கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் 11 துணை மருத்துவப் படிப்புகள் தொடங்க அரசு அனுமதி அரசாணை வெளியீடு

2 Min Read

சென்னை, அக்.27- சென்னையில் கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையானது ரூ.230 கோடியில் தரை தளம் மற்றும் 6 மேல் தளங்களுடன் 51,429 சதுர மீட்டர் பரப்பளவில் 1,000 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இது கடந்த ஆண்டு ஜூன் 15ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. இந்த மருத்துவமனையில், துணை மருத்துவ படிப்புகள் (பாரா மெடிக்கல்) தொடங்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

சுகாதாரத்துறை செயலாளர் சுப்ரியா சாகு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது:
“2024-2025ஆம் கல்வியாண்டில் சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் 11 துணை மருத்துவ படிப்புகள் தொடங்க மருத்துவ கல்வி இயக்குநர் அனுமதி வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இக்கோரிக்கையை கவனமாக பரிசீலித்த அரசு, 8 சான்றிதழ் படிப்புகள், 2 டிப்ளமோ படிப்புகள், 1 பட்ட படிப்பு என 11 துணை மருத்துவ படிப்புகளை தொடங்க ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதன்படி, மயக்கவியல் நிபுணர், அறுவை கூடம் தொழில்நுட்ப உதவியாளர், டயாலிசிஸ் உதவி யாளர், அவசர சிகிச்சை உதவியாளர் உள்ளிட்ட சான்றிதழ் படிப்புகள், மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம், கதிரியக்கவியல் தொழில்நுட்பத்தில் டிப்ளமோ படிப்புகள், பி.எஸ்சி. நியூரோ எலக்ட்ரோபிசியாலஜி ஆகிய பட்ட படிப்பும் தொடங்கப்பட உள்ளன.

இதில் சான்றிதழ் படிப்புகளுக்கு ஓராண்டு படிப்புடன் 3 மாத பயிற்சியும், டிப்ளமோ படிப்புகளுக்கு 2 ஆண்டு படிப்புடன் 3 மாத இன்டர்ன்ஷிப் பயிற்சியும், பட்டப் படிப்புக்கு 3 ஆண்டுகளுடன் 1 ஆண்டு பயிற்சி யுடன் இந்த படிப்புகள் வழங்கப்பட உள்ளன.
சான்றிதழ் படிப்பு ஒன்றுக்கு 20 இடங்களும், டிப்ளமோ 20, பட்டப் படிப்பு 5 என மொத்தம் 195 இடங்கள் உள்ளன. இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவ மனை இயக்குநர் பார்த்தசாரதி கூறுகையில், எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் அரசு ஒதுக்கீட்டு இடங் களில் மாணவர்கள் படிப்பதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.

குறைந்த மதிப்பெண் எடுத்து மருத்துவ படிப்பில் சேர முடியாத பல மாணவ-மாணவிகள் இதனால் பயன்பெறுவார்கள். தமிழ்நாட்டில் ஏற்கெனவே இருக்கும் துணை மருத்துவ படிப்புகளுக்கான இடங்களில் கூடுதலாக தற்போது நமக்கு 195 இடங்கள் கிடைத்துள்ளன. வருகிற டிசம்பர் மாதம் இதற்கான விண்ணப்ப பதிவு தொடங்கப்படும் என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *