ஆட்டோ ஓட்டி விழிப்புணர்வை ஏற்படுத்திய அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Viduthalai
4 Min Read

அரசியல்

சென்னை, ஜூலை 29- ஆட்டோ பிரச்சாரம் மூலம் உடல் உறுப்பு கொடை, குருதிக்கொடை விழிப்புணர்வு மேற்கொண்டு வரும் நபரை ஊக்குவிக்கும் விதமாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவரது ஆட்டோவை இயக்கி வைத்து வாழ்த்து தெரிவித்தார்.

சென்னையைச் சேர்ந்தவர் குபேந்தரன். ஆட்டோ ஓட்டுநரான அவர், தனது வாகனத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, உறுப்பு கொடை விழிப்புணர்வை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, ஆட்டோவுக்குள் குடிநீர், சூழலியல் சார்ந்த நூல்கள், சுகாதாரம் சார்ந்த புத்தகங்கள், செடிகள் ஆகியவற்றை வைத்து பயணி களிடம் அதுதொடர்பான புரிதலை ஏற்படுத்தி வருகிறார்.

 இந்நிலையில், சென்னை, பசுமை வழிச் சாலையில் உள்ள மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியனின் இல்லத்துக்கு சென்ற அவர், தனது செயல்பாடுகளை அமைச்சரிடம் விளக்கிக் கூறினார். அதைக் கேட்டு குபேந்திரனை பாராட்டிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், அவரது ஆட்டோவை சிறிது தொலைவு ஓட்டிச் சென்று மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மேலும் குபேந்திரனுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

மாநகராட்சி மேயர், துணை மேயர், கவுன்சிலர்களுக்கு மதிப்பு ஊதியம்

சென்னை மாமன்ற கூட்டத்தில் அனுமதி

சென்னை, ஜூலை 29- சென்னை மாநகராட்சி மேயர், துணை மேயர், கவுன்சிலர்களுக்கு மதிப்பூதியம் வழங்கு வதற்கு பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையை சென்னை மாநகராட்சியில் அமல்படுத்த மாமன்ற கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில், துணை மேயர் மு.மகேஷ் குமார், மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் ரிப்பன் மாளிகையில் நடை பெற்றது. தமிழ்நாட்டில் மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள் உள்ளிட்டோர் முழுநேர மக்கள் பணியில் ஈடுபட்டு வருவதால், தங்களுக்கு மதிப்பூதியம் வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.

அதற்கு அரசும் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி மாநகராட்சி மேயர்களுக்கு மாதம்ரூ.30 ஆயிரம், துணை மேயர்களுக்கு ரூ.15 ஆயிரம், மாமன்ற உறுப்பினர்களுக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பூதியம் வழங்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. இதை சென்னை மாநகராட்சியில் நடைமுறைப்படுத்த, நேற்று (28.7.2023) நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 சென்னை மாநகராட்சியில் கல்வி, சுகாதாரம், பணிகள், வரிவிதிப்பு, நிதி, கணக்கு என 6நிலைக்குழு தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஆய்வு செய்ய ஏதுவாக ரூ.1 கோடியே 26 லட்சத்தில் 6 இன்னோவா கார்கள் வாங்கவும், ஓட்டுநர் செலவினமாக ஆண்டுக்கு ரூ.39 லட்சத்து 42 ஆயிரம், பெட்ரோல் செலவினமாக ரூ.13 லட்சத்து 53 ஆயிரம், பராமரிப்பு செலவுக்காக ரூ.4 லட்சத்து 38 ஆயிரம் செலவிடவும் அரசுக்கு முன்மொழிவு அனுப்ப மன்றத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

புளியந்தோப்பு அருகே ஸ்டீபன்சன் சாலையில் ஓட்டேரி நல்லா கால் வாயின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்துக்கு செங்கை சிவம் பாலம் என பெயரிட்டு அர சாணை பெறப்பட்டதற்கு மன்றத்தில் பின்னேற்பு அனுமதி வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் மொத்தம் 52 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விவசாயிகளுக்கான வேளாண் கடன் வழங்கல்

இந்தியன் வங்கியில் அதிகரிப்பு

சென்னை, ஜூலை 29- விவசாயிகளின் மேம்பாட்டிற் காக அவர்களுக்கு வழங்கப்படும் வேளாண் கடன்களை அதிகரித்துள்ளோம் என இந்தியன் வங்கியின் மேலாண்மை இயக்குநர் எஸ்.எல்.ஜெயின் தெரிவித் துள்ளார். இந்தியன் வங்கியின் 2023 ஜூன் 30 அன்று முடிவடைந்த காலாண்டுக்கான நிதி சார் முடிவுகளை சென்னையில் அதன் தலைமையகத்தில் 27.7.2023 அன்று அவர் வெளியிட்டு தெரிவித்திருப்பதாவது:

இந்தியன் வங்கியின் உலகளாவிய வணிகம் ரூ.11 லட்சம் கோடியை கடந்திருக்கிறது. நிகர இலாபம் முந்தைய ஆண்டை விட 41 சதவீதம் உயர்ந்திருக்கிறது. செயல்பாட்டு இலாபம் முந்தைய ஆண்டைவிட 16 சதவீதம் அதிகரித்திருக்கிறது. விவசாயம் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில்கள், வணிகம் ஆகியவற்றிற்கு வழங்கப்பட்ட கடன்கள் ஜூன் 2022இல்  ரூ.2,44,247 கோடி என்ற அளவிலிருந்து ஜூன் 2023இல் ரூ.2,76,435 கோடியாக உயர்ந்து 13 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

வேளாண்மை துறை வளர்ச்சிக்காக வழங்கப்படும் விவசாயக் கடன்கள் முந்தைய ஆண்டைவிட 16 சதவீத வளர்ச்சியையும், சிறு, குறு – நடுத்தர தொழில் துறைக்கான கடன்கள் 7 சதவீத வளர்ச்சியையும் பதிவு செய்திருக் கின்றன. 

முந்தைய ஆண்டைவிட வீட்டுக்கடன் 14 சதவீதம், ஆட்டோ மொபைலுக்கான கடன் 29 சதவீதம் மற்றும் தனி நபர் கடன் 52 சதவீதம் என வளர்ச்சி அதிகரித்திருக் கின்றன. வைப்புத் தொகைகள் முந்தைய ஆண்டைவிட 6 சதவீதம் உயர்ந்து ஜூன் 23இல் ரூ.6,21,539 கோடி என்ற அளவை எட்டியிருக்கின்றன என அவர் தெரிவித் துள்ளார்.

கட்டுமான தொழில் துறைக்கான விழிப்புணர்வு பிரச்சாரம்

சென்னை, ஜூலை 29- நகர்ப்புற வளர்ச்சியின் காரணமாக கட்டுமான திட்டங்கள் அதிகரித்துள்ளதால் அதற்குத் தேவையான டிஎம்டி கம்பிகளின் தரப் பரிசோதனையை அறிய “உண்மையை அறிவோம்” என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை தமிழ்நாட்டில் அடுத்த ஓர் ஆண்டுக்கு செய்ய ஏஆர்எஸ் ஸ்டீல்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக சுமார் 15 கோடி ரூபாய் முதலீட்டில், டிஎம்டி பார்களை சோதிக்க சிறப்பு ஜெர்மன் தொழில் நுட்பங் களுடன் நிறுவப்பட்டுள்ள 12 நடமாடும் தொழில்நுட்ப வாகனங்கள் மூலம் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்படும். தோராயமாக 2,780 கி.மீ. நீளமுள்ள சென்னை சாலைகளை ஏஆர்எஸ் தொழில்நுட்ப வாகனம் ஒரு மாதத்திற்குள் நிறைவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என இந்நிறுவன நிர்வாக இயக்குநர் அஷ்வினி குமார் பாட்டியா தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *