‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்திற்கு அய்.நா. விருது.. பூரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

viduthalai
3 Min Read

சென்னை, அக்.8 மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு அய்நா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முதலமைச்சர் முகஸ்டாலின் பெருமிதம் அடைந்துள்ளார். மேலும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு உலக அங்கீகாரம் தேடி வந்திருக்கிறது. நமது திட்டம், சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தின் அடையாளம்தான் இந்த விருது என்று அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள கடைக்கோடி கிராமத்தில் உள்ள மக்களுக்கும் மருத்துவ சேவையினை கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி வைத்தார். 5.08.2021 அன்று இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

கிராமப்புறங்களில் உள்ள மக்களின் நலன் கருதி அவர்களது இல்லங்களுக்கே சென்று தொற்றா நோய்களான உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்களுக்கு பரிசோதனைகள் செய்து, அதற்கான உரிய மருந்துகள் வழங்குவதற்காக இந்த திட்டமானது தொடங்கப்பட்டது. ஒன்றியம் மற்றும் மண்டல வாரியாக மருத்துவக் குழு பணி செய்து வருகிறது. இந்த மருத்துவக் குழுவில் ஒரு பெண் செவிலியர், ஒரு தன்னார்வலர் ஒரு இயன்முறை மருத்துவர் என குழுவாக சென்று பாதிக்கபட்ட மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். 1.80 கோடி மக்கள் இந்த திட்டத்தில் பயன்பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் தமிழ்நாட்டின் மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு அய்நாவின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அய்க்கிய நாடுகள் அமைப்பின் 2024 ஆம் ஆண்டிற்கான ‘‘United Nation Interagency Task Force Award’’ விருது, தமிழ்நாட்டின் மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செவிலியர்கள் மற்றும் அமைச்சர் மா சுப்பிரமணியனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-

இந்தியத் துணைக் கண்டத்துக்கே முன்னோடித் திட்டமாக நமது திராவிட மாடல் அரசில் செயல்படுத்தப்பட்டுள்ள மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு உலக அங்கீகாரம் தேடி வந்திருக்கிறது. ஒரு கோடியே 80 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இதுவரையில், இந்தத் திட்டத்தால் பயன்பெற்றுள்ளனர். ஒவ்வொருவரது இல்லத்துக்கும் சென்று மருத்துவச் சேவைகளை வழங்கும் நமது திட்டம், சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தின் அடையாளம்தான் அய்க்கிய நாடுகள் அமைப்பின் 2024 ஆம் ஆண்டிற்கான United Nation Interagency Task Force Award விருது.

சிறப்பான முறையில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி – கண்காணித்து – மேம்படுத்தி வரும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்களுக்கும், அவருக்குத் துணை நிற்கும் துறைச் செயலாளர் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத் துறைப் பணியாளர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். இந்தத் திட்டம் இன்னும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு மக்களுக்குப் பயனளிப்பதைத் தொடர்ந்து உறுதி செய்வோம். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்துக்கு அய்.நா. மன்றத்தால் விருது அறிவிக்கப்பட்டதற்கு செவிலியர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை மருத்துவப் பணியாளர்களுக்கும் பாராட்டு தெரிவிப்பதாக கூறியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் பல முற்போக்குத் திட்டங்களில் முக்கியமானது மக்களைத் தேடி மருத்துவம்.

கரோனா 2-ஆம் அலை வேகமெடுத்தபோது தொடங்கப்பட்ட இத்திட்டம், இதுவரை 1 கோடியே 80 லட்சம் மக்களை சென்றடைந்து, மேலும் சேவையை தொடர்கிறது. இதனைப் போற்றுகிற வகையில், அய்.நா. மன்றம் சார்பில் United Nations Interagency Task Force விருது – ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தொண்டாற்றி வரும் மருத்துவர்கள் – செவிலியர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை மருத்துவப் பணியாளர்களுக்கும் என் வாழ்த்தையும் – பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *