மதுரை, அக். 24- தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் தேசிய மாணவர் படை (என்சிசி) இயக்குநரகம், புதுடில்லியில் நடைபெறும் குடியரசு நாள் அணிவகுப்பு 2025 இல் பங்கேற்க சிறந்த கேடட்களின் குழுவை அனுப்பத் தயாராகி வருகிறது. இதற்குத் தகுதியான மாணவர்களைத் தேர்வு செய்ய, தேசிய மாணவர் படை இயக்குநரகம், ஒவ்வொரு ஆண்டும், தேசிய மாணவர் படை குழுமத் தலைமையகங்களான சென்னை ‘A’ மற்றும் ‘B’, திருச்சி, கோவை, புதுச்சேரி மற்றும் மதுரை உள்ளிட்ட 100 பேர் கொண்ட குழுக்களுக்கு இடையேயான போட்டிகளையும் பயிற்சிகளையும் நடத்துகிறது.
இதன் ஒரு பகுதியாக, மதுரை இடையப்பட்டியில் உள்ள தேசிய மாணவர் படையினர் பயிற்சி மய்யத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான குழுப் போட்டியின் மூலம் தமிழ்நாடு முழுவதும் என்சிசி கேடட்கள் தேர்வு செய்யப்படுவதற்கான 4ஆவது பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.
இந்த முகாமில், திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவி, செல்வி.எஸ்.பி.ரித்தன்யா பங்கு கொண்டு, சிறந்த மாணவருக்கு வழங்கப்படும் வெள்ளிப் பதக்கம் வென்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளார். இவர் ஏற்கனவே நடத்தப்பட்ட 3 முகாம்களிலும் சிறப்பிடம் பெற்று, இந்த 4வது முகாமில் வெள்ளிப் பதக்கம் வென்றதோடு, 5ஆவது முகாமில் பங்கேற்க, திருச்சி மண்டல தேசிய மாணவர் படை மாணவர்களில் நேரடியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் தேசிய மாணவர் படையின், திருச்சி மண்டல அள விலான பள்ளிகளின் தரவரிசைப் பட்டியலில் அய்ந்தாம் இடத்திற்கு முன்னேறி, திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மகத்தான சாதனை படைத்துள்ளது.
பள்ளியின் பெருமைக்குக் காரணமான மாணவி.எஸ்.பி.ரித்தன்யாவை பள்ளியின் தாளாளர், முதல்வர் உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் பணித் தோழர்கள் பாராட்டி மகிழ்ந்தனர்.