திவான் பகதூர் மலைய பெருமாள்அகரம் சுப்பராயலு ரெட்டியார் நீதிக்கட்சியின் சார்பில் சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சர் ஆவார்.
சுப்பராயலு 1912 ஆம் ஆண்டு கடலூர் மாவட்ட வாரியத்தின் தலைவராகப் பதவி வகித்தார். ஆரம்ப காலத்தில் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராக இருந்த அவர், 1916 ஆம் ஆண்டு காங்கிரசை விட்டு விலகினார். 1917 ஆம் ஆண்டு தென்னாற்காடு மாவட்ட வாரியத்தின் தலைவரானார். தியாகராயர், டி.எம். நாயர் ஆகியோர் தொடங்கிய நீதிக் கட்சியில் இணைந்தார்.
1920-இல் முதல் தேர்தல் நடத்தப்பட்டது. நீதிக்கட்சி பெரும் பான்மை இடங்களை கைப்பற்றியது. தேர்தலில் வெற்றிபெற்ற நீதிக்கட்சித் தலைவர் தியாகராயரை ஆட்சி அமைக்குமாறு சென்னை ராஜதானி ஆளுநர் வில்லிங்டன் அழைத்தார். ஆனால், அவர் அந்த அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. தனக்கு பதிலாகத் தன் கல்லூரித் தோழரான சுப்பராயுலுவை பரிந்துரை செய்தார். இதனால் டிசம்பர் 17, 1920-இல் சுப்பராயலு சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சரானார்.
கல்வி, சுங்கம், பொதுப் பணிகள் ஆகிய துறைகளுக்கு அவரே அமைச்சரானார். நீதிக்கட்சியின முதல் அமைச்சரவை 1923 செப்டம்பர் 11 வரை பதவியில் இருந்தது. பதவியேற்ற ஏழு மாத காலத்திற்குள் சுப்பராயுலுவிற்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. எனவே ஜூலை 11, 1921-ல் தனது முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார். அவருக்கு பதில் பனகல் அரசர் முதலமைச்சரானார்.