எலிகள் உள்ளிட்ட கொறித்துண்ணி களுக்கு மோப்ப சக்தி மிக அதிகம். எலிப் பொறிகளிலே உணவு வைக்கும்போது, அதை தன்னுடைய மோப்பத்தினாலே கண்டுகொண்டு எலிகள் மாட்டிக் கொள்ளும். இவற்றிற்கு எப்படி இவ்வளவு தீவிரமான மோப்ப ஆற்றல் இருக்கிறது என்று நீண்ட காலமாக விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்
அமெரிக்காவின் நியூயார்க்கைச் சேர்ந்த பபல்லோ பல்கலை. மேற்கொண்ட ஆய்வில் எலிகள் மனிதர்களால் கேட்க முடியாத அல்ட்ராசோனிக் ஒலிகளை உருவாக்குவது தெரிய வந்துள்ளது.
இதற்கு முன்புவரை அவை இந்த ஒலிகளை உருவாக்குவது தங்களுக் குள்ளே தகவல் தொடர்பு செய்வதற்குத் தான் என்று நம்பப்பட்டு வந்தது.
குறிப்பாக இனப்பெருக்கம் செய்கின்ற எலிகள் தங்களது இணையைக் கவர்வதற்கு இந்த ஒலியைப் பயன்படுத்து கின்றன என்று அறியப்பட்டு வந்தது.
ஆனால், சமீபத்திய ஆய்வில் இந்த ஒலிகளுக்கு மேலும் ஒரு பயன் இருப்பது தெரியவந்துள்ளது. எலிகள் இந்த ஒலியை ஏற்படுத்துவதன் வாயிலாக, தன்னைச் சுற்றி இருக்கின்ற காற்றில் அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன.
இந்த அதிர்வுகள் இன்னும் கூர்மையாக வாசத்தை அறிந்துகொள்ள உதவுகின்றன. எலிகளின் மோப்ப சக்தி இவ்வளவு பலமாக இருப்பதற்கு இந்த ஒலிகளும் காரணம் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.