அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகத்தின் எதிர்ப்பையும் மீறி மேனாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்ட குழுவின் பரிந்துரைகளை ஏற்று ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதை மோடி அரசு செப்டம்பர் 18 இல் முடிவு செய்தது. மக்களவைத் தேர்தல், மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் இரண்டையும் ஒன்றாக நடத்த வேண்டும், அடுத்த 100 நாட்களுக்குள் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று அந்த குழு பரிந்துரைத்துள்ளது. நாடாளுமன்றம், சட்டமன்றம் இரண்டிலும் அரசியல் அமைப்பு சட்டத் திருத்தங்களை கொண்டு வருவதன் மூலமே இதனை நிறை வேற்ற முடியும்.
நன்மைகளை கூறவில்லை!
ஒரே நேரத்தில் தேர்தல் என்ற பிரச்சினை பல நாள்களாக விவாதத்தில் உள்ளது. 2013 ஆம் ஆண்டிலேயே அதிக செலவுகள் மற்றும் வளர்ச்சி நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுவதாக காரணம் கூறி ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை நரேந்திர மோடி வலியுறுத்தி இருந்தார்.அதன் பிறகு பல்வேறு குழுக்கள் இதை ஆய்வு செய்தாலும் சாத்தியமான ஒரு தீர்வு எட்டவில்லை. இந்த சூழலில் தான் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.ஒரே நேரத்தில் ஏன் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதில் உள்ள நன்மைகள் என்ன என்று விளக்குவதைக் காட்டிலும் தேர்தல் அட்டவணை அது நடத்தப்படும் வழிமுறைகளை இந்த குழு தெளிவாக எடுத்துரைத்துள்ளது.
ஆட்சியாளர் விருப்பத்தை ஏற்று…
செப்டம்பர் 2, 2023-இல் இந்த குழு நிறுவப்பட்டது. 391 நாள்கள் வேலை செய்து 18,626 பக்கங்கள் அறிக்கையை 16.3.2024இல் அளித்தது. அதன் உறுப்பினர்களில் பல்வேறு துறைகளைச் சார்ந்த புகழ்பெற்றவர்கள் அடங்குவர். அரசியல் கட்சிகள், மேனாள் தலைமை நீதிபதிகள், மேனாள் தலைமை தேர்தல் ஆணையர் உள்ளிட்ட சட்ட நிபுணர்களிடமும் கருத்து கேட்டது. இந்திய பார் கவுன்சில், இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்புப் பேரவையும் தங்கள் கருத்தை முன்வைத்தன. பொதுமக்களின் ஆலோசனைகளும் வரவேற்கப்பட்டன.
மாநில கட்சிகளை ஓரங்கட்டி….
21,558 பதில்கள் வந்துள்ளதாகவும் 80 சதவீதம் பேர் ‘‘ஒரே நேரத்தில் தேர்தலை” ஆதரிப்பதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டியது. ஆனால் இந்தி, ஆங்கிலம் இரண்டு மொழியில் தான் கேள்வி – பதில்கள் பெறப்பட்டுள்ளன. எனவே, இந்தியாவின் அனைத்து பகுதிகளையும் இது பிரதிபலிக்கவில்லை என விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 47 அரசியல் கட்சிகளிடமிருந்து ஆலோசனைகள் வந்தன. அதில் (32 பேர்) கூட்டணி கட்சிகள் என்டிஏ (NDA) உறுப்பினர்கள்) ஆதரித்தனர் மற்றும் 15 பேர் எதிர்த்தனர். இது ஜனநாயகத்திற்கும், கூட்டாட்சிக்கும் எதிரானது என எதிர்க்கட்சிகள் முத்திரை குத்தின. மாநில கட்சிகளை ஓரங்கட்டி தேசிய கட்சிகளின் ஆதிக்கத்திற்கு வழிவகுக்கும் மற்றும் ஜனாதிபதி ஆட்சி முறையிலான அரசாங்கத்திற்கு இட்டுச் செல்லும் என கவலை வெளியிடப்பட்டது. இந்த பங்களிப்புகள் மற்றும் ஆய்வுகளின் அடிப்படையில் குழு ஒரு ஆழமான பகுப்பாய்வை நடத்தியது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விரிவான அறிக்கையை குழு அளித்தது. 21 தொகுதிகளைக் கொண்ட இணைப்பையும் வெளியிட்டுள்ளது. அரசியல் சாசனப் பிரிவு 83 மற்றும் 172–க்கு உட்பட்டு 82 A என்ற புதிய சட்ட திருத்தத்தை முன்மொழிந்தது. பொதுத் தேர்தல் முடிந்த பின்னர் பதவியேற்ற தேதி(appointed date) இதிலிருந்து எந்த ஒரு சட்டமன்றமும் மக்கள் மன்றத்தில் முழு பதவிக்காலம் முடிவடையும் வரை நீடிக்கும் என இது முன்மொழிந்தது. ஒரே நேரத்தில் தேர்தல் என்பது மக்களவை மற்றும் அனைத்து விதான் சபாக்களுக்கான தேர்தலை குறிக்கிறது. 100 நாள்களுக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டிய பஞ்சாயத்து தேர்தல் இதில் வரவில்லை.
5 ஆயிரமா? 30 லட்சமா?
இருப்பினும், இது ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது அல்ல. உண்மையில், உண்மையைப் பெற்றுள்ள தேர்வு தற்போதைய சூழ்நிலையை விட மோசமானதாக இருக்கலாம். 5000 பிரதிநிதிகளை பற்றி பேசும் அதே வேளையில் 30 லட்சம் மக்கள் பிரதிநிதிகளை அது வசதியாக மறந்து விடுகிறது .
ஏழைகளின் அரசியல் உரிமை பறிப்பு?
மேலும் மூன்று மாதங்களுக்குப் பிறகு நடத்தப்படும் தேர்தல் ( ஒரே நேரத்தில் நடத்தப்படும் தேர்தல் அல்ல) முற்றிலும் புதியது. வாக்குச்சாவடிகளை அமைப்பது, வாக்களிக்கும் கட்சிகளைத் தேர்ந்தெடுப்பது, பயிற்சி அளிப்பது பாதுகாப்பு ஏற்பாடுகளை மறுசீரமைப்பது இவை அனைத்தும் அடுத்த மூன்று மாதங்களுக்குள் செய்யப்படவேண்டும். (15 மில்லியன்,) சுமார் ஒன்றரைக் கோடி பணியாளர்கள் உலகின் மிகப்பெரிய அதிகாரப்பூர்வமான நிர்வாக பயிற்சி என விவரிக்கப்படும் பணிகளில் இருந்து மீண்டு வரப் போவதில்லை. முக்கியமாக வாக்காளர்கள் வாக்குச் சாவடிகளுக்குத் திரும்ப வேண்டும். பல கோடி ஏழை, எளிய தினக்கூலி மக்களால் அவ்வாறு திரும்ப முடியாது. முக்கியமான அரசமைப்புச் சட்ட உரிமையை இதன் மூலம் அவர்கள் இழக்கிறார்கள். நம்பிக்கை இல்லா தீர்மானம், தொங்கு சபை அல்லது வேறு ஏதேனும் நிகழ்வு காரணமாக எந்த மாநில சட்டமன்றமும் கலைக்கப்பட்டால், இந்த சபையின் பதவிக் காலம் முடிவடைந்து, புதிய சபைக்கு தேர்தல் நடத்தப்படும் என அறிக்கை கூறுகிறது. இந்த விதிமுறை இடைக்கால தேர்தலுக்கான வாய்ப்பை அகற்றாது. துண்டிக்கப்பட்ட பதவிக்கான தேர்தலில் வேட்பாளர்கள் கோடிக்கணக்கான ரூபாயை செலவழித்து இருக்கலாம். இது நிச்சயமாக ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்தியதாகாது.
தேர்தல் ஆணையத்திற்குக்
கடினமான பணி
மூன்று அடுக்கு தேர்தல்களிலும் வாக்காளர்கள் ஒரே மாதிரியானவர்கள் என்பதை அங்கீகரித்து அரசமைப்புச் சட்டப் பிரிவு 325–க்கு ஒரு திருத்தம் முன்வைக்கப்பட்டுள்ளது. இது மாநில தேர்தல் ஆணையாளர்களுடன் கலந்தாலோசித்து உள்ளாட்சி அமைப்புகளின் வாக்காளர் பட்டியல்களை உருவாக்கும் பொறுப்பை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு மாற்றுகிறது. இது எளிதான பணி அல்ல.
செலவு அதிகரிக்கப் போகிறது
வாக்குப்பதிவு எந்திரங்கள் (EVM), ஒப்புகைச்சீட்டுகள் (VVPAT), பாதுகாப்பு படைகள் தேர்தல் பொருட்கள் போன்ற உபகரணங்களுக்கான விரிவான தேவைகளையும், செலவையும் இந்திய தேர்தல் ஆணையம் (ECI) ஏற்க குழு அங்கீகரித்துள்ளது. தேர்தல் உபகரணங்கள் தற்போது உள்ளதை விட மூன்று மடங்கு அதிகமாகத் தேவைப்படும் என்பது தெளிவாகிறது. 40 லட்சம் எண்ணிக்கை அளவு இத்தகைய உபகரணங்கள் (EVM,VVPAT) தேவை என்றால் அதன் செலவு ‘பூதாகரமