கழகத்தின் முதல் பொருளாளர் – கழகக்கொடியை தமிழ்நாடெங்கும் கொண்டு சென்றவர் பழையகோட்டை இளைய பட்டக்காரர் தளபதி ந.அர்ச்சுனன்
நம்முடைய தளபதி ந.அர்ச்சுனன் அவர்கள், சமூக மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று இளம் வயதில் முடிவெடுத்து தந்தை பெரியார் தலைமையில் களப்பணியாற்றியவர்.
. ஒரு லட்சம் ஏக்கர் நிலபுலன்களுடன் வாழ்ந்த மிகப்பெரிய செல்வந்தர். தந்தை பெரியா ருடன் இணைந்து பொதுவாழ்க்கைக்கு வந்தவர். தந்தை பெரியாரின் கொள்கையிலே நடை போட்டு, மதுரையில் நடைபெற்ற கருப்புச் சட்டை மாநாடு போன்ற இயக்க நிகழ்வுகளுக்கு முழுமூச்சோடு முன்னின்று பாடுபட்டவர்
1940ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய பெரியார் இந்த இயக்கத்தை வளர்ப்பது சிறு வயது இளைஞர்கள்தான் என்று குறிப்பிட்டார். பழையகோட்டை, இளைய பட்டக்காரர் என்று சொல்லப்படும் அர்ச்சுனன். தந்தை பெரியாரின் கொள்கைகளால் இருபது வயதிலேயே ஈர்க்கப்பட்டு, அவரது தளபதியாகத் திகழ்ந்தவர். தமிழ்நாடெங்கும் பயணித்து பெரியாரின் பகுத்தறிவு-சுயமரியாதை கருத்துகளை முழங்கியவர். பொதுக்கூட்டங்களிலும் மாநாடுகளிலும் அர்ச்சுனன் முன்வைத்த கருத்துகள், சிந்தனையைத் தூண்டி, செயலாற்றலுக்குத் துணை நின்றன. திராவிடர் கழகத்திற்கு ஒரு கொடி வேண்டும் எனப் பெரியார் திட்டமிட்டார்.
கொள்கையாளரின் குருதியில் வடிவமைக்கப்பட்டது திராவிடர் கழகக் கொடி, சமுதாய இருளை அகற்றி, புரட்சி வெளிச்சம் பரவவேண்டும் என்ற அடையாளமான அந்தக் கொடியை பல ஊர்களிலும் ஏற்றியவர் பழையகோட்டை இளைய பட்டக்காரர் அர்ச்சுனன்.