சென்னை, அக்.16- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (15.10.2024) சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்ற வானிலை மய்ய எச்சரிக்கையைத் தொடர்ந்து, மழை பெய்து வரும் நிலையில், வடசென்னை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையொட்டி கனமழையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 30.9.2024 மற்றும் 14.10.2024 ஆகிய தேதிகளில் தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு, கனமழையின் தாக்கத்தினை எதிர்கொள்ள பொது மக்களின் பாதுகாப்பு கருதி பல்வேறு துறைகள் மூலம் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசு உயர் அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
14.10.2024 இரவு முதல் தொடர்மழை பெய்துவரும் நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (15.10.2024) யானைக்கவுனி கால்வாயில் மழைநீர் தடையின்றி சென்றிட மழைநீரில் அடித்துவரப்படும் கழிவுகளை ஜேசிபி இயந்திரம் மூலம் உடனுக்குடன் அகற்றும் பணிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து பேசின் மேம்பாலத்திலிருந்து, காந்தி கால்வாய், ஓட்டேரி நல்லா கால்வாய் சேரும் இடமான பக்கிங்ஹாம் கால்வாயில் மழைநீர் தடையின்றி செல்கிறதா என்பதை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
பின்னர், டிமெல்லோஸ் சாலையில், அதிகமாக மழைநீர் தேங்கும் இடங்களான கே.எம். கார்டன் மற்றும் புளியந்தோப்பு பகுதிகளில் சேரும் மழைநீரை மோட்டார் பம்புகள் மூலம் வெளியேற்றும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், ஸ்டீபன்சன் சாலை யில் உள்ள மேம்பாலத்தில் அமைக்கப் பட்டுள்ள மோட்டார் பம்புகள் மூலம் பெரம்பூர் பிரதான சாலை பகுதிகளில் தேங்கும் மழைநீரை ஓட்டேரி நல்லா கால் வாய்க்கு சென்றடைவதை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, ஓட்டேரி நல்லா கால்வாயில் மழைநீர் தடையின்றி செல்வதை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு செய்த பின், அங்கு பணியில் இருந்த தூய்மைப் பணியாளர்களுக்கு தேநீர் மற்றும் பிஸ்கெட்டுகளை வழங்கினார்.
கனமழை : இரவிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் களப்பணி!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (15.10.2024) சென்னை, எழிலகத்திலுள்ள மாநில அவசரகால கட்டுப்பாட்டு மய்யத்திற்கு நேரில் சென்று, சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதையொட்டி, காணொலிக் காட்சி வாயிலாக சிறு பான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர்
எஸ்.எம்.நாசர், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, முதலமைச்சர் அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் களிடம் தொடர்ந்து இருநாட்கள் கனமழை பெய்யவுள்ளதால் இரவு முழுவதும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என்றும், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்களின் தொலைபேசி எண்கள், இலவச அழைப்பு எண் (Toll Free Number) ஆகியவற்றை பொதுமக்கள் அனைவருக்கும் தெரியப் படுத்த வேண்டும் என்றும், கடலோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை நேரில் சென்று அழைத்து அவர்களை முகாம்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதோடு, முகாம்களில் தங்கியுள்ள குழந்தைகள் மற்றும் பொது மக்களுக்கு செய்து தரப்பட்டுள்ள உணவு, குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட இதர வசதிகள் குறித்து கேட்டறிந்து, சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரையும், மழையால் வீழ்ந்துள்ள மரங்களை அகற்றிடவும் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
மேலும்,முதலமைச்சர் அவர்கள் முகாம்களில் தங்கியுள்ள மக்களிடம் செய்து தரப்பட்டுள்ள வசதிகள் குறித்தும், உணவு வழங்கப்பட்ட விவரங்கள் குறித்தும் கேட்டறிந்து, அவர்களிடம் கவலைப்பட வேண்டாம், அரசு உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்துதரும் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.