ஆர்.எஸ்.எஸ். மாநாடா – நீதிபதிகள் மாநாடா?

viduthalai
2 Min Read

கடந்த 6ஆம் தேதி விசுவ இந்து பரிஷத்தின் சட்டப் பிரிவு திண்டுக்கல்லில் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு நீதிபதி கலந்து கொண்டார்.
செப்டம்பர் 8இல் டில்லி இந்தியா ேஹபிடேட் மய்யத்தில் நடைபெற்ற விசுவ ஹிந்து பரிஷத்தின் வழக்குரைஞர்கள் மாநாட்டில் இரு உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதிகள் உள்பட உயர்நீதிமன்ற நீதிபதிகள் (மொத்தம் 30 பேர்) பங்கு கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்ட விடயங்கள்:

‘காசி, மதுராவில் (பள்ளி வாசல்கள் இருக் கும் இடத்தில்) கோவில்கள் கட்டுவதற்கு உள்ள சட்ட ரீதியான தடைகள்.

வக்ஃப் சட்டத் திருத்தம்
மத மாற்ற தடை சட்டம்

ஒன்றிய சட்ட அமைச்சரும் இந்த நிகழ்ச் சியில் பங்கேற்றார்.
நீதிபதிகள் அனைவரும் காவி சால்வை அணிந்து வருவது இதுவே முதல் முறை. இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறும் என்று ஒன்றிய சட்ட அமைச்சர் தெரிவித்தார்.

பாசிசம் என்பது மோடியின் ஆட்சியில் மட்டுமல்ல. அரசு, நீதிமன்றங்கள், காவல்துறை, ராணுவம், ஊடகங்கள், கலாச்சார மய்யங்கள் என அனைத்து அமைப்புகளிலும் செல்வாக்கு செலுத்தும் ஒன்று என்பதைப் புரிந்து கொள்ள இந்த நிகழ்ச்சி ஒரு சான்றாகும்.

இன்றைய கால கட்டத்தில் ஜனநாயகத் திற்கான போராட்டம் எவ்வளவு கடினமானது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
பிஜேபி ஆட்சி அதிகாரத்தில் வந்த காலந்தொட்டு, பார்ப்பன அதிகாரம் சகலத் துறைகளிலும் சகட்டுமேனிக்குத் தலைதூக்கி ஆட ஆரம்பித்து விட்டது.

தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்புகள் எல்லாம் தலைகுப்புற வீழும் நிலை ஏற்பட்டு விட்டது.

நீதிமன்றங்களே நிலை குலைந்து விட்டன என்றால், வேறு எதைச் சொல்லி அழுவது!

விசுவ ஹிந்து (ஆர்.எஸ்.எஸின் பிரிவு) வழக்குரைஞர் அமைப்பில் உச்சநீதிமன்ற உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதிகள் 30 பேர் டில்லி மாநாட்டில் பங்கு கொண்டார்கள் என்பது எத்தகைய அதிர்ச்சிக்குரியது. இவர்கள் எல்லாம் நீதிபதிகளாக இருந்த கால கட்டத்தில் எழுதிய தீர்ப்புத் தராசு எப்படியெல்லாம் தள்ளாடியிருக்கும்!

பச்சையாகப் பார்ப்பனர்கள் மாநாட்டில் பங்கு கொள்ளும் அளவுக்கு நிலைமை தறி கெட்டு விட்டது. கேரளாவில் கொச்சியில் தமிழ் பிராமணர்கள் பன்னாட்டு மாநாடு நடைபெற்றது. 2019 ஜூலையில் நடந்த அந்த மாநாட்டில் கேரள மாநில உயர்நீதிமன்ற நீதிபதி சிதம்பரேஷும், தமிழ்நாட்டைச் சேர்ந்த உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரும் (பெண்) பங்கு கொண்டனர்.

தருமபுரியில் நடைபெற்ற தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு. நாராயணசாமி அவர்கள் மேடையில் அமர்ந்திருந்தார் (உரை யாற்றவில்லை) என்பதற்காகத் தமிழ்நாட்டுப் பார்ப்பன ஊடகங்கள் அடேயப்பா எப்படி எல்லாம் ஊளையிட்டன!

இப்பொழுது ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியிலும், பார்ப்பன சங்க மாநாட்டிலும் மேனாள் நீதிபதிகளும் இந்நாள் நீதிபதிகளும் சற்றும் தயக்கமின்றிப் பங்கேற்று ‘‘சிறப்புரை’’ நிகழ்த்துகிறார்கள்.

மதச் சார்பின்மைக்கும், சமூகநீதிக்கும் பேராபத்து! பேராபத்து!!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *