குண்டு பென்குயினும் உண்டு உலகிலே!

viduthalai
1 Min Read

குழந்தைகள் கொழுகொழுவென இருந்தால் யாருக்குத்தான் பிடிக்காது? கன்னத்தைக் கிள்ளுவதும், கொஞ்சுவதும் என அன்புத் தொல்லை செய்வார்கள். இது மனிதக் குழந்தைகளுக்கு மட்டும் நடப்பதல்ல, விலங்குகளுக்கும் நடக்கும். இப்படித்தான் ஒரு குண்டு பென்குயின் உலகெங்கும் ரசிகர்களைப் பெற்றுள்ளது.
தென் துருவத்தை ஒட்டிய பகுதிகளில் மட்டுமே வாழ்பவை பென்குயின்கள். பறக்க முடியாத இந்தப் பறவைகள் இரு கைகளை அசைத்துப் பனியில் நடந்து செல்வதே அழகாகத்தான் இருக்கும்.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள கடல்வாழ் உயிரினங்கள் சரணாலயத்தில் ஜனவரி 30, 2024 அன்று அவகோடா காய் அளவே உள்ள முட்டையிலிருந்து பிறந்தது பெஸ்டோ எனும் பென்குயின். ஒன்பதே மாதங்களில் மடமடவென வளர்ந்து 22.5 கிலோ எடையை அடைந்துவிட்டது.
நாள்தோறும் 25 மீன்கள் உண்கிறது. பொதுவாக இதன் இனத்தை சேர்ந்த பென்குயின்கள் 18 கிலோ வரையே வளரும். அதன் அதீத எடை காரணமாக மிகவும் பருமனான தோற்றதைப் பெற்றுள்ளது.

தவிர பொதுவாகக் குழந்தைப் பருவத்தில் பென்குயின்களுக்கு உடல் முழுக்க முடிகள் நிறைந்திருக்கும். இது மிகச் சிறிய வயதிலேயே உயரமாகவும், பருமனாகவும் வளர்ந்துவிட்டதால் பார்ப்பதற்கு ‘டெடி பியர்’ பொம்மை போல் அழகாக உள்ளது.

எனவே இதைப் பார்ப்பதற்குப் பல ரசிகர்கள் சரணாலயத்திற்கு வருகின்றனர். அத்துடன் இன்ஸ்டா, யு டியூப், மீம்ஸ் என அனைத்திலும் இதன் நிழற்படம், காட்சிப் பதிவு பதிந்து, இதைப் பற்றி எழுதி வருகின்றனர். இதனால், இதற்கு உலகெங்கிலும் ரசிகர்கள் கிடைத்துள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *