தரவுகளால் வரலாற்றைக் கட்டமைக்காவிட்டால், கட்டுக் கதைகள் நம்மீது வரலாறு என்ற பெயரில் சவாரி செய்யும்!
காப்பாற்றப்படவேண்டியது நிகழ்காலமும், எதிர்காலமும் மட்டுமல்ல; கடந்த காலமும்தான்!
ஒடிசா மாநில அரசின் மேனாள் தலைமைச் செயலாளர் – மதியுரைஞர் பாலகிருஷ்ணன் அய்.ஏ.எஸ். சிறப்புரை
சென்னை, அக்.12 வரலாறு முக்கியம் என்பது மட்டுமல்ல; வரலாறு என்பது தவிர்க்க முடியாததும்கூட! வரலாறு என்பதிலிருந்து தப்பிக்கவும் முடியாது! தரவுகளால் வரலாற்றைக் கட்டமைக்காவிட்டால், கட்டுக் கதைகள் நம்மீது வரலாறு என்ற பெயரில் சவாரி செய்யும். காப்பாற்றப்படவேண்டியது நிகழ்காலமும், எதிர்காலமும் மட்டுமல்ல; கடந்த காலமும்தான் என்றார் ஒடிசா மாநில அரசின் மேனாள் தலைமைச் செயலாளரும், மதியுரைஞருமான பாலகிருஷ்ணன் அய்.ஏ.எஸ். (ஓய்வு) அவர்கள்.
சிந்துவெளி (திராவிட) நாகரிக பிரகடன நூற்றாண்டு தொடக்க விழா!
கடந்த 24.9.2024 மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் சிந்துவெளி (திராவிட) நாகரிக பிரகடன நூற்றாண்டு விழாவில், ஒடிசா மாநில அரசின் மேனாள் தலைமைச் செயலாளரும், மதியுரைஞருமான பாலகிருஷ்ணன் அய்.ஏ.எஸ். (ஓய்வு) அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
சிந்துவெளியைத் திறப்பதற்கான திறவுகோல் சங்க இலக்கியம்தான்!
சிந்துவெளியில் எவை எவையெல்லாம் பொருந்து கிறதோ, அவையெல்லாம் சங்க இலக்கியத்தில் இருக்கும்.
அதனால்தான், சிந்துவெளியைத் திறப்பதற்கான சாவி, திறவுகோல் சங்க இலக்கியம்தான் என்று பேசி வருகிறேன்.
நீங்கள் சிந்துவெளி என்கிற விடுகதையை விடு விக்கவேண்டும் என்று சொன்னால், சங்க இலக்கியத்தின் துணை இல்லாமல் அதனை செய்யவே முடியாது.
தமிழ் மொழி ஒரு நாகரிகத்தின் மொழி!
அதற்கு மிக முக்கியமான ஒரு புரிதல் தேவைப்படு கிறது. சங்க இலக்கியம் ஒரு மாவட்டத்தின் இலக்கியம் அல்ல; ஒரு மாநிலத்தின் இலக்கியம் அல்ல. ஏனெனில், தமிழ் ஒரு மாவட்டத்தின் மொழியல்ல; ஒரு மாநிலத்தின் மொழியல்ல. அது ஒரு நாகரிகத்தின் மொழி.
சங்க இலக்கியம் என்பது ஒரு மாநிலத்தின் இலக்கிய மல்ல – அது இந்தியத் துணைக் கண்டத்தின் இலக்கியம்.
சங்க இலக்கியத்தைப் போல, இந்தியத் துணைக் கண்டத்தை, இமயமலைமுதல் குமரிவரை புரிந்து வைத்து, அங்கு இருக்கக்கூடிய எல்லா இடங்களிலும் முளைக்கின்ற மரங்கள், தாவரங்கள், அங்கு இருக்கக்கூடிய விலங்குகள், எலும்பைத் தின்னும் ஒட்டகம்; நரம்பை வாசனைப் புல்லை சாப்பிடுகின்ற கவரி மான்; கோவேறு கழுதை, அதன் காலைக் கடித்த அத்ரி என்று இந்தியாவினுடைய பல்வேறு பகுதிகளிலும் இருக்கக்கூடிய எல்லாவற்றையும் அறிந்து வைத்திருக்கின்ற இந்திய துணைக் கண்ட இலக்கியம் என்ற ஒன்று இங்கே இருக்கின்றது என்றால், அது சங்க இலக்கியம்தான்.
ஏற்கெனவே சொன்னேன் அல்லவா, ‘‘திருவள்ளுவர் சிலை இல்லாத கன்னியாகுமரியைப்போல, மார்ஷல் இல்லாத இந்திய வரலாறு ஒரு வகையில் – நம்முடைய கைகளில் சங்க இலக்கியம் இல்லை என்றால், நாம் எப்படி இருந்திருப்போம் – அதுபோலத்தான் நம்முடைய வரலாறும் இருந்திருக்கும்.
எனக்கு முன் இங்கே உரையாற்றியவர்கள் எல்லாம் சொன்னார்கள்; பேராசிரியர் கருணானந்தம் உரை யாற்றும்பொழுது சொன்னார், எப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில், யார், என்ன செய்தார்கள்? என்று.
தைத்திரீய பிராமணம் என்று சொல்லப்படுகின்ற ஒரு வேத இலக்கியத்திலிருந்து டிபரோ மொழி பெயர்த்த நான்கு வரிகளை வாசிக்க விரும்புகின்றேன்.
ஆர்மா என்றால் சிதைவிடங்களைக் குறிப்பது!
வேதங்களில், ஆர்மா என்று சொல்லப்படுகின்ற சிதைவிடங்களைப்பற்றி குறிப்பு இருக்கும்.
ஆர்மா – ஆர்மிகா என்று சொன்னால், ஓர் இடம் சிதைந்து போயிருக்கிறது; அழிந்து போயிருக்கிறது. அதற்கு ஆர்மா என்று பெயர் முடியும்.
குக்குடு ஆர்மா என்றால், கோல்வூர் சிதைவு என்று பொருள்.
அதைப்பற்றி எழுதுகின்ற டிபரோ சொல்கிறார், ‘‘யூகங்கள் அற்ற இந்த இடங்களில் முன்பு வாழ்ந்த வர்களின் குடியிருப்புகள் பல இடங்களில் பரவிக் கிடந்தன. ஓ, வைஷ்வானர… இந்த மக்கள் உன்னால் விரட்டியடிக்கப்பட்டார்கள். அவர்கள் இப்போது வேறு எந்த நிலத்திற்கோ புலம்பெயர்ந்து போய்விட்டார்கள்.”
இதைவிட ஒரு ஒப்புதல் வாக்குமூலம் வேறு என்ன தேவைப்படுகிறது.
சங்க இலக்கியத்தைப் புரட்டிப் பார்த்தால் தெரியும்; காணாமல் போன நகரங்கள்; கைவிட்டு வந்த நகரங்கள்; புலம்பெயர்ந்த இடங்கள்; சிதைந்து கிடக்கக் கூடிய இடங்கள். இப்படி தொடர்ந்து, மூதூர், தொல்லூர் சிதைவுகள் இருக்கக்கூடிய ஓர் இடம் – அங்கே கிடைக்கக் கூடிய நினைவுச் சின்னங்கள் என்று, சங்க இலக்கியம் காணாமல் போன இடங்களையும், விட்டு வந்த இடங்களைப்பற்றியும் பேசுகிறது.
இந்த இடத்தில்,
தைத்திரீய பிராமணம், விரட்டி விடப்பட்ட வர்களைப்பற்றி பேசுகிறது.
அதற்காக, ஆரியப் படையெடுப்பு என்று சொல்லப் படுகின்ற சான்றுகளை நான் முழுக்க முழுக்க நம்புவ தில்லை.
திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழியைப் பேசியவர்கள்!
அதற்கு இயற்கையச் சீற்றம் காரணமாக இருந்தி ருக்கலாம்; தொடர் வறட்சி காரணமாக இருந்திருக்கலாம். ஆயினும், சிந்துவெளி மக்கள் உண்மையில், தொல் தமிழ் தொன்மங்களோடு தொடர்புடைய திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழியைப் பேசிய வர்கள் என்பதில் அய்யமே இல்லை. இதைத்தான் நாங்கள் தொடர்ந்து பல்வேறு சான்றுகளின் மூலமாக வலியுறுத்தி வருகிறோம்.
