அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்து சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு பேசியது எப்படி அவதூறாகும்?

viduthalai
2 Min Read

சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை, அக்.18- ஜெயலலிதா மரணத்துக் குபின் 40 சட்டமன்ற உறுப்பினர்கள் தி.மு.க.வில் இணைய தயாராக இருந்ததாக சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு பேசியது எப்படி அவதூறாகும்? என்று சென்னை ஊயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னையில் கடந்த ஆண்டு நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு, “ஜெயலலிதா மரணம் அடைந்த நேரத்தில் 40 அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தி.மு.க.வில் இணைய தயாராக இருந்தனர். ஆனால், அதை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கமறுத்துவிட்டார்” என்று கூறியிருந்தார்.

சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு பேச்சு அ.தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறி சென்னை நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், அ.தி.மு.க. வழக்குரைஞர் அணி இணைச் செயலாளர் பாபு முருகவேல் கிரிமினல் அவதூறு வழக்கை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவும் நேரில் ஆஜரானார். இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில், அப் பாவு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், இந்த வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இந்த மனு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு நேற்று (17.10.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.வில்சன், “அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ள பாபு முருகவேலுக்கு எதிராக மனுதாரர் எந்த ஒரு கருத்துகளை யும் தெரிவிக்கவில்லை” என்று வாதிட்டார்.

பாபு முருகவேல் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், “அ.தி.மு.க.வின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு பேசியுள்ளார். அதனால், கட்சி யின் சார்பில் அவதூறு வழக்கை தாக்கல் செய்துள்ளார். அதற்கு கட்சி அனுமதி வழங்கியுள்ளது” என்றார். அதற்கு பதில் அளித்த மூத்த வழக்குரைஞர் வில்சன், “அரசியல் கட்சி சார்பில் வழக்கு தாக்கல் செய்வதாக இருந்தால் தலைவரோ அல்லது பொதுச்செயலாளரோ தான் தாக்கல் செய்ய முடியும்” என்றார்.

என்ன உரிமை?

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “மனுதாரர் கூறிய 40 சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் அவதூறு வழக்கு தாக்கல் செய்யவில்லை. அப்படியிருக்கும் போது, அவதூறு வழக்கை தாக்கல் செய்ய என்ன அடிப்படை உரிமை உள்ளது? அப்பாவு தனது பேச்சில் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. அ.தி.மு.க.வுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையிலும் பேசவில்லை. கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி விட்டதாக கற்பனையாக கூறக்கூடாது.

அ.தி.மு.க. ஆட்சி 5 ஆண்டுகள் பதவிக்காலத்தை பூர்த்தி செய்துள்ளது. யாரும் கட்சி தாவவில்லை. அப்படி இருக்கும்போது, சட்டப் பேரவைத் தலைவர் பேச்சால் எப்படி அ.தி.மு.க.வின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும். எப்படி அவதூறாகும்” என்று பாபுமுருகேவல் தரப்புக்கு சரமாரியாக கேள்வி எழுப்பினார். பின்னர், இந்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை 22ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *