மகளிர் உரிமைத் தொகை: விடுபட்டவர்களுக்கு நல்ல செய்தி

viduthalai
3 Min Read

திண்டுக்கல், அக்.24- பெண்களின் சுயமரியாதை காக்கப்பட வேண்டும், அவர்களது உழைப்புக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை மூலம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சுமார் ஒரு கோடியே 16 லட்சம் பேர் பயன்பெற்று வரும் இந்த திட்டத்தில் மேலும் பயனாளர்கள் இணைக்கப்பட உள்ளனர்.

தமிழ்நாடு அரசு 2023 செப்டம்பர் மாதம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி செயல்படுத்தி வருகிறது. முதலில் ஒரு கோடி பயனாளர்களை இலக்காகக் கொண்டு பொருளாதாரத் தகுதிகள் வரையறுக்கப்பட்டன.

ஆனால், ஒரு கோடிக்கும் அதிகமானோர் அரசு அறிவித்த பொருளாதாரத் தகுதிப் பட்டியலுக்குள் வந்தனர். தகுதி வாய்ந்த அத்தனை மகளிருக்கும் மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

முதல் கட்டமாக ஒரு கோடியே 6 லட்சத்து 52 ஆயிரம் பேருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டது. நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் மேல்முறையீடு செய்த நிலையில் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு தொடர்ந்து பயனாளர்களின் எண் ணிக்கை அதிகரிக்கப்பட்டு வந்தது. சுமார் ஒரு கோடியே 15 லட்சம் பயனாளர்கள் இணைக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் ஒரு லட்சத்து 48 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்டனர்.

தற்போது ஒரு கோடியே 16 லட்சம் பேர் பயனாளர்களாக இணைக்கப்பட்டுள்ள போதிலும் பலர் இன்னும் திட்டத்தில் இணையாமல் உள்ளனர். 2 கோடியே 24 லட்சத்துக்கும் அதிகமான குடும்ப அட்டைகள் உள்ள நிலையில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் திட்டத்தில் இணைய முடியாமல் உள்ளனர். மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்ப பதிவு முகாமை மீண்டும் நடத்த வேண்டும், பொருளாதார தகுதியில் தளர்வுகளை அறிவிக்க வேண்டும் என்று தொடர்ந்து மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வசம் உள்ள சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனாளர்களை இணைப்பது தொடர்பாக அவர் தற்போது தொடர்ந்து பேசி வருகிறார். திண்டுக்கல் நடைபெற்ற திருமண விழாவிலும் இது தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அப்போது பேசிய அவர், “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தேர்தல் நேரத்தில் நம் தலைவர் அவர்கள் அறிவித்த திட்டம். எதிர்கட்சிகள் எல்லாம் இந்த திட்டத்தை நடத்த முடியாது, வாய்ப்பே இல்லை என்று கூறினர். ஆனால் அந்த திட்டத்தை கடும் நிதிநெருக்கடிக்கு இடையே நம்முடைய தலைவர் அவர்கள் சென்ற செப்டம்பர் 15-ஆம் தேதி அண்ணா பிறந்தநாளில் அறிவித்து, செயல்படுத்தி யுள்ளார்கள். ஒரு கோடியே 16 லட்சம் மகளிர் இந்த திட்டத்தின் வாயிலாக ஓராண்டுக்கு மேல் மாதம் ரூ.1,000 பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். விடு பட்ட சிலருக்கும் கலைஞர் உரிமைத் திட்டத்தின் கீழ், நிச்சயம் உரிமைத்தொகை வழங்க முதலமைச்சர் அவர்கள் மூலம் நடவடிக்கை எடுப்போம் என்று உறுதி கூறுகிறேன்” என்று பேசினார்.

உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்றுள்ள நிலையில் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கி றார்கள். சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தல்களில் திமுகவுக்கு பெரிய வெற்றி கிடைத்ததற்கு இந்த திட்டம் முக்கிய காரணம்.

அந்த வகையில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வர உள்ள நிலையில் அதற்கு முன்பாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விரிவாக்கம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள், நிராகரிக்கப்பட்டவர்கள், புதிய குடும்ப அட்டை பெற்றவர்கள் என பலரும் பயனடையும் வகையில் அந்த அறிவிப்பு அமையும் என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *