ள உரிமைகளை அனுப விக்க எல்லா மனிதர்களுக்கும் உரிமைகள் உண்டு.
சட்டக் குற்றவாளியான பின்பு சில உரிமைகளை இழந்தும் சலுகைகளை அனுபவிக்க இயலாதவர்கள் சட்டப்படி தண்டனை பெற்று, உரிமை இழந்தவர்களை ‘Civil Death’ ‘குடிமை மரணம்’ என்பது குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது.
எனவே மரணங்கள் பல வகை – ஒவ்வொன்றையும் அறிவுக்கு வேலை கொடுத்து ஆராய முற்பட்டால் எல்லாம் புரியும்.
(மேலும் சில நாளை)
வாழ்வியல் சிந்தனைகள் – கி.வீரமணி