நடிகர் விஜய்க்கு (அரசியல்) தெளிவு இல்லை! இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன் விமர்சனம்

Viduthalai
2 Min Read

சென்னை, அக். 31- அரசியல் பாதையில் எதை தேர்ந்தெடுக்கப் போகிறார் என்பதில் நடிகர் விஜய்க்கு தெளிவில்லை. ‘பாஜக பாசிசம் எனில், நீங்கள் என்ன பாயாசமா?’ எனக் கூறியதன் மூலம் பாசிச அபாயத்தை அவர் உணர்ந்ததாகத் தெரியவில்லை” என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்ட அறிக்கையில், “சிறந்த திரைப்படக் கலைஞராக வலம் வந்த விஜய், தற்போது அரசியலில் முதல் அடி எடுத்து வைத்துள்ளார். அரசியல் பாதை என்பது இரண்டு வகையானது. ஒன்று இடதுசாரி பாதை, மற்றொன்று வலதுசாரி பாதை. அவர் எந்தப் பாதையை தேர்ந்தெடுக்க உள்ளார் என்பது குறித்து, அவரது மாநாட்டு உரையில் தெளிவில்லை.

பிளவுவாத சக்திகளை எதிர்ப்பதாகக் கூறுகின்றார். அடுத்த கணம் திமுகவை குறிவைத்து பேசுகிறார். திமுகவை மட்டுமல்ல, திமுகவுடன் தோழமை கொண்ட கட்சிகளின் மீதும் மறைமுகமாக தாக்குதலை நடத்தியுள்ளார்.

‘பாஜக பாசிசம் எனில், நீங்கள் என்ன பாயாசமா?’ எனக் கூறியதன் மூலம் பாசிச அபாயத்தை அவர் உணர்ந்ததாகத் தெரியவில்லை. எது பேரபாயம்? அரசியல் அமைப்புச் சட்டத்தை நிராகரிப்பது, புறம்பாகச் செயல்படுவது அரசமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்டுள்ள அமைப்புகளை சீர்குலைத்து, தனக்கு உட்பட்ட அமைப்பாகவும், தன் உத்தரவை நிறைவேற்றும் அமைப்பாகவும் மாற்றியுள்ளது.

எதிர்க்கட்சிகளை பழிவாங்குவது, அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சுயமாக சிந்திப்பது, பேசுவது, எழுதுவது என்ற ஜனநாயக உரிமையைப் பறித்து, மாற்று கருத்துடையோரை கொல்வது, மதச்சார்பின்மை கொள்கைக்கு மாறாக மதரீதியாக மக்களைப் பிளவுபடுத்தி தனது குறுகிய அரசியல் நோக்கத்தை நிறைவேற்றி வருவது போன்றவைதானே அபாயத்தின் உச்சம் என்பதனை உணர முடியவில்லையா?

சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதி, சமூகநலத் திட்டங்கள் ஆகியனவற்றை செயல்படுத்துவதில், நிறைவேற்றுவதில் திமுக எங்கே தவறியுள்ளது என்பது குறித்து கூறினால் அது பரிசீலனைக்குரியது. அதைத் தவிர்த்து, பாஜக கூறும் கருத்தையே இவரும் திருப்பி கூறுவதால் என்ன பயன்? இதன்மூலம் பாசிச பாஜகவுக்கு விஜய் துணை போகின்றாரோ? என்ற அய்யத்தை உண்டாக்குகிறது.

நாங்களே அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்து முதலமைச்சர் ஆவேன் என நாற்காலி ஆசையை வெளிப் படுத்தியவர், எங்களோடு சேர வந்தால் சேர்த்துக் கொள்வோம், அவர்களுக்கு அமைச்சரவையில் இடம் அளிப்போம் என்று கூறியி ருப்பது அதிகாரத்தில் பங்கு என்ற தேன் தடவும் வேலையாகும்.

இதன்மூலம் திமுக தலைமையி லான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சிதையும் என்ற அவரது எதிர்பார்ப்பு என்பது பாசிச சக்திகள் தமிழ்நாட்டில் கால் ஊன்ற மேற்கொள்ளப்படும் அரசியல் உத்தியாகும். இத்தகைய நயவஞ்சக நரித்தனத்துக்கு தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் இரையாக மாட்டார்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *