வி.சி.வில்வம்
அஞ்சம்மாள் ஒக்கநாடு
திராவிடர் கழகம் என்பது “மக்கள் இயக்கம்” என்பதற்கு ஏராளமான சான்றுகளை நம்மால் தர முடியும். தலைவர் கி.வீரமணி அவர்கள் குறிப்பிடுவதைப் போல இந்த இயக்கத்திற்கு இரண்டு வகை உறுப்பினர்கள் உள்ளனர். ஒன்று நேரடியாக இருப்பவர்கள், மற்றொன்று மறைமுகமாக தெரிபவர்கள். அப்படியான கருப்புடை அணிந்த உறுப்பினர்களில் மகளிரின் பங்கு அளப்பரியது; அவர்களின் இயக்க வாழ்க்கையும் நெகிழ்ச்சியானது!
குறிப்பாக எளிய மக்களால் சூழப்பட்டது இந்த இயக்கம்!
பொருளாதார வசதி இல்லாமல் இருப்பார்கள், மாற்றுத் திறனாளியாக இருப்பார்கள், இன்னும் பல நிலைகளிலும் இருப்பார்கள். எனினும் கொள்கை உறுதி கொண்டு, சத்தமில்லாமல் பல சாதனை களைப் படைத்திருப்பார்கள். வசதிகள் போய் சேராத குக்கிராமத்தில் கூட, பகுத்தறிவுச் சிந்தனையோடு, கடவுள் மறுப்பாளராக இருப்பார்கள். குறைந்த கல்வி, பெரிய வாசிப்பு இல்லாத சூழலிலும் கொள்கைத் தெளிவோடு இருப்பார்கள், நுணுக்கமாகப் பேசுவார்கள்.
அதிலும் மாற்றுத் திறனாளியாக இருந்து, கொள்கை பேசுபவர்கள் கூடுதல் விமர்சனத்திற்கு ஆளாவார்கள். “நீ இருக்கிற இருப்பிற்கு கடவுள் இல்லை என்று சொல்கிறாயா?”, எனக் கிண்டல் செய்வார்கள். அப்படியான சவால்கள் நிறைந்த தொண்டர்களைக் கொண்டது தான் இந்த இயக்கம்! ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் ஒரு அறிவிப்பிற்குத் தோழர்கள் திரள்கிறார்கள் என்றால், அதுதான் இந்த இயக்கத்தின் வலிமை. அப்படியான ஒரு எளிய மகளிர் தொண்டரைத் தான், இந்த வார சந்திப்பில் காண இருக்கிறோம்.
அம்மா வணக்கம்! உங்கள் பெயர் என்ன?
இயக்க அறிமுகம் எப்படி ஏற்பட்டது?
எனது பெயர் அஞ்சம்மாள். வயது 70 ஆகிறது. சொந்த ஊர் கருவாக்குறிச்சி. இப்போது ஒக்கநாடு கீழையூரில் வசிக்கிறேன். 1967 இல் எனக்குத் திருமணம் நடைபெற்றது. அதன் பிறகே பெரியார் கொள்கையைத் தெரிந்து கொண்டேன். எங்கள் திருமணம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும்.
எந்த அடிப்படையில் அம்மா
அப்படி சொல்கிறீர்கள்?
திருமணமான போது எனக்கு 18 வயது. இணையர் பெயர் மாணிக்கம். தமிழ்நாட்டிலேயே பெரியாருக்கு முதன்முறையாகச் சிலை வைக்கப்பட்டது திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் தான்! ஆண்டு 1967. அந்த நிகழ்வில் பெரியார், அண்ணா, காமராசர், கலைஞர், ஆசிரியர், குன்றக்குடி அடிகளார் போன்றோர் கலந்து கொண்டனர். அந்த விழா மேடையில் தான் எங்கள் சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றது. சிலை திறப்பின் போதுதான் திருமணத்தை நடத்த வேண்டும் என, எனது இணையர் பிடிவாதமாக இருந்துவிட்டார். அதுமட்டுமின்றி வேறொரு முக்கிய சம்பவமும் அவரது வாழ்வில் நிகழ்ந்துவிட்டது.
அது என்னம்மா முக்கியமான சம்பவம்?
திருமணத்திற்கு இரண்டு வாரம் முன்புதான் அவர் சிறையில் இருந்து வெளியில் வந்தார். 1963 இல் கிராமத்தில் நடைபெற்ற பிரச்சினை ஒன்றில் ஒரு கொலை நடந்துவிட்டது. உடனே இணையரையும் கைது செய்து தஞ்சை சிறையில் அடைத்துவிட்டார்கள். அதனைத் தொடர்ந்து நடந்த வழக்கில் தஞ்சாவூர் “செசன்” நீதிமன்றம் இணையருக்குத் தூக்குத் தண்டனை விதித்துவிட்டது.
உடனே, அன்றைய தினத்தந்தி நாளிதழில் “திக பிரமுகருக்குத் தூக்குத் தண்டனை” எனப் பெரியளவில் செய்தி வந்தது. இதனைப் பார்த்த பெரியார், உடனே கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வழக்குரைஞர் மோகன் குமாரமங்கலம் மூலம் மேல்முறையீட்டு வழக்கைத் தொடுத்தார்.
பிறகு என்ன ஆனது?
தொடர்ந்து நடந்த வழக்கில் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்டு, அய்ந்தாண்டு சிறை என மாற்றப்பட்டது. பிறகு நன்னடத்தை விதிகளின் அடிப்படையில் மேலும் சில ஆண்டுகள் குறைக்கப்பட்டு, 1967 இல் விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கிற்கு எம்.ஆர்.ராதாவும் நன்கொடை வழங்கினார்.
தஞ்சை சிறையில் இருந்தபோது, இணையருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. உடனே திருச்சி மருத்துவமனைக்குச் அழைத்துச் சென்றார்கள். சிகிச்சை முடிந்ததும், திருச்சி மாளிகையில் பெரியார் சந்தித்துவிட்டு வந்தார். அய்யாவும் செலவுக்குப் பணம் கொடுத்து அனுப்பினார்கள்.
இயக்கத்திலும், குடும்பத்திலும்
உங்கள் இணையருக்கு உறுதுணையாக இருந்துள்ளீர்கள்?
ஆமாம்! அவருடன் பயணம் செய்வதே எனது பெரும் பணியாக இருந்துள்ளது. 2010 ஆம் ஆண்டு அவர் இறந்ததற்குப் பின்னாலும் மாநாடு, பொதுக்கூட்டம், போராட்டம், ஆர்ப்பாட்டம் என, எங்கள் மகன் கவுதமனுடன் சென்று வருகிறேன். சில ஆண்டுகளுக்கு மேனாள் டிசம்பர் 2 ஆம் தேதி ஆசிரியருக்குப் பிறந்த நாள் விழா ஏற்பாடு செய்திருந்தார்கள். தொடர் மழை காரணமாக திடீரென நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
எனினும், நானும், எனது மகனும் அடாத மழையிலும், சென்னை சென்று ஆசிரியருக்கு வாழ்த்து சொல்லிவிட்டு வந்தோம். ஆசிரியர் கூட இவ்வளவு தூரம் ஏன் பயணித்து வந்தீர்கள் எனக் கேட்டார்.
எங்கள் மகனுக்கு கவுதமன் எனப் பெயரிட்டது பெரியார் தான்! மகள் பெயர் மணியம்மை. பெரியார் பிறந்த நாளன்று கிராமமே கொடி கட்டி, இனிப்பு மற்றும் உணவு வழங்கி கொண் டாடுவோம்!
உங்கள் இணையர் குறித்த நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்?
தஞ்சாவூர் மாவட்டத்திற்குப் பெரியார் எங்கு வந்தாலும், கழகக் கொடியை மிதிவண்டியில் பறக்கவிட்டு, போய்விடுவார். 15 வயது முதலே அவர் இயக்கத்தில் வேலை செய்யத் தொடங்கி விட்டார்.
மன்னார்குடி அருகே உள்ளிக் கோட்டையில் நடைபெற்ற பெரியார் கூட்டத்திற்கு, ஒக்கநாடு கீழையூரில் இருந்து மிதிவண்டியில் சென்றது தான் முதல் கூட்டம் என அடிக்கடி கூறுவார். அதேபோல ஒக்கநாடு கீழையூரில் கொடி ஏற்றுவதற்காக, உரத்தநாடு வரை நடந்தே சென்று, மூங்கில் கம்பு வாங்கி வந்தார். அதில் ஏற்றப்பட்ட கொடி பலப்பல ஆண்டுகளாய் எங்கள் வீட்டில் பறந்தது.
உப்புண்டார்பட்டி சுப்பிரமணியன் என்பவரின் திருமணத்திற்குப் பெரியார் வந்தபோது, அவரின் வேனிலேயே இணையர் மாணிக்கத்தை அழைத்து வந்து, வீட்டு வாசலில் இறக்கி விட்டு சென்றார். மறைவுறும் வரையிலும் இந்தச் செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொண்டார் இணையர்.
அதேபோல உரத்தநாட்டில் நம் கழகத்திற்கு ஒரு கட்டடம் வேண்டும் எனப் பெரியார் விரும்பினார். அப்போது பனைமரம் குறித்தெல்லாம் பெரியார் விசாரித்தார். அந்தக் கட்டடத்திற்கான தச்சு வேலைகளை இணையர் தான் செய்து கொடுத்தார்.
சர்வேயராக இருந்த கைலாசமுத்து என்பவர் தான் கட்டட மேற்பார்வையைப் பார்த்துக் கொண்டார். சட்ட எரிப்பின் போது 6 மாதம் திருச்சி சிறையில் இருந்தார். தேசப்பட எரிப்பு, இராமர் பட எரிப்பு, பிள்ளையார் சிலை உடைப்பு என அத்தனையிலும் கலந்து கொண்டுள்ளார். அவர் வாழ்ந்த காலத்தில் அவருடன் இயக்கப் பயணம் செய்த நான், இப்போது என் மகன் கவுதமன் அவர்களுடன் முடிந்தவரை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறேன்”, என அஞ்சம்மாள் தமது உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டார்.
உரத்தநாட்டில் இருந்து மன்னார்குடி செல்லும் பிரதான சாலையில் உள்ளது இவரது வீடு. திராவிடர் இயக்கப் ஒளிப்படங்களால் அழகு செய்யப்பட்டு இருக்கிறது. பெரியார், அண்ணா, பாரதிதாசன், காமராசர், கலைஞர், ஆசிரியர் கி.வீரமணி, குன்றக்குடி அடிகளார் ஆகியோர் படங்கள் அணிவகுத்து நிற்கின்றன! சின்னத்தாயம்மையார், நாகம்மையார், மணியம்மையார் படங்களும், பர்மாவில் அம்பேத்கர் உடன் பெரியார் இருக்கும் படமும் அலங்கரிக்கின்றன. தவிர 13.11.1938 இல் “பெரியார்” எனும் பட்டத்தை பெரியார் வாங்குவது போன்ற ஓவியமும், 08.01.1940 பம்பாயில் பெரியார், ஜின்னா, அம்பேத்கர் பேசிக் கொண்டிருக்கும் படமும் வரலாற்று ஆவணங்களாய் சுவர்களில் மிளிர்கின்றன!