சமீபத்தில் பார்ப்பனப் பெண் ஒருவர் திருப்பதி லட்டுவில் பலர் கைபடுவதால் தீட்டாகிவிட்டது நான் சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன் என்று கூறியிருந்தார். அது கடுமையான கண்டனத்திற்கு ஆளாகி இருந்தது.
இந்த நிலையில் கருநாடகாவைச் சேர்ந்த படித்த பார்ப்பனப் பெண் ஒருவர் தனது காரில் பார்ப்பன மரபணு என்று முன்பக்கம் பின்பக்கம் இடது மற்றும் வலது புறங்களில் பெயிண்ட் செய்து அதனோடு ஒளிப்படமும் எடுத்து வெளியிட்டுள்ளார்.
படித்த பெண் ஒருவர் பெருமையோடு தான் வர்ணத்தில் முதலிடமுள்ள பார்ப்பன மரபணுகொண்டவள் என்று பெருமையோடு காரில் பிரிண்ட் செய்து அலைகிறார்.
அதே கருநாடகாவில் தாழ்த்தப்பட்ட சமூகச் சிறுவன் ஒருவர் தேர் வரும் போது அந்தத் தேருக்கு தடையாக இருப்பவற்றை அகற்றப் பயன்படும் கம்பைத் தொட்டுவிட்டார் என்பதற்காக அந்தச் சிறுவனை அடித்து துன்புறுத்தி அச்சிறுவனின் குடும்பத்தாருக்கு ரூ.50,000 அபராதம் விதித்தனர்.
மகாராட்டிராவில் கோவிலுக்கு கும்பிட வந்த ராணுவ வீரரை அவர் தாழ்த்தப்பட்டச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்று தெரிந்துகொண்டதும் அவரை இழுத்துக் கொண்டுவந்து வெளியே போட்டனர்.
பார்ப்பனர்களின் ஜாதிப்பெருமையால், நாட்டில் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழ்கின்றன, ஒவ்வொரு நாளும் 6 தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.