திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், திராவிட மகளிர் பாசறைத் தோழர்களின் முக்கிய கவனத்திற்குத் தமிழர் தலைவரின் வேண்டுகோள்!
வரும் அக்டோபர் 14 முதலே வடகிழக்கு பருவ மழையும், அதை ஒட்டி காற்றழுத்த தாழ்வு மண்டலங்களால் ஏற்படும் புயல் மழையும் தமிழ்நாட்டில் தொடங்க இருக்கிறது என்று வானிலை அறிக்கைகள் எச்சரிக்கை செய்திருக்கின்றன.
பருவமழை என்பதைக் கடந்து, உலகம் முழுவதும் நிகழ்ந்து கொண்டிருக்கும் ‘காலநிலை மாற்றம்’ (Climate Change) காரணமாக பெருமழையும், பெரும் புயல்களும், வறட்சியும் மாறி மாறித் தோன்றி, மனித குலத்திற்கு பெரும் சூழலியல் அறைகூவல் ஏற்பட்டிருக்கிறது. அதை மனித குலம் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
தமிழ்நாட்டில் வரும் அக்டோபர் 14 முதல் பருவ மழை கடுமையாக இருக்கும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. கடந்த சில நாள்களாகவே தமிழ் நாட்டின் தென் மாவட்டங்களிலும் கடும் மழையும் வெள்ளமும் ஏற்பட்டிருப்பதை நாம் அறிந்து வருகிறோம்.
எதையும் எதிர்கொள்ளத்தக்க வகையில் தமிழ்நாடு அரசு தொடர் முயற்சிகளை எடுத்து வருகிறது. கடந்த ஆண்டுகளைப் போலவே அரசுடன் இணைந்தும், நேரடியாக மக்களை சந்தித்தும் முன்னெச்சரிக்கை, தேவையானால் நிவாரணம் உள்ளிட்ட களப்பணிகளில் ஈடுபடுமாறு திராவிடர் கழக இளைஞர் அணி, திராவிட மாணவர் கழகம், திராவிட மகளிர் பாசறை, பெரியார் தொண்டறம், பெரியார் சமூகக் காப்பு அணித் தோழர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
“கடவுளை மற மனிதனை நினை” என்று தந்தை பெரியார் சொன்னதில் முதன்மையானது மனிதனை நினைக்கும் மனிதநேயத் தொண்டறமாகும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், தூத்துக்குடி, குமரி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஆண்டு நம் இயக்கத் தோழர்கள் மேற்கொண்ட தொண்டறப் பணிகள் மக்களின் துயர் துடைப்பதில் பெரும்பங்காற்றியதை நாமும், மக்களும் அறிவோம்.
எப்போதும் அதனை முதன்மையான பணியாக நாம் மேற்கொள்வோம். இவ்வாண்டும் அத்தகைய பணிகளை தொடங்குவதற்கு, மாவட்ட திராவிடர் கழகப் பொறுப்பாளர்களின், தலைமைக் கழக அமைப்பாளர்களின் வழிகட்டுதல், ஒத்துழைப் புடன் அணியமாகும்படி தோழர்கள் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
கி. வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்