அப்துல் கலாம் பிறந்த நாள் [15.10.1931]

Viduthalai
2 Min Read

அப்துல் கலாம் கூறுகிறார்:

“கடந்த 1979-ஆம் ஆண்டு எஸ்எல்வி-3 ராக்கெட் மூலம் செயற்கைக்கோள் ஏவும் திட்டத்திற்கு தலைவராக நான் இருந்தேன். அப்போது இஸ்ரோ தலைவராக சதீஷ் தவான் இருந்தார். இந்தத் திட்டத்தின் முக்கியப் பணி செயற்கைக்கோளை விண்ணில் சுற்று வட்டப் பாதையில் நிலைநிறுத்துவதாகும். செயற்கைக்கோளை விண்ணில் ஏவ தயாராக இருந்தோம். இறுதிக் கட்டத்தில் செயற்கைக்கோளை ஏவ வேண்டாம் என்று கணினி சமிக்ஞை வெளியிட்டது. எனினும் இந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் செயற்கைக்கோளை ஏவினோம். ஆனால் இரண்டாவது கட்டத்தில் செயற்கைக்கோளில் கோளாறு ஏற்பட்டு அது வங்கக் கடலில் விழுந்தது. இந்த செயற்கைக் கோளை ஏவும் முடிவை நான் எடுத்தேன். ஆகவே இந்தத் தோல்விக்கு நானே முழுப் பொறுப்பு. இது தான் என்னுடைய முதல் பெரிய தோல்வி. அதுவரை நான் வெற்றியை கையாண்டிருக்கிறேன். ஆனால் முதல் முறையாக தோல்வியை சந்தித்தேன். அதை எவ்வாறு கையாள்வது என்று நினைத்தேன்?
அப்போதைய இஸ்ரோ தலைவராக இருந்த சதீஷ் தவான் செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்றார். அதில் அவர், “நாங்கள் இன்று தோல்வி அடைந்துவிட்டோம். எங்களுடைய விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்பப் பிரிவினர் ஆகியவர்களுக்கு நான் முழு ஆதரவு அளிக்க உள்ளேன். அப்போது தான் அவர்கள் அடுத்த முறை வெற்றிப் பெறுவார்கள்” எனக் கூறினார். இதன்மூலம் இந்தத் தோல்விக்கான முழு பொறுப்பையும் அவர் ஏற்றுக் கொண்டார்.

இதன் பின்னர் 1980ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18-ஆம் தேதி எஸ்எல்வி வெற்றிகரமாக ரோகிணி செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது. இந்த முறை இஸ்ரோ தலைவர் சதீஷ் தவான் என்னை செய்தியாளர்களை சந்திக்க சொன்னார். அன்று நான் ஒரு முக்கியமான பாடத்தை கற்றுக் கொண்டேன். அதாவது தோல்வி வரும்போது நிறுவனத்தின் தலைவர் அந்தத் தோல்விக்கு பொறுப்பு ஏற்க வேண்டும். அதேசமயம் வெற்றி வரும் பட்சத்தில் அதனை வேலை செய்த குழுவிற்கு அளித்துவிட வேண்டும். இத்தகைய பெரிய விடயத்தை நான் எந்தப் புத்தகத்தை படித்தும் கற்றுக் கொள்ள வில்லை. எனது வாழ்க்கை அனுபவத்தின் மூலம் கற்றுக் கொண்டேன்”
இவ்வாறு இந்தியக் குடியரசு மேனாள் தலைவர் ஆ.பெ.ஜெ. அப்துல்கலாம் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *