2024-லும் ‘ராம் லீலாவா?’

viduthalai
8 Min Read

“தசரா பண்டிகை” என்ற பெயரில் ஆண்டுதோறும் டில்லி ராம்லீலா மைதானத்தில் திராவிட வீரன் இராவணன் உருவத்தைக் கொளுத்துகின்றனர்.

ஞாயிறு மலர்

மதச்சார்பற்ற அரசின் காவலர்கள் என்று கூறிக்கொள்ளும் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்பட உயர்மட்ட அதிகாரிகள் தத்தம் குடும்பங்களுடன் அமர்ந்து அதனை ரசிக்கின்றனர்.

ராமாயணம் என்பது ஆரியர் திராவிடர் போராட்டமே என்று வரலாற்று ஆசிரியர்களே கூறுகின்றனர்.

இராமாயணக் கதையின் உட்பொருள் என்னவென்றால் ஆரிய நாகரிகத்திற்கும், ஆரியரல்லாதார் நாகரிகத்திற்கும் (அவர்களின் தலைவர்களான இராமன், இராவணன் ஆகியவர்களால்) நடத்தப்பட்டதாகும் என்கிறார் வரலாற்று ஆசிரியர் ராதாகுமுத முகர்ஜி (‘இந்து நாகரிகம்’, பக்கம் 141)

“இராமாயணமும், மகாபாரதமும் இந்தோ ஆரியர் காலத்தையும் அவர்களுடைய வெற்றிகளையும், உள்நாட்டுச் சண்டைகளையும் பற்றிக் கூறுவதாகும். இவை உண்மையென்று நான் நம்பவே இல்லை. “பஞ்ச தந்திரம்”, “அராபியன் நைட்” முதலிய கற்பனைக் கதைகளைப் போன்றவை என்பதே என் கருத்து!

(ஜவகர்லால் நேரு எழுதிய “டிஸ்கவரி ஆஃப் இந்தியா” பக்கம் 76- 77)

உண்மையும் – ஒப்பனையும்
திராவிட மாடல் நாகரிகம்

ஞாயிறு மலர்

ஆரிய மாடல் நடிப்பு

ஞாயிறு மலர்

“ஆரியரின் இத்தகைய வெறியாட்டு வேள்விகளை அழித்துவந்த சூரன் இராவணன் முதலான நிகரற்ற தமிழ் வேந்தர்களே ஆரியர்களால் அரக்கர் என்று இகழ்ந்து பேசப்படுவராயினர்.”

(மறைமலை அடிகள் “வேளாளர் நாகரிகம்”, பக்கம் 69)

“புராணங்களும் – இதிகாசங்களும் மக்களின் மெய்ச் சரித்திரமல்ல. இன்று மக்கள் வரலாற்றை அறிவதற்கோ, சரித்திர உண்மைகளை அறிவதற்கோ ஆதாரமாக இல்லை. இவை வெறும் மத இலக்கியத் தொகுப்புகளே!”

(கே.எம்.முன்ஷி எழுதிய “இந்திய மக்களின் கலாச்சாரமும் வரலாறும்” பக்கம் 8)

உண்மைகள் இவ்வாறு இருக்க மதச்சார்பின்மையைக் கடைப்பிடிக்க வேண்டியவர்கள், வரலாற்றின் உண்மைப் போக்கை உணர வேண்டிய மிகப் பெரிய பொறுப்புகளில் இருக்கக் கூடியவர்களே குடும்பத்தாருடன், “ராம்லீலா” என்ற பெயரில் இராவணனை எரிப்பதை விழாவாகக் கொண்டாடுவதும், கைதட்டி இரசிப்பதும் இரங்கத்தக்கது என்பதா? படிப்பிருந்தும், பார்ப்பனத்தனம் தலைக்கேறியது என்பதால் பார்த்து மகிழ்வது என்பதும் பாராட்டத்தக்கதல்ல – பகைமையை வளர்க்கக் கூடியதாகும்.

ஆரியர்கள் ஒன்று கூடி திராவிட வீரன் இராவணனை எரிப்பது என்றால், வரலாற்றின் நெடும் போக்கில் நடந்து வரும் ஆரிய திராவிடப் போராட்டத்தைப் புதுப்பிப்பது என்பதல்லாமல் வேறு புடலங்காய் இதில் என்ன இருக்கிறது?

இந்த நிலையில் தந்தை பெரியார்தான் ஆரியப் பார்ப் பனர்களின் போக்கிற்குப் பாடம் கற்பபிக்கும் வகையிலும் சூத்திரர் களாக்கப்பட்ட திராவிடர்களுக்கு சுயமரியாதை உணர்வினை ஊட்டவும் இராமாயணம் பற்றி – அதன் பாத்திரங்கள் பற்றி தெருவெல்லாம் மக்கள் கடல் முன் ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டி சந்தி சிரிக்கச் செய்தார்.

ஞாயிறு மலர்

தந்தை பெரியாரால் எழுதப்பட்ட “இராமாயணப் பாத்திரங்கள்” பல பதிப்புகள் வெளிவந்துவிட்டன. ஹிந்தி மொழியில் “சச்சு இராமாயண்” என்று வெளி வந்தது. உத்தரப்பிரதேச அரசு தடை செய்த நிலையிலும், அலகாபாத் உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தடை செல்லாது என்று ஓங்கி அடித்துத் தீர்ப்பு வழங்கின.

“Ramayana A True Reading” – என்று ஆங்கிலப் பதிப்பும் வெளிவந்தது. தற்போது தந்தை பெரியாரின் “இராமாயணப் பாத்திரங்கள்” என்ற நூல் வங்க மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டு நூலாக வெளிவந்துவிட்டது.

ஆனாலும், பார்ப்பனர்களின் மூர்க்க இனவெறித்தனத்தின் அடையாளமாக தசரா விழா என்ற பெயரில் “ராம் லீலா” நடத்தி திராவிட வீரன் இராவணனின் உருவப் பொம்மையை கொளுத்தும் அநாகரிகமான விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஞாயிறு மலர்

இப்படியெல்லாம் செய்வதன் மூலம் நாட்டு மக்களின் ஒரு பிரிவினரை இழிவுபடுத்துவதாக அமையாதா? தேச ஒற்றுமையைப் பற்றி வாய்கிழியப் பேசுபவர்கள் தங்களை அறியாமலேயே அதைச் சிதைப்பதைப் பற்றிக் கவலைப்படவில்லையா? அந்த அளவுக்கு அறிவு வேலை செய்யவில்லையா?

இல்லை – அந்த இன வெறுப்புக் கொடுந்தீ இன்னும் அவர்களின் உள்ளத்தில் இருக்கத்தான் செய்கிறது என்றுதான் புரிந்து கொள்ள வேண்டும்.
இதை எப்படி நம்மால் கடந்துபோக முடியும்? ஓர் இனத்தின் சுயமரியதையை, சூறையாடத் தொடை தட்டுகிறார்கள் என்ற நிலை வரும்போது சுயமரியாதை இயக்கம் தோன்றிய மண் சும்மா இருப்பதே சுகம் என்று சாய்வு நாற்காலியில் சாய்ந்து இருக்க முடியுமா?

அந்த நிலையில்தான் தந்தை பெரியார் ராமன் பட எரிப்புப் போராட்டத்தை நடத்தினார். (நமது கடலூர் வீரமணி என்று அழைக்கப்பட்டவர்தாம் 23ஆம் வயதில் முதல் கைது).

வால்மீகி இராமாயணத்திலே ராமன் மது அருந்தினான், மாமிசம் சாப்பிட்டான் என்ற உண்மைகளை மக்கள் மத்தியிலே படம் பிடித்துக் காட்ட அதே பேரணிகளில் வேடம் அணிந்து விளக்கப்பட்டது. நடிகவேள் எம்.ஆர்.இராதா ‘இராமாயணம்’ நாடகத்தை நாடெங்கும் நடத்தி, புத்துணர்ச்சியைக் கிளப்பினார். ‘கீமாயணம்’ என்று அமைச்சர் சி.சுப்பிரமணியம் தமிழ்நாடு சட்டப்பேரவை யிலேயே பேசியது அவருடைய அறியாமையே! (வால்மீகி இராமாயணத்தை, தான் படித்ததில்லை என்றும் கூறியதுதான் படு தமாஷ்!)

தந்தை பெரியார் மறைந்த முதல் ஆண்டு நினைவு நாளையடுத்து (25.12.1974) சென்னைப் பெரியார் திடலில் பல்லாயிரக்கணக்கான மக்களின் கோடையிடி, முழக்கத்திற் கிடையே இராவண லீலா நடத்தி, ராமன், சீதை, இலட்சுமணன் உருவப் பொம்மைகளை எரித்தார் எம் அன்னை மணியம்மையார்.

வழக்குத் தொடுக்கப் பட்டது. சென்னை எழும்பூர் அய்ந்தாவது மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்டிரேட் திரு.பஞ்சாட்சரத்தால் ‘இராவண லீலா’வை நடத்தியவர்கள் என்ற முறையில் 6 மாதத் தண்டனை அல்லது ரூ. 700 அபராதம் விதிக்கப்பட்டது. (9.9.1976 – நெருக்கடி காலம் என்பது முக்கியமானது). விடவில்லை அன்னையார் – மேல்முறையீடு செய்யப்பட்டது. செஷன்ஸ் நீதிபதி எஸ்.சோமசுந்தரம் மாஜிஸ்டிரேட் தீர்ப்பைத் தள்ளுபடி செய்தார்.

தந்தை பெரியார் மூடப் பழக்க வழக்கங்களை எதிர்த்து வந்திருக்கிறார். காலங்கள் தோறும் கருத்துகள் மாறிக் கொண்டு தானிருக்கும்.

‘இராவண லீலா’ என்பதை அந்த வகையில்தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறி, அனைவரையும் விடுதலை செய்தார்.
இந்த இடத்தில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். மத அடிப்படையில் ராமன் – விஷ்ணுவின் அவதாரம் – அத்தகைய ஒருவரின் உருவத்தைக் கொளுத்துவது இந்து மக்களின் மனம் புண்படும் என்ற விவாதத்தை ஏற்றுக் கொள்வதானால், இராவணனை இராவணீஸ்வரன் என்றும், தங்களின் குல தெய்வம் என்றும், இராவணனுக்கு கோயில் கட்டி வழிபடுபவர்கள் வட மாநிலங்களில் இருக்கிறார்களே!

தசரா விழாவில் ‘ராம் லீலா’ என்ற பெயரில் ராவணனின் உருவத்தை ஆண்டுதோறும் எரிக்கிறார்களே, அப்படியானால் இராவணனைக் குல தெய்வ மாக வழிபடுவோரின் மனம் புண்படாதா என்ற கேள்வி எழத்தானே செய்யும். இராமனை வழிபடு பவர்களுக்குத்தான் மனம் உண்டு, இராவணனை வழிபடு பவர்களுக்கு மனம் என்ற ஒன்று கிடையாது என்ற சொல்லப் போகிறார்களா?
இதோ சில எடுத்துக்காட்டுகள் – மக்களின் சிந்தனைத் தீணிக்கு!

ராவணனை எரிக்கக் கூடாது!
உ.பி. தாழ்த்தப்பட்டவர்கள் எதிர்ப்பு ஊர்வலம்

ராவணனின் உருவ பொம்மையை எரிக்கக் கூடாது என்ற கோரிக்கையுடன் உத்தரப்பிரதேச மாநிலம். கான்பூரில் ஆயிரக்கணக்கான தலித்துகள் ஊர்வலம் நடத்தி யுள்ளனர். ‘தசரா’ கொண்டாட்டத்தின்போது, ராவணன் உருவப் பொம்மையை எரிக்கும் நிகழ்வு நாடு முழுவதும் நடைபெறுகிறது. ஆனால், ராவணனை எரிக்கக் கூடாது என்ற தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துபவர்களும் உள்ளனர்.

