சென்னை, அக்.30- கொள்கை அடிப் படையில் தி.மு.க.வை ஆதரிக்கிறோம். எங்கள் கூட்டணி உடையும் என்கிற எண்ணம் ஒருபோதும் வெற்றி பெறாது என்று ‘ஜூனியர் விகடன்’ இதழில் வெளியான கட்டுரைக்கு பதிலளித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ஜனசக்தி இதழில் குறிப்பிட்டுள்ளார்.
அவரது பதிலடி வருமாறு:–
‘ஆடு நனைவதைக் கண்டு ஓநாய் அழுததாம்’ என்று ஒரு பழமொழி உண்டு.
“இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தனது போராட்டக் குணங்களை இழந்து விட்டது. மக்கள் பிரச்சினைகள் எதுவா னாலும் களத்தில் நின்று போராடும் கட்சி தற்போது போராடுவதில்லை. கண்டும் காணாமல் உள்ளது.”
‘‘வி.சி.க.வின் மது ஒழிப்பு மாநாட் டில் தொடங்கி, சாம்சங் நிறுவனம் போராட்டம் வரையில் தி.மு.க.வின் பிரச்சாரப் பிரிவுகளாகவே கூட்டணிக் கட்சி தலைவர்கள் மாறிப் போய் விட்டார்கள் எனப் புலம்பித் தீர்க் கிறார்கள் தி.மு.க. உறவாய் இருக்கும் கூட்டணிக் கட்சிகளின் இரண்டாம் கட்ட நிர்வாகிகள். என்னதான் நடக்கிறது தி.மு.க. கூட்டணிக்குள்?” என்கிற வினாவுடன் விரிவான கட்டுரை ஒன்றை அய்ந்து பக்கங்களுக்குக் குறையாது 20.10.2024 தேதியிட்ட ‘ஜூனியர் விகடன்’ வார இதழ் வெளி யிட்டுள்ளது.
இந்த இதழ் மட்டுமல்ல, வேறு சில நாள் மற்றும் வார ஏடுகளும் இது போன்ற விமர்சனங்களையும், உபதே சங்களையும் வாரி வழங்கி வருகின்றன.
இத்தகைய உபதேசங்கள் உள்நோக்க முடையன. கட்சித் தலைமைக்கும், அணிகளுக்கும் இடையே முரண் பாட்டை உருவாக்கிக் குளிர் காய விரும்புகின்றன. இத்தகைய ஏடுகளுக்கு என ஓர் அரசியல் உள்ளது. அது என்ன அரசியல் என்பதனை வெளிப்படுத்திட மாட்டார்கள். அத்தகைய துணிச்சல் அவர்களுக்குக் கிடையாது.
புழுதிவாரி இறைப்பர்!
தங்களது ஏடுகள், ஒரு நடுநிலை தவறா நல் ஏடு என்று பறைசாற்றிக் கொள்வார்கள். ஆனால் வெளியே தெரியாமல் ஒரு சார்பு நிலை அரசி யலை மேற்கொள்வார்கள். அவர்களது அரசியல் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பிறர் மீது புழுதிவாரி இறைப்பார்கள்.
ஒன்றியத்தில் இருக்கும் ஆட்சி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொள்ளும் கொள்கை என்ன? யாருடைய நலன்களுக்காக அவர்கள் ஆட்சி நடத்துகின்றார்கள்? மக்களுக்கான ஆட்சியா? அல்லது விரல் விட்டு எண்ணக்கூடிய நபர்களான அம்பானி, அதானி இத்தியாதிகளுக்கான ஆட்சியா? யார் நலன் பாதுகாக்கப்படுகின்றது? யார் நலன் புறக்கணிக்கப்படுகிறது?.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங் களை புறக்கணிப்பார்கள். அம்மாநில மக்கள் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப் படும் போது அதனை கண்டு ரசிப் பார்கள். தங்களது கட்சி ஆட்சி புரியும் அல்லது தங்களை ஆதரிக்கும் கட்சி ஆளும் மாநிலங்களுக்கு நிதியை வாரி வாரி வழங்குவார்கள்.
ஹிந்திக்கும், சமஸ்கிருத மொழியின் வளர்ச்சிக்கும் அள்ளி, அள்ளிக் கொடுப் பார்கள். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளுக்கு கிள்ளிக் கொடுப்பார்கள்.
இரு மொழிக் கொள்கையை ஏற்று அமல்படுத்தி வரும் தமிழ்நாட்டில், ‘‘மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் உனக்கு நிதி கொடுப்பேன். இல்லையென்றால் கொடுக்க மாட்டேன். கொடுக்க முடியாது. எங்கள் கொள்கையை ஏற்று கையெழுத்து போடுகிறாயா? இல்லையா?’’ என்று பகிரங்கமாக ஒன்றிய அமைச்சர் அறிக்கை வெளியிடுகிறார்.வெளியிட்டது மட்டுமல்ல, தமிழ்நாட்டு ஆட்சியர்களுக்கு, பணியாளர்களுக்கு ஊதியம் போட முடியாமல் பட்டினிக்குத் தள்ளுகிறார்.
பகிரங்க வன்முறை!
மாநில அரசு பொறுப்பேற்று தன்னு டைய நிதியிலிருந்து, நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டிய கட்டாய நிலைக்கு உள்ளாக்குகிறார்கள்.
மதத்தின் பேராலும், சாதியின் பேராலும் நாட்டு மக்களை பிளவு படுத்துகிறார்கள். ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பகிரங்கமாக வன்முறையைத் தூண்டுகிறார்.
இவைகள் எல்லாம் எங்களுக்கு உபதேசம் செய்யும் ஏடுகளுக்கும், நபர் களுக்கும் தெரியவில்லையா? அல்லது தெரியாதது போன்று நடிக்கின்றார்களா? உண்மையில் தூங்குகிறவனை எழுப்பி விடலாம்.
தூங்குவது போல் நடிப்ப வர்களை ஒருபோதும் எழுப்பிட இயலாது.
வகுப்பு வாதத்திற்கு எதிரான போராட்டத்தில், பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில், ஜனநாயகத்திற்கான போராட்டத்தில், மாநில உரிமை களுக்கான போராட்டத்தில், மதச் சார்பின்மைக்கான போராட்டத்தில், தி.மு.க. தலைமை வழுவாமல் போராடுகிறது. ஆகவே, கொள்கை அடிப்படையில் தி.மு.க.வை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கிறது. இது தொடரும்,
சிண்டு முடிகிற வேலை!
பா.ஜ.க.வை எதிர்த்து தமிழ்நாட்டில் காலூன்ற முடியாமல் தடுக்கிற வலுவான கூட்டணி இனியும் தொடர்வதை எஜமானர்கள் விரும்ப வில்லை. எனவே, அந்தக் கூட்டணி உடைந்து சிதறப் போகிறது என்ற புதிய தோற்றத்தை உருவாக்கக் கடும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. எனவே, இந்த இரண்டு நிகழ்வுகள் மீது ஊடகங்கள் அதிக வெளிச்சத்தைப் பாய்ச்சுகின்றன. சிண்டு முடிகிற வேலையை செய்து பார்த்தவர்கள். தோற்றுப் போன கோபத்தில் புழுதி வாரி இறைக்கிறார்கள். இவர்களின் நோக்கம் தி.மு.க. தலைமையிலான கூட்டணி உடைந்து, சுக்கு நூறாக வேண்டும் என்பதாகும்.
அவ்வாறு ஏற்பட்டால் தங்களின் அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்கிற நப்பாசையுடன், நாக்கைத் தொங்க போட்டுக் கொண்டு அலையும் கூட்டமே!
உங்களின் குள்ளநரி தந்திரங்கள், கொள்கை உடையவரிடம் ஒருபோதும் வெற்றி பெறாது என்பது இன்று, நேற்று அல்ல, காலங்காலமாக உணர்த்திய பேருண்மை என்பதை மறந்து விட வேண்டாம்.
இவ்வாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செய லாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.