சென்னை, அக். 8- புத்தர் கலைக்குழு சார்பில் பெரியார் திடலில் 29.09.2024 காலை 11 மணிக்கு தந்தை பெரியார் அவர்களின் 146ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
தந்தை பெரியார் அவர்களின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து, சமூகநீதி நாள் உறுதிமொழி கூறி தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் மற்றும் அண்ணல் அம்பேத்கர் ஆகியோரின் கொள்கை முழக்கப் பாடல்களை தோழர் மகிழினி மற்றும் தேஜஸ்சிறீ ஆகியோர் பாடினர். பெரியார் பிறந்தநாள் மகிழ்வாக கேக் வெட்டி வந்திருந்த அனைவருக்கும் வழங்கப்பட்டது.
புதுமை இலக்கிய தென்றல் செயலாளர் வை.கலையரசன் பெரியாரைப் பற்றியும், பெரியாரால் எவ்வாறு வாழ்கிறோம் மற்றும் ஆரியர், திராவிடர் போராட்டம் பற்றியும் மாணவர்களிடையே எடுத்துக் கூறினார்.
அதனைத் தொடர்ந்து திராவிடர் கழக துணை பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் மாணவர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்து தந்தை பெரியாரின் கொள்கைகளைப் பற்றியும், பெரியார் திடல் மற்றும் பெரியார் திடல் இயக்கப் பணிகள், செயல்பாடுகள் குறித்தும் உரையாற்றினார். அதன் பிறகு பெரியார் சிலை முன்பாக புத்தர் கலைக்குழு கலைஞர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் சிலம்பம் மற்றும் பறையிசை நடனத்துடன் வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு! முழக்கங்களை எழுப்பினர்.
இறுதியாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் புத்தர் கலைக்குழு மணிமாறன் மற்றும் அவருடைய இணையர் மகிழினி ஆகியோருக்கு வாழ்த்துகளை கூறி வந்திருந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் குழுப்படம் எடுத்து நிகழ்ச்சி நிறைவுற்றது. நிகழ்வை வடசென்னை மாவட்ட மகளிர் பாசறை தலைவர் மரகதமணி மற்றும் இளைஞரணித் தலைவர் பார்த்திபன் ஒருங்கிணைத்தனர். வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், இளைஞரணி செயலாளர் பார்த்திபன், வழக்குரைஞர் வேலவன், அரூர் மாவட்ட இளைஞரணித் தலைவர் யாழ் திலீபன், ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் கார்த்திகேயன், ரவீந்திரன், விஜயகுமார் மற்றும் விக்னேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் மதிய உணவு (கோழி மற்றும் மாட்டுக்கறி) வழங்கப்பட்டது.