திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் “தகைசால் தமிழர்” விருது!

Viduthalai
2 Min Read

சுதந்திரதின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்

அரசு, ஆசிரியர், தமிழ்நாடு, திராவிடர் கழகம்

சென்னை, ஆக.1 “தகைசால் தமிழர்” விருதிற்கு திராவிடர் கழகத் தலைவர் முனைவர் கி. வீரமணி அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், சுதந்திர தின விழாக் கொண்டாட்டத்தின் போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் வழங்கப் படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் “தகைசால்  தமிழர்” என்ற பெயரில் புதிய விருது 2021 ஆம் ஆண்டு முதல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டிற்கான விருதாளரை தேர்வு செய்வதற் காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 

அக்கூட்டத்தில் இளம் வயதிலேயே பொது வாழ்க் கையில் ஈடுபட்டு, ‘சமூகப் பாகுபாட்டுக்கு ஆளான மக்களுக்கு’ ஆதரவாக தந்தை பெரியார் நடத்திய சமூகப் பிரச்சாரங்கள் மற்றும் போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு நாற்பது முறை சிறைவாசம் அனுபவித்தவரும், 1962 இல் ‘விடுதலை’ நாளிதழ் ஆசிரியராக பொறுப்பேற்று, தொடர்ந்து 60 ஆண்டு களையும் கடந்து மிகச் சிறப்பாக பணி செய்து வருப வரும், உண்மை, பெரியார் பிஞ்சு, The Modern Rationalist – (ஆங்கிலம்) இதழ்களுக்கு ஆசிரியராகவும், இணைய தளங்கள் வாயிலாகவும் மேற்கண்ட கருத்துகளைப் பரப்பி பன்னாட்டுத் தமிழர்களையும் ஒருங்கிணைத்து பெரியாரின் பணியைத் தொடர்ந்து வருபவரும், தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச் சிக்கும் பெரும் பங்காற்றிய தமிழரும், திராவிடர் கழகத் தலைவருமான முனைவர். கி.வீரமணி அவர்களுக்கு 2023 ஆம் ஆண்டிற்கான “தகைசால் தமிழர் விருது” வழங்க தேர்வுக் குழுவினரால் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

“தகைசால்  தமிழர்” விருதிற்குத் தேர்ந்தெடுக்கப் பட்ட முனைவர் கி. வீரமணி அவர்களுக்கு, பத்து இலட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும், வருகிற 2023 ஆகஸ்ட் திங்கள் 15 ஆம் நாள் நடைபெறும் சுதந்திர தின விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் வழங்கப்படும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *