நமது சூரியக் குடும்பத்திலேயே மிகப்பெரிய கோள், வியாழன். அதில் பூமியில் வீசுவது போல பல மடங்கு வேகமாக புயல் வீசுகிறது என்று அறிவியல்பூர்வமாக சொல்லப்படுகிறது. இந்தப் புயலானது ஒரு சூறாவளியைப் போல ஒரே இடத்தில் நிலைகொண்டு இருக்கும் என்று நம்பப்பட்டு வந்தது. ஆனால், சமீபத்திய ஆய்வில் இந்தப் புயலானது நகர்வது தெரியவந்துள்ளது.
நாசாவின் ‘ஹப்பிள்’ தொலைநோக்கி அனுப்பிய புகைப்படங்கள் வாயிலாக விஞ்ஞானிகள் இதை உறுதி செய்தனர். நாம் சாப்பிடுகின்ற ஜெல்லியை ஒரு கிண்ணத்தில் வைத்து லேசாக ஆட்டினால் எப்படி அதனுடைய மேற்பரப்பு முன்பின்னாக நகருமோ அதுபோல இந்தப் புயலும் அவ்வப் போது நகர்ந்து வருவது தெரிய வந்துள்ளது.
டிசம்பர் 2023ஆம் ஆண்டிலிருந்து மார்ச் 2024ஆம் ஆண்டு வரை 90 நாட்கள் தொடர்ந்து இந்தப் புயலை விஞ்ஞானிகள் கண்காணித்து வந்தனர். அப்போதுதான் இந்தப் புயலின் மய்யம் லேசாக வடக்கு நோக்கியும் தெற்கு நோக்கியும் அவ்வப்போது நகர்வது தெரிய வந்தது. இந்தப் புதிய கண்டுபிடிப்பானது, வியாழன் கோளைப் பற்றி ஆழமாக அறிந்துகொள்ள உதவும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து.