இமாச்சலப் பிரதேசத்தின் காங்ரா மாவட்டத்தில் உள்ள பைஜ்நாத் என்ற இடத்தில் ராவணனை வணங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த பைஜ்நாத் நகரமும் இந்துக்களின் புண்ணியத் தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதேபோல் கான்பூரில் ராவண மேளா நடத்தியுள்ளனர்.
திருவிழாக் கோலம் பூண்டிருந்த அப்பகுதியில் ஆயிரக் கணக்கான தலித்துகள் வந்திருந்து கொண்டாடினர். ஒவ்வொரு ஆண்டும் இவ்வாறு எரிப்பது தலித்துகளைப் புண்படுத்துகிறது என்று இந்த மேளாவை ஏற்பாடு செய்திருந்த தொண்டு நிறுவனத்தின் தலைவர் தனிராம் பவுத் கூறியுள்ளார். கடந்த பத்து ஆண்டுகளாக இந்த ராவண மேளா கான்பூரில் நடைபெற்று வருகிறது. ( ‘தீக்கதிர்’ 30.9.2009, பக்.8)

இதற்கு என்ன பதில் இராம பக்தர்களே?
ராம்லீலா நடத்தி ராவணனை வதைப்பதா?

உத்தரப்பிரதேச கிராமத்தில் ராவணனுக்கு பூஜை

நாடு முழுவதும் தசரா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியான ராவண வதம் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பிஸ்ராக் [Bisrakh] என்ற கிராமம் மட்டும் ஒவ்வொரு வருடமும் ராவணனின் இறப்புக்கு துக்கம் அனுசரிக்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளது. ராமாயணக் கதைப்படி ராவணன் தீய சக்தியாக சித்தரிக்கப் பட்டு அவரின் பொம்மையை தசராவின்போது எரித்து கொண்டாடுவது வடமாநிலங்களில் வழக்கமாக உள்ளது. மாறாக இந்த பிஸ்ராக் கிராமத்தில் ராவணன் ஆத்மா சாந்தியடைவதற்காகப் பூஜைகள் நடத்தப்படுகிறது.

ராவணன் தங்களின் பிஸ்ராக் கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் தாங்கள் அனைவரும் ராவணனின் வழித்தோன்றல்கள் என்றும் இம்மக்கள் நம்புகின்றனர். எனவே தங்களின் மூதாதையான ராவணனின் புத்திக்கூர்மையையும், கடவுள் சிவன் மீது அவர் வைத்திருந்த பக்தியையும் போற்றுகின்றனர்.

ராம்லீலா நிகழ்ச்சிகளைக் கொண்டாடுவது தங்களின் கிராமத்துக்கு ‘துரதிர்ஷ்டத்தை’ வரவழைக்கும் என்று இவர்கள் நம்புகின்றனர். இந்த கிராமத்தில் சிவன்கோவிலில் உள்ள லிங்கம் முற்காலத்தில் ராவணன் மற்றும் அவரது தந்தையால் வழிபடப்பட்டது என்று இவர்கள் கருதுகின்றனர். இவர்களை போல ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே உள்ள மந்தோர் கிரமத்தில் ராவணன் மூதாதையாக கருதப்பட்டு அம்மக்களால் வழிபடப்பட்டு வருகின்றனர்.

தற்போது தங்கள் மூதாதை ராவணனுக்காகக் கோவில் கட்டவும் இவர்கள் திட்டமிட்டுள்ளனர். கதைப்படி ராவணன் இலங்கையைச் சேர்ந்தவர் என்று பொதுவாகக் கூறப்பட்டாலும், வெவ்வேறு பகுதிகளில் ராமாயணம் வெவ்வேறு வகையாகப் புழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. உத்தரப்பிரதேசத்தின் கான்பூர், மத்திய பிரதேசத்தின் விதிஷா மாவட்டம், கருநாடகாவின் மாண்டியா மாவட்டம் ஆகியவற்றில் ராவணனுக்குக் கோவில் உள்ளது குறிப் பிடத்தக்கது. உத்தரகாண்டில் உள்ள பாகேஷ்வர் நகரில் பார்ப்பனர் அமைப்பு ராவணனுக்கு திதி கொடுக்க அழைப்பு விடுத்துள்ளது.

ஹிந்தியில் எழுதப்பட்ட பதாகையில் குறிப்பிடப்பட்டுள்ள தாவது: நான்கு வேதங்களின் தலைவருக்கு ஒப்பானவர் பிராமணர். மூன்று உலகையும் ஆண்ட பண்டிதன், சிவபக்தர்களுக்கு எல்லாம் தலைவன், லங்காகோஷ் (இலங்கைக்கு தலைவர்) தஷானான் பத்து தலை பண்டிதர். ராவணன் புண்ணிய திதி நடக்க உள்ளது என்று எழுதி உள்ளார்கள். இந்தியாவில் எத்தனை எத்தனையோ இராமாயணங்கள் உண்டு. வங்காள இராமாயணத்தில் ராவணன் மகள் சீதை என்று உள்ளது. ‘இலங்கேஸ்வரன்’ என்ற நாடகம் அந்த அடிப்படையில், ஆயிரக்கணக்கான மேடைகளில் இந்நாடகத்தை அரங்கேற்றினார் நடிகர் ஆர்.எஸ்.மனோகர்.

இராமாயணம் நடந்த கதையா?

இராமாயணமும், பாரதமும் கற்பனைக் காப்பியங்கள் என்றால் நம்மீது சினம் கொள்கிறார்கள். அப்படிப்பட்ட போர் நடந்தது என்று காட்ட எந்த வரலாற்றுத்துறை அறிஞராலும் இயலாது என்று சொன்னால் கோபம் கொள்கிறார்கள். நாம் கொடுக்கும் ஆதாரங்களை வேண்டுமானால் மறுத்துப் பேசட்டும். ஆரியத்தின் ஏடு ‘ஆனந்த விகடன்’, ஆங்கில ஏடு ‘மெயிலி’லிருந்து எடுத்து வெளியிட்டுள்ள செய்தியின் சுருக்கத்தினை இங்கு தருகிறோம். இதன் பின்பாவது குழப்பவாதிகள் தெளிந்தால் சரி. எவ்வளவு நாட்கள்தான் ஏமாற்றினாலும் எதிரிகள்கூட நம் கருத்துக்குத்தான் வந்து தீர வேண்டியிருக்கிறது. இதே படியுங்கள்:

“பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் இடையே குருக்ஷேத்திரத்தில் ஒரு பிரமாண்டமான போர் நடந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சியின் பின்னணியில் பார்த்தால் அந்த மகாபாரத யுத்தத்தை உண்மையான சரித்திர சம்பவமாகக் கருதமுடியாது. அப்படி ஒரு யுத்தம் நடந்ததற்கான ஆதாரம் ஒன்றுமில்லை.”

“கி.மு.1100-க்கு முன்பு இரும்பு என்றால் என்னவென்று தெரியாத நிலை. போர்க் கருவிகள் பற்றிக் குறிப்புகள் வருகின்றன. “இராமாயணம் மகாபாரதம் இரண்டிலும் அவ்வப்போது பல சமஸ்தான கவிஞர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டிப் பலவற்றைப் ‘புகுத்தி’யிருக்கிறார்கள். இப்போதுள்ள பதிப்புகள் கி.பி.4 அல்லது 5ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டவையே.” உன்மையினைச் சொன்னால் நம்மீது பாய்ந்து சீறும் ‘சீலர்கள்’ அக்கிரகார ஆனந்தவிகடனே ஆமாம் போட்ட பிறகு பாவம் என்ன சொல்லப் போகிறார்கள்?

ஆதாரம்: 12-10-1975 நாளிட்ட ‘ஆனந்த விகடன்’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *