மீமிசல், அக். 15- தந்தை பெரியார் 146 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட பெரியார் படத்துடன் இளைஞரணி தோழர்கள் கழகக் கொடியுடன் இருசக்கர வாகனத்தில் அணிவகுத்து பேரணியாக 27-09-2024 மாலை 5 மணிக்கு கிழக்கு கடற்கரை சாலை மணமேல்குடியில் புறப்பட்டு அம்மாப்பட்டினம், கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் வழியாக 20 கிலோ மீட்டர் தூரம் பயணித்து மீமிசல் பேருந்து நிலையத்தை அடைந்தனர்.
வழிநெடுகிலும் இருபுறமும் பொதுமக்கள் கூடி நின்று ஆதரவு தந்து மகிழ்ந்தனர்.
மணமேல்குடி,கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் ஆகிய ஊர்களில் திமுக,விடுதலைச் சிறுத்தைகள், தமிழ் புலிகள், மனிதநேய மக்கள் கட்சி,இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் பேரணியில் வருகை தந்த தோழர்களை வரவேற்று சால்வை அணிவித்து ஆதரவு தெரிவித்து மகிழ்ந்தனர்.
அறந்தாங்கி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் பேரணியில் வருகை தந்த அனைவரையும் வரவேற்று சால்வை அணிவித்து சிறப்பித்தார்.
நிறைவாக மீமிசல் பேருந்து நிலையம் தந்தை பெரியார் பிறந்த நாள் பொதுக்கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது திராவிடர் கழக சொற்பொழிவாளர் பெரியார் செல்வன் சிறப்புரையாற்றினார். தோழமை இயக்கத்தினர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
அனைத்து நிகழ்வுகளும் கிழக்கு கடற்கரை பகுதியில் மிகப்பெரிய எழுச்சியையும் தாக்கத்தையும் ஏற்படுத்தின.
அனைத்து ஏற்பாடுகளையும் அறந்தாங்கி கழக மாவட்ட செயலாளர் சா.குமார் தலைமையில் யோவான்குமார், கார்த்தி, பிரகாஷ் உள்ளிட்ட தோழர்கள் திட்டமிட்டு மிகவும் நேர்த்தியாக செய்து இருந்தனர்.