இதனை திராவிடச் சான்று என்று சொல்வதற்கு, ஓரிருவர் காரணங்கள் அல்ல – ஜான் மார்ஷலில் தொடங்கி, சுனித் குமார் சட்டர்ஜி வரை.
வங்காள மொழி அறிஞர் சுனித்குமார் சட்டர்ஜி
1924 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தேதி, ஜான்மார்ஷல் அறிக்கை விடுகிறார். இந்த அறிக்கை வந்த இரண்டே மாதங்களில், சுனித்குமார் சட்டர்ஜி என்கிற வங்காள மொழி அறிஞர், டிசம்பர் மாதத்தில் ‘‘மாடர்ன் ரிவிவ்யூ” என்ற பத்திரிகையில் கட்டுரை எழுதுகிறார்.
அந்தக் கட்டுரையினுடைய தலைப்பைப் பார்த்தாலே எல்லோருக்கும் புரியும். அவர் சொல்கிறார், Dravidian origins of the industry என்று சொல்கிறார்.
அவர் சொல்லி முடித்த அடுத்த ஆண்டே, அதற்கு மாறான கருத்துகள் வந்தன.
திசால்கர் என்பவர், Indus civilization is the face of the composite indian culture inaugurated by Ric with the people.
மார்க்ஸ் முல்லர் அவர்கள் சொன்னதைப்போல, 1500 ஆண்டுகள் என்று ஒரு தேதி கொடுத்துவிட்டுப் போய்விட்டார்.
1500 ஆண்டுகள் என்று அவர் தேதி கொடுத்த மார்க்ஸ் முல்லர் மேல் அவர்களுக்கு ஒரு கோபம்.
வேதத்திற்கே 1500 ஆண்டுகள்தான் என்று சொல்லிவிட்டார். வேதம் காலத்திற்கு அப்பாற்பட்டது. அதெல்லாம் அய்.அய்.டி.யில் கண்டுபிடிக்கவேண்டிய விஷயம். அதனால், அவர்களுக்கு மார்க்ஸ் முல்லரின்மேல் கோபம்.
ஆக, இரண்டே இரண்டு பிரச்சினைகள்தான். ஒன்று, வேதத்தினுடைய காலத்தை நகர்த்திக் கொண்டு போகவேண்டும்; அது காலண்டர்களுக்கு அப்பாற்பட்டது என்று சொல்லவேண்டும்.
இரண்டையும் முயற்சி செய்தார்கள்!
இன்னொன்று, தேடித் தேடிப் பார்த்தாலும், சிந்துவெளியில் குதிரை கிடைக்கவில்லை. குதிரை இல்லாத ஆரிய நாகரிகமா?
ஆக, குதிரையைக் கொண்டு வரவேண்டும்; வேதத்தை பின்னால் கொண்டு போகவேண்டும்; குதிரையை முன்னால் கொண்டு வரவேண்டும். இரண்டையும் முயற்சி செய்தார்கள் – ஆனாலும், யாரும் நம்பமாட்டேன் என்கிறார்கள்.
நான், தன்னம்பிக்கையோடு இதை உணர்கிறேன். இது ஒன்றும் நமக்குப் புதிதல்ல.
சங்க இலக்கியத்திற்குப் பின்பு வந்தது சிலப்பதிகாரம். சங்க இலக்கியம், தொடர்ந்து ஒரு பண்பாட்டு அரசிய லைப் பேசுகிறது. நெல்லுகுத்துப் பரவும் கடவுளும் இலவே! என்கிறது.
நாங்கள் நடுகல்லைத்தான் கும்பிடுவோம்.
நெல்லுக்குத்துப் பரவும் கடவுளும் இலவே!
‘‘அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்” என்று கல்விப் பரவலாக்கத்தைப் பேசுகிறது.
‘‘பசிப்பின் மருத்துவன் இல்லம்” என்று சமூகநீதி யையும், பகிர்தல் அரசியலையும்பற்றி பேசுகிறது.
எல்லா பண்பாட்டு அரசியலுக்கும்
முதலான மூல விதை சங்க இலக்கியம்தான்!
‘‘துடியன், பாணன், பறையன், கடம்பன் என்று இந்நான்கல்லது குடியும் இலவே” என்று சமத்து வத்தைப்பற்றி பேசுகிறது.
நாம் பேசுகின்ற எல்லா பண்பாட்டு அரசியலுக்கும் முதலான மூல விதை சங்க இலக்கியத்தில் இருக்கிறது.
ஆனால், அதற்குப் பின்னால் வந்த சிலப்பதி காரத்தில்கூட, நாம் பெருமிதப்படுவதற்கு எவ்வளவோ காரணங்கள் இருந்தாலும், மதுராபுரி தெய்வம் வந்து, கண்ணகி முன்னால் நின்று, ‘‘இந்த நகரத்தில் நாம் யாரை யாரையெல்லாம் தப்பிக்க விடவேண்டும்” என்று கேட்டபொழுது, கண்ணகி வாயிலிருந்து நான்கு விதிவிலக்குகள் வருகின்றது.
‘‘ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும், பெண்டிரும், பிணியுடையீரும்”
ஒரு நகரத்தையே அழிப்பது என்பது தவறு!
பெண்டிரை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், யாரோ ஒரு மன்னன் செய்த தவறினால், ஒரு நகரத்தையே அழிப்பது என்பது தவறு.
சங்க இலக்கியத்தில், எருமை மாடுகள்தான் போற்றப்படுகின்றன!
ஆனால், பசு மாட்டை மட்டும் காப்பாற்றுவது என்றால் என்ன அர்த்தம்? எருமை மாடு என்ன செய்தது?
சங்க இலக்கியத்தில், எருமை மாடுகள்தான் போற்றப்படுகின்றன. ‘‘அண்ணல் ஏறு” என்ற சொல் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.
‘அண்ணல்’ அம்பேத்கருக்கும், ‘அண்ணல்’ காந்தியடிகளுக்கும் நிகழ்கால தமிழில் பயன்படுத்துகின்ற ஒரு சொல், சங்க இலக்கியம் எருமைக்குப் பயன்படுத்துகிறது.
‘‘அண்ணல் ஏறு” என்று.
அணிநடை எருமை,
எருமை பத்து,
எருமை மரம் என்று சங்க இலக்கியம் எருமையைக் கொண்டாடுகிறது.
திருமணத்திற்குப் பந்தக்கால் போடுவதுபோன்று, எருமையினுடைய கொம்பை நட்டு வைத்துவிட்டு, திருமண விழாவினை தொடங்குகிறார்கள்.
சிந்துவெளியில், எருமைக் குறிப்பு இருக்கிறது; காளைக் குறிப்பு இருக்கிறது. ஆனால், பசுமாடு குறிப்பு இல்லை.
பசுமாடு இல்லாமல், காளை மாடு வந்திருக்காது. இருந்தாலும், சிந்துவெளி அதற்கு முன்னுரிமை கொடுக்கவில்லை.
எருமையினுடைய குறிப்பு இருக்கிறது. எருமை யோடு நான்கு பேர் சண்டை போடுவது போன்று இருக்கிறது. எருமையை சுமேரியாவிற்கு ஏற்றுமதி செய்கிறார்கள் சிந்துவெளி மக்கள்.
ஆக, இந்த முரண்பாடுகளையெல்லாம் நீங்கள் பார்த்தீர்களேயானால், சங்க இலக்கியம் நமக்கு இந்தப் பண்பாட்டு அரசியலைக் கற்றுக் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறது. அதற்குப் பிறகு என்னென்னமோ நடந்துவிட்டது.
‘‘மக்களின் வரலாறே வரலாறு;
மற்றதெல்லாம் வரப்புத் தகராறு!”
நான் அதனால்தான் தொடர்ந்து பேசி வருகிறேன். ‘‘மக்களின் வரலாறே வரலாறு; மற்றதெல்லாம் வரப்புத் தகராறு” என்பதில்தான் நமது வெற்றி.
பெண்கள், இளம் மாணவர்கள் விமான நிலையத்திலோ, மற்ற இடங்களிலோ என்னைப் பார்க்கும்பொழுது, செல்ஃபி எடுத்துக்கொள்ளலாம் என்று சொல்லும்பொழுது, ‘‘சிந்துவெளி விட்ட இடமும், சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றேதான்” என்று எடுக்கிறார்கள் பாருங்கள். அப்பொழுதுதான் என்னுடைய இந்த வாழ்க்கை நிறைவளிக்கிறது என்று எனக்குத் தோன்றும்.
அய்ராவதம் மகாதேவன்
அய்ராவதம் மகாதேவன் சொல்வார், ‘‘திராவிடம், சமஸ்கிருதம், வேதங்கள் இவற்றை மொழிகளின் அடிப்படையில் கண்டுபிடிக்கலாம்” என்று.
2010 ஆம் ஆண்டு நடைபெற்ற செம்மொழி மாநாட்டில், நான் அறிவித்த தரவுகளைப்போலவே, இந்த நூற்றாண்டு விழாவில், கடந்த 20 ஆம் தேதி சென்னையில் ஒரு நிகழ்வில் பங்கேற்று உரையாற்றி னேன். R.I.G. Complex – Toponymic Evidence for Aryan Migration” என்ற ஒரு புதிய தரவை நான் அளித்திருக்கிறேன்.
அந்த வகையில், அய்ராவதம் மகாதேவன் சொல்வார், ‘‘ரிக் வேதத்தில் காணப்படும் திராவிடக் கடன் சொற்கள்” என்று.
திராவிட மொழியிடமிருந்து ரிக் வேதம் சொற்களைக் கடன் வாங்கியிருக்கிறது என்று அய்ராவதம் மகாதேவன் தெளிவாகச் சொல்வார்.
சிலம்பாறு, நூபுர கங்கை என்று மாற்றப்பட்டு இருக்கிறது!
பல இடங்களில் சொற்கள் மொழி பெயர்க்கப்பட்டு இருக்கின்றன. அழகர்கோவில் பக்கம் சென்றீர்கள் என்றால், சிலம்பாறு என்று சொல்லப்படுகின்ற ஒரு தொன்மை வாய்ந்த ஆற்றினுடைய பெயர் நூபுர கங்கை என்று மாற்றப்பட்டு இருக்கிறது.
முக்கூடல், திரிவேணி ஆகிவிடுகிறது.
பன்னி ஆறு, வராகநதி ஆகிவிடுகிறது.
ஆக, இப்படி மொழி பெயர்க்கப்பட்டதை அவர் சுட்டிக் காட்டுகிறார்.
இந்தோ – ஆரிய மொழிகளின் அடிப்படைக் கூறுகளில் காணப்படும் திராவிடத் தாக்கம்.
ஒரு மொழி, சொல்லைக் கடன் வாங்கலாம். ஆனால், இலக்கண அமைப்பைக் கடன் வாங்காது. ஆனால், அது கடன் வாங்கியிருக்கிறது என்று சொல்கிறோம்.
வளைநா ஒலிகள், திராவிடத்திற்கு உரியது;
இதை ரிக் வேதம் கடன் வாங்கியிருக்கிறது!
அதுமட்டுமல்லாமல், ரெட்ரோப்ளக்ஸ் என்று சொல்கின்ற வளைநா ஒலிகள். அந்த
வளைநா ஒலிகள், திராவிடத்திற்கு உரியது. இதை ரிக் வேதம் கடன் வாங்கியிருக்கிறது என்பதை அய்ராவதம் சுட்டிக்காட்டுகிறார்.
சொல் ஒட்டு நிலை விகுதி என்ற நிலையிலிருந்து பின் ஒட்டாக மாறிய தன்மை என்று நீங்கள் இலக்கண அடிப்படையில் பார்த்தாலும் சரி, தரவுகளின் அடிப்படையில் பார்த்தாலும், அகழாய்வுகளின் அடிப்படையில் பார்த்தாலும், எந்த வகையிலும், வேத நாகரிகம் என்று சொல்லப்படுகின்ற, அந்த இலக்கியங்கள் சுட்டுகின்ற வாழ்வியலுக்கும், இதற்கும் தொடர்பே இல்லை.
ஏனென்றால், தமிழர்களுடைய தொல் மரபில், திராவிடர்களுடைய தொல் மரபில், நகர்மய பண்பாடு என்பது ஊறிப் போயிருக்கிறது.
முதலில் குறிப்பிட்டதைப்போல, நகர்மய பண்பாட்டினுடைய வேளாண்மை உபரி, வணிகச் செழிப்பு, பல்வேறு தொழில்கள் செய்பவர்கள் சேர்ந்து வாழ்தல், வெளிநாட்டு தொடர்பு இருத்தல்.
‘‘காஸ்மாபாலிட்டன் லைப்!’’
இதற்கு பட்டினப்பாலையில் ஒரு பாட்டு வரும்.
மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப்
புலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையும்
முட்டாச் சிறப்பிற் பட்டினம்
(பட்டினப்பாலை 215-217)
அதாவது, ஓரிடத்தில் பல்வேறு மொழிகள் பேசுபவர்கள், கலந்து இனிது உறைந்தார்கள் என்று ஓர் இலக்கியம் 2200 ஆண்டுகளுக்கு முன்பு எழுதியிருக்கிறது என்றால், அதற்குப் பெயர்தான் ‘‘காஸ்மாபாலிட்டன் லைப்” என்பது.
ஒரு பெண்ணினுடைய உடல் வனப்பை வர்ணிக்கும்பொழுதே, ஒரு நகரத்தினுடைய நினைவு அவனுக்கு வருகிறது.
‘‘தொண்டி அண்ணல்” – தொண்டி நகரத்தைப் போன்று அழகானவள் என்று நகர நாகரிகம், வணிகச் செழிப்பு, ஏற்றுமதி வணிகம், கால்தரு களம் என்று பல்வேறு வகைகளிலும் சங்க இலக்கியம் பேசுகின்ற வாழ்வியல், சிந்துவெளியோடு பொருந்திப் போகிறது; கீழடியோடு பொருந்திப் போகிறது.
அதனால்தான் தொடர்ந்து சொல்லி வருகிறோம்,
‘‘சங்க இலக்கியம் என்பது இன்னும் முழுவதுமாக வாசிக்கப்படாத கீழடி.
கீழடி என்பது இன்னும் முழுவதுமாகத் தோண்டப்படாத சங்க இலக்கியம்.”
நாம் கொண்டாடாவிட்டால்,
வேறு யார் கொண்டாடப் போகிறார்கள்?
அந்த வகையில், சிந்துவெளியினுடைய அகழாய்வுத் தரவுகள் – சங்க இலக்கியத்தினுடைய உள்ளடக்கம்; கீழடி போன்ற அகழாய்வுத் தடங்கள் – இம்மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் சந்தித்துப் பேசும் தரவுகள் கிடைத்த காலத்தில், நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இதை நாம் கொண்டாடாவிட்டால், வேறு யார் கொண்டாடப் போகிறார்கள்?
வேறு யாரும் கொண்டாடவில்லை என்பதே, இதற்கான முதல் காரணமாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், இதைத் தமிழ்நாடு அரசும் கையிலெடுத்து, தமிழ் மக்களும் கையிலெடுத்து, நாம் அனைவரும் ஒருசேர நமக்கு நாமே இதை நினைவுறுத்திக் கொள்கிறோம் என்பதே, நம் எதிர்காலத்தைக் காப்பாற்றுவதாகும்.
காப்பாற்றப்படவேண்டியது நிகழ்காலமும், எதிர்காலமும் மட்டுமல்ல;
கடந்த காலமும்தான்!
பல பேர் நினைக்கலாம், கடந்த காலத்தைப்பற்றி நாம் ஏன் பேசுகிறோம் என்று.
வரலாறு முக்கியம் என்பது மட்டுமல்ல;
வரலாறு என்பது தவிர்க்க முடியாததும்கூட!
வரலாறு என்பதிலிருந்து தப்பிக்கவும் முடியாதது!
தரவுகளால் வரலாற்றைக் கட்டமைக்காவிட்டால், கட்டுக் கதைகள் நம்மீது வரலாறு என்ற பெயரில் சவாரி செய்யும்.
காப்பாற்றப்படவேண்டியது நிகழ்காலமும், எதிர்காலமும் மட்டுமல்ல; கடந்த காலமும்தான் என்று சொல்லி விடைபெறுகிறேன்.
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு ஒடிசா மாநில அரசின் மேனாள் தலைமைச் செயலாளரும், மதியுரைஞருமான பாலகிருஷ்ணன் அய்.ஏ.எஸ். (ஓய்வு) அவர்கள் சிறப்புரையாற்றினார்.