சொல்லாய்வுச் செம்மல்
குடந்தய் வய்.மு. கும்பலிங்கன்
இன்றைய நாளில், ஊரில், நகரில், நாட்டில் உலகில் கடவுள் இருக்கிறாரா. அன்றி இல்லையா? என்ற பிரச்சினை மிகப் பெரும் பேசு பொருளாக, விவாதப் பொருளாக, பட்டிமன்றப் பொருளாக இருந்து வருகிறது.
ஆத்திக நண்பர்கள் கடவுள் இருக்கிறார் என்றும், நாத்திக நண்பர்கள் கடவுள் இல்லை” என்றும் விவாதித்துப் பேசித் தங்கள் காலத்தை வீணே வெட்டியாகக் கழிக்கின்றனர். இதன் காரண மாகச் சமுதாயத்தில் நடைபெற வேண்டிய மனித சக்திகள் மனித வேலைகள் மனித ஆற்றல்கள் முடக்கப்பட்டு அடக்கப்பட்டுக் கிடக்கின்றன.
வேண்டத்தகாத, விரும்பத்தகாத, வெறுக்கத் தக்க, ஒதுக்கத்தக்க இந்த வெட்டி விவகாரத்துக்கு வேலைக்கு ‘கடவுள் இருக்கிறார்” என்று ஒத்துக் கொள்வதான உடன்பாட்டுக் கருத்துமூலம் முடிவு கட்டவும், முற்றுப்புள்ளி வைக்கவும் முடிவுரை வழங்கவும் விரும்பி எங்ஙனம் முன் வருகிறேன் வந்திருக்கிறேன். எப்படி? எவ்வாறு? எவ்விதத்தில்?
கடவுள் இருக்கிறார் அல்லது இருந்து விட்டுப் போகட்டும் என்பதை வாதத்திற்காக, விவாதத் திற்காக நான் இங்கு ஒப்புக் கொள்ள விரும்புகிறேன். ஏன் இல்லாத பொருளுக்கு நாம் நிழல் சண்டை இட வேண்டும். வீண் போர் நிகழ்த்த வேண்டும் கடவுள் இருக்கிறார் என்பதை ஒப்புக்கொண்டு அவரை நாம் ஒரு ஓரத்தில் அமர்த்தி விடுவோம் ஒதுக்கி விடுவோம்” என்பதுதான் என் உண்மையான மனக்கருத்து.
அவரும் என்னைப்போல் – நம்மைப் போல் ஒரு மனிதர் ஓர் உயிரி ஓர் ஆள் என்பதை உலகுக்கு உணர்த்துவோம். ஆம் அறிமுகப்படுத்துவோம் ஆதாரப்படுத்துவோம்.
நான் வாழ்கிற இந்த ஊரில் இந்த உலகத்தில், நான் இருக்கிற இந்த ஊரில் இந்த உலகத்தில் கடவுள் என்ற பெயரில் அவரும் வாழலாம்தானே இருக்கலாம்தானே! இல்லாமல் போவதற்கு அவர் என்ன பாவம் செய்தார்? என்ன குற்றம் இழைத்தார்?
ஏன், காலிப் பயலும், காவாலிப் பயலும் வாழ்கிற இந்த ஊரில் இந்த உலகில் கடவுள் மட்டும் வாழக் கூடாதா என்ன? இருக்கக் கூடாதா என்ன?
முடிச்சவிழ்க்கியும், மொள்ளமாறியும் வாழும் உரிமை பெற்ற இந்த ஊரில்,
நாட்டில், உலகில் கடவுளும் இருக்கலாம்தானே! இருப்பதில் தப்பென்ன? தவறென்ன?
குறையென்ன? குற்றமென்ன?
சிங்கமும், புலியும், கரடியும், சிறுத்தையும் காட்டில் வாழ்வதற்கு உரிமை பெற்றது உண்மை யானால், ஊரில் – நாட்டில் – உலகில் வாழ வாழும் உரிமை பெற்ற மனிதர்களாகிய நம்மைப் போல் அந்தக் கடவுளரும் வாழ முழுத்தகுதியும் உரிமையும் பெற்றவர் ஆவார்தாமே!
பல்லியும், பாம்பும், பூரானும், பூச்சியும் வாழ வல்லமை பெற்ற உரிமை பெற்ற இந்தப் பூமியில் கடவுளும் வாழலாம்தானே இருக்கலாம்தானே கள்ளச் சாவி போடுபவனும், பாலியல் வன் கொடுமை செய்பவனும் செய்தவனும், கள்ளக் காதல் செய்பவனும், கள்ளக்கணக்கு எழுதுபவனும் வாழ்வதற்கு உரிமை பெற்ற இந்த ஊரில், நாட்டில், உலகில் கடவுளும் அவர் பாட்டுக்கு ஓர் ஓரத்தில் இருந்து விட்டுப் போகட்டுமே!
வாழ்ந்து விட்டுப் போகட்டுமே! இந்த உலகத்தில் இருப்பதற்கும். வாழ்வதற்கும், அனுபவிப்பதற்கும், நுகர்வதற்கும் 100 க்கு 100 உரிமை பெற்றவன் நான் என்பது எவ்வளவு பெரிய உண்மையோ, அதை விடப் பேருண்மை கடவுளுக்கும் உண்டு என்பதே ஆகும்.
இதில் தயக்கத்திற்கும், மயக்கத்திற்கும், மறுப்பிற்கும் துளியேனும் வேலையில்லை; சந்தேக மில்லை. ஆம், என்னைப் போல அனைத்து முழு உரிமைகளையும் கடவுள் பெற்றவர் ஆவார். இதிலொன்றும் அய்யமில்லை; சந்தேகமில்லை.
ஆனால், என்ன பிரச்சினை? என்ன கொடுமை? கடவுள் என்னும் பெயரில் அந்த மனிதர் – அந்த ஆள் அந்த உயிரி பிறர் எவரையும் அரசாட்சி செய்ய, ஆட்டிப்படைக்க, அதிகாரம் செலுத்த, அடிமைப்படுத்த உரிமை பெற்றவர் அல்லர்.
அந்த மனிதர் அடுத்தவர் நடவடிக்கையை எட்டிப் பார்க்கவும், அடுத்தவர் செயல்பாடுகளில் மூக்கை நுழைக்கவும் அதிகாரம் பெற்றவர் அல்லர். அந்தக் கடவுள் என்ற மனித உயிரி என்னினும், எவ்வகையிலும் மேம்பட்டவரோ, உயர்ந்தவரோ. பெரியவரோ அல்லர்.
இந்த உலகில், நாட்டில், நகரில், ஊரில் எவர் ஒருவரையும் தாழ்மைப்படுத்த கீழ்மைப்படுத்த – கேவலப்படுத்த எவர் ஒருவருக்கும் அதிகார உரிமை அதிகார ஆணவம் அதிகார ஆளுமை கிடையாது எவர் ஒருவரும் அவரவர் தகுதி திறமைக்கு ஏற்ப சிறப்பையும், பெருமையையும் அடைவர் அடையலாம் என்பது வேறு செய்தி, ஆம் ‘பெருமைக்கும், சிறுமைக்கும் அவரவர் கருமமே கட்டளைக் கல்” என்பதுதானே வள்ளுவப் புலவர் வகுத்துத் தந்த திருக்குறள் கருத்து.
இங்கு வாழ்கிற அந்த மனிதக் கடவுள் என்னில் ஒருவராக என்னுள் ஒருவராக – என்னால் ஒருவராக இருக்க வேண்டும் என்பதே என் கணிப்பு; உள்ளார்ந்த எண்ணம்.
அந்த மனிதக் கடவுள் எனக்குத் தாயாக தந்தையாக, தாத்தாவாக, ஆத்தாவாக, அண்ணனாக, அண்ணியாக தம்பியாக, தங்கையாக, மாமாவாக. மாமியாக, அத்தையாக, அத்தானாக ஏதாவது ஒரு வகையில் துணை செய்பவராக, துணை நிற்பவராக அவசியம் இருக்க வேண்டும்.
இந்தத் தகுதிகள் அனைத்தும் ஒரு சேரப் பெற்ற கடவுளர் ஒருவர் ஆனாலும், பலபேர் ஆனாலும் அவர்கள் இருக்கிறார்கள். இருக்கலாம் வாழ்கிறார்கள்: வாழலாம். என்பதில் அய்யமில்லை; ஆட்சேபனை இல்லை.
இதே நிலைக்கும், கட்டுப்பாட்டு விதிமுறை களுக்கும் உட்பட்டு வரும் கடவுளர்கள் இருப்பார்கள் இருக்கிறார்கள் அவர்களும் இருக்கலாம்தானே! இருக்கட்டும்தானே! இருந்துவிட்டுப் போகட்டும் தானே!