தமிழ்நாட்டில் நவ.1-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இல்லை

Viduthalai
1 Min Read

வானிலை ஆய்வு மய்யம் உறுதி

சென்னை, அக்.27 தமிழ்நாட்டில் நவ. 1-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் கூறியதாவது: தென் தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமாக உள்ளது. இதனால் தென் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழ்நாட்டில் சில இடங்களிலும் மழை பெய்துள்ளது. அக். 26-ஆம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நாமக்கல், மதுரை மாவட்டம் சிட்டம்பட்டி ஆகிய இடங்களில் 11 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், மதுரை மாவட்டம் இடையப்பட்டி, உசிலம்பட்டியில் 9 செ.மீ., மதுரை மாவட்டம் சோழவந்தான், குப்பணம்பட்டி, கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

வங்கக் கடலில் வலுப்பெற்ற டானா புயல் கரையைக் கடந்தாலும், முழுவதுமாக வலுவிழக்காமல், நிலப் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவுகிறது. இதனால், மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் இருந்து வறண்ட காற்று வீசுகிறது. எனவே, தமிழ்நாட்டில் நவ. 1-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பில்லை. அதன் பிறகே மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

தமிழ்நாட்டின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் வரும் 30-ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், அக். 31, நவ. 1-ஆம் தேதிகளில் சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழ்நாடு கடலோரப் பகுதிகளுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *