மழைக் காலத்திற்கு முன் வடிகால் தூர்வாரும் பணிகள் : அமைச்சர் கே. என். நேரு அறிவிப்பு

viduthalai
2 Min Read

சென்னை, அக்.5- சென்னையில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி 10ஆம் தேதிக்குள் முடிக் கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட அலுவலகத் தில் சென்னையில் கொசு ஒழிப்பு பணிக்காக ரூ.67 லட்சம் மதிப்பீட்டில் கையினால் இயக்கும் 100 புகைப்பரப்பும் எந்திரங்களை களப்பணியாளர்களுக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு நேற்று (4.10.2024) வழங்கினார்.

பின்னர், அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர் களிடம் கூறியதாவது:-

சென்னையில் முதல் கட்டமாக 792 கிலோ மீட்டர் நீளமுள்ள மழைநீர் வடிகால்கள் தூர்வாரும் பணி முடிக்கப்பட்டுள்ளது. 1,152 கிலோ மீட்டர் நீளத்திற்கு நடைபெற்று வரும் தூர்வாரும் பணி வரும் 10ஆம் தேதிக்குள் முடிக்கப்படும்.

இதுபோக 53 கிலோ மீட்டர் நீளமுள்ள 33 நீர்வழிக் கால்வாய்களில் ஆகாயத் தாமரைகள் மற்றும் வண்டல்கள் தூர்வாரும் பணி நடந்து வருகிறது.

தயார் நிலை

2021ஆம் ஆண்டு முதல் தற்போதுவரை 784.96கிலோ மீட் டர் நீளத்திற்கு புதியதாக மழைநீர் வடிகால்கள் கட்டப்பட்டுள்ளது. மேலும், கொசஸ்தலையாறு, கோவளம் வடிநிலப் பகுதிகளில் 350 கிலோ மீட்டர் நீளத்திற்கு ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்கள் கட்டப்பட்டு வருகிறது. தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழை நீரை வெளி யேற்ற பல்வேறு திறன் கொண்ட 990 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன.

162 நிவாரண மய்யங்கள் தயார் நிலையில் உள்ளன. சிந்தாதிரிப்பேட்டை மற்றும் கோபாலபுரத்தில் உள்ள பொது சமையல் கூடங்களில் மணிக்கு 1,500 பேருக்கு உணவுப் பொட்டலங்கள் தயார் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வார்டு களிலும் புயல் மற்றும் மழைநீர் அகற்றும் அவசரப் பணிகளுக்கு 5 பேர் தற்காலிகமாக பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

நோய்த்தடுப்பு பணி

15 மண்டலங்களுக்கும் அய்.ஏ.எஸ். அதிகாரிகள் கண்காணிப்பு அலுவலர் களாக நியமிக்கப்பட் டுள்ளனர். இவர்கள் மழை நீர் வடிகால் பணிகளை கண்காணித்து வருகின்றனர்.

இதுபோக, சென்னை மாநகராட்சியின் 16 சுரங்கப் பாதைகள் மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் 6 சுரங்கப்பாதைகள் ஆகியவற் றில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற,மோட்டார் பம்புகள் மற்றும் ஜென ரேட்டர்கள் தயார் நிலையில் உள்ளன.
கொசுக்களால் பரவும் நோய்த்தடுப்பு பணிக்காக நிரந்தர மற்றும் தற்காலிகப் பணியாளர்கள் என 3,368 களப்பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

அதிக மழைநீர் தேங்கும் இடங்கள் கண்டறியப்பட்டு, எதனால் அந்த இடத்தில் மழைநீர் தேங்கியது என கண்டறிந்து, அதற்கேற்ப நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகிறது.

-இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார். மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், கூடுதல் ஆணையர் ஜெய சந்திர பானு ரெட்டி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *