துணை முதலமைச்சர் உதயநிதி கருத்து
சென்னை, அக்.10- சென்னையில் கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் சங்க மாநாட்டில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஸநாதனம் குறித்து பேசிய கருத்து சர்ச்சையானது. அவருடைய உருவப்படங்கள் அவமதிக்கப்பட்டன. தற்போது இந்த காட்சிகள் சமூக வலை தளங்களில் மீண்டும் உலா வரத் தொடங்கி உள்ளது.
இந்த நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அந்தக் காட்சிகளை தனது சமூக வலைதள பக்கத்தில் இணைத்து வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
‘‘என்னை இழிவு செய்வதாக நினைத்து, தங்களின் அரசியல் முதிர்ச்சி இவ்வளவு தான் என்று அம்பலப்பட்டு நிற்கும் சங்கிகளைப் பார்த்து எனக்குப் பரிதாபம் மட்டுமே வருகிறது. கொள்கை எதிரிகளுக்கு நம் மீது இவ்வளவு ஆத்திரம் வருகிறது என்றால், திராவிடக் கொள்கையினை நான் எந்தளவுக்குச் சரியாக பின்பற்றுகிறேன் என்பதற்கான சான்றிதழாகவே இதனைப் பார்க்கிறேன்.
பெரியார் மீது செருப்புகளை வீசினர். அண்ணல் அம்பேத்கரை எவ்வளவோ அவமதித்தார்கள். அண்ணாவை வசை பாடி மகிழ்ந்தனர். கலைஞர்மீது ஏச்சுக்களையும், பேச்சுக்களையும் தொடுத்தனர். நம் தலைவர் (முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்) மீது வீசப்படாத கடுஞ்சொற்கள் இல்லை. அனைவரும் சமம் என்கிற நமது கொள்கை அவர்களுக்கு எரிச்சலூட்டுகிறது.
பிறப்பாலும், மதத்தாலும் பிரித்தாளும் கொள்கையைப் பேசி மக்களை வெல்ல முடியாத அவர்களின் விரக்திதான் நம்முடைய வெற்றி. என் ஒளிப்படத்தை அவர்கள் காலால் இன்னும் நன்கு மிதிக்கட்டும். அவர்களின் அழுக்கேறிய மூளையை நம்மால் சுத்தம் செய்ய முடியாது. அவர்களின் கால்களாவது சுத்தமாகட்டும். தி.மு.க.வினர் இதைக்கண்டு கோபமுறவேண்டாம். இதற்கு எதிர்வினையாற்றுவதை, உணர்ச்சிவசப்படுவதை தவிர்த்து, பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழியில் பகுத்தறிவு, சமத்துவப் பாதையில் என்றும் அயராது நடை போடுவோம்.’’
-இவ்வாறு அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.