சென்னை, அக்.7- தமிழ்நாட்டில் அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியா்கள் 55,478 பேருக்கு கையடக்கக் கணினி வழங்கப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
மாறி வரும் கற்றல்-கற்பித்தல் முறைகளுக்கேற்ப அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கும் கையடக்கக் கணினி (டேப்லெட்) வழங்கப் படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது.
இதையடுத்து தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மூலமாக கையடக்கக் கணினி கொள்முதல் செய்யப்பட்டு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கு விநியோகம் செய்யும் பணிகள் நடை பெற்று வருகின்றன.
அதன்படி கடந்த கல்வியாண்டில் (2023-2024) முதல்கட்டமாக ஆரம்பப் பள்ளிகளில் பணிபுரியும் 79,723 இடைநிலை ஆசிரியா்களுக்கு ரூ.101.48 கோடியில் கையடக்கக் கணினிகள் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப் பட்டன.
இதற்கு ஆசிரியா்கள் தரப்பில் பரவலாக நல்வரவேற்பு கிடைத்தது. தற்போதைய தொழில்நுட்பச் சூழலுக்கு ஏற்ப தங்கள் திறன்களை மெருகேற்றிக் கொள்ளவும், சிறந்த கற்பித்தல் பணி களுக்கும் வழி செய்வதாக ஆசிரியா்கள் தெரிவித்தனா்.
இந்தநிலையில் தொடா்ந்து 2- ஆவது கட்டமாக நிகழ் கல்வியாண்டில் (2024-2025) அரசு நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 55,478 ஆசிரியா்களுக்கு கையடக்கக் கணினிகள் வழங்கப்பட உள்ளன. இதற்கான கொள்முதல் சாா்ந்த பணிகள் பாடநூல் கழகம் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்தச் செயல்பாடுகளை துரிதமாக முடித்து ஆசிரியா்கள் பயன்பாட்டுக்கு விரைவில் கையடக்கக் கணினிகள் வழங்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.