ஒன்றிய பிஜேபி அரசும் தமிழ்நாட்டின் ‘திராவிட மாடல்’ அரசும்!

Viduthalai
3 Min Read

இந்தியாவில் 6 மாதம் முதல் 23 மாதம் வரையிலான குழந்தைகளில் 77 விழுக்காடு பேருக்கு உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்தபடி சரிவிகித உணவு கிடைப்பதில்லை என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மகாராட்டிரம், மத்தியப் பிரதேசம் ஆகிய மத்திய மாநிலங்களில் இந்த அளவு 80 சதவீதத்துக்கு மேலாகவும் சிக்கிம், மேகாலயம் ஆகிய 2 வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் 50 சதவீதத்துக்கு குறைவாகவும் பதிவாகியுள்ளது.

குழந்தைகளுக்கு தரப்படும் உணவின் தரத்தை மதிப்பிடுவதற்கு குறைந்தபட்ச உணவுப் பன்முகத்தன்மை புள்ளிகளைப் பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது. தாய்ப்பால், முட்டை, பருப்பு வகைகள், பழங்கள் மற்றும் காய்கறிகள் உள்பட அய்ந்து அல்லது அதற்கும் மேற்பட்ட வகைகளில் உணவளிக்க உலக சுகாதார அமைப்பு வலியுறுத்துகிறது.

இந்தியாவில் இதன் தாக்கத்தைக் கண்டறிய கடந்த 2005-2006-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட 3-ஆவது தேசிய குடும்பம் மற்றும் சுகாதார ஆய்வுடன் 2019-2021-ஆம் ஆண்டின் 5-ஆவது தேசிய குடும்பம் மற்றும் சுகாதார ஆய்வின் தரவுகளை ஒப்பிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தைச் சோ்ந்தவா்கள் உள்பட பல்வேறு ஆராய்ச்சியாளா்கள் நடத்திய இந்த ஆய்வின் முடிவுகள் இந்திய தேசிய மருத்துவ இதழில் ஆய்வறிக்கையாக வெளியாகியுள்ளன.

இந்தியாவில் குறைந்தபட்ச உணவுப் பன்முகத்தன்மை தோல்வியின் விகிதம் 2019-2021-ஆம் ஆண்டில் 75 விழுக்காட்டிற்கு மேல் உள்ளது. 2005-2006-ஆம் ஆண்டின் 87.4 விழுக்காட்டில் இருந்து சிறது குறைந்திருந்தாலும் உலக சுகாதார அமைப்பின் தரநிலையில் இது தோல்வியாகும்.
அதேபோல, 2005-2006 மற்றும் 2019-2021-ஆம் ஆண்டு தரவுகளை ஒப்பிட்டு, புரதங்கள் மற்றும் வைட்டமின்கள் போன்ற பல்வேறு உணவுக் குழுக்களில் குழந்தைகளின் உணவுப் பழக்கங்களும் ஆய்வு செய்யப்பட்டன.

முட்டைகளின் நுகர்வு கடந்த 2005-2006-ஆம் ஆண்டின் சுமார் 5 விழுக்காட்டில் இருந்து 2019-2021-இல் 17 விழுக்காட்டிக்கு மேல் உயா்ந்துள்ளது. பருப்பு வகைகளின் நுகர்வு 2005-2006-ஆம் ஆண்டின் 14 விழுக்காட்டிலிருந்து 17 சதவீதம் வரை மட்டுமே அதிகரித்துள்ளது.

‘வைட்டமின் ஏ’ நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளின் நுகா்வு 7.3 சதவீதமும், பிற பழங்கள் மற்றும் காய்கறிகளின் நுகர்வு 13 சதவீதமும் இறைச்சி நுகா்வு 4 சதவீதமும் அதிகரித்துள்ளது. அதேசமயம், தாய்ப்பால் நுகர்வு 87 சதவீதத்திலிருந்து 85 சதவீதமாகவும் பால்பொருள்களின் நுகர்வு 54 சதவீதத்திலிருந்து 52 சதவீதமாகவும் குறைந்துள்ளது.

கிராமப்புறங்களில் வசிக்கும் கல்வியறிவு இல்லாத தாய்மார்களின் குழந்தைகளும் – ரத்த சோகையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளும் குறைந்த எடை கொண்ட குழந்தைகளும்தான் சரிவிகித உணவை சாப்பிடுவதில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. குழந்தைகளின் உணவில் போதிய ஊட்டச்சத்தை உறுதிப்படுத்த மேம்படுத்தப்பட்ட பொது விநியோக முறை, தீவிரப்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி சேவைகள் திட்டம், சமூக ஊடகங்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகம் மூலம் ஊட்டச்சத்து ஆலோசனை உள்ளிட்ட விரிவான அணுகுமுறையை அரசு பின்பற்ற வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
உலக நாடுகளின் பட்டினி வரிசையில் 105ஆவது இடத்தில் இந்தியா இருக்கிறது. மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது 55ஆம் இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் வறுமைக் கோடுக்கு கீழே இருப்போர் 80 கோடி பேர் என்று ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது இந்த இடத்தில் நினைவூட்டப்பட வேண்டிய ஒன்று. (‘தினமணி’ 23.9.2024 பக்கம் 12)
மூன்றாவது முறையாக ஆட்சி நடத்தும் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி எந்த அளவுக்கு மக்கள் வளர்ச்சிக் குறியீட்டில் வீழ்ச்சி அடைந்திருக்கிறது என்பதற்கு இந்த புள்ளி விவரங்களே சாட்சி.
ஒரு மாநில அரசு என்ற முறையில் தமிழ்நாடு ‘திராவிட மாடல்’ என்ற பெருமையுடன் நாள்தோறும் வளர்ச்சித் திசையில் ஏறுநடை போடுகிறது என்பதையும் ஒப்பிட்டுப் பார்த்தால், எது வளர்ச்சி, எது வீழ்ச்சி என்பது எளிதில் விளங்கும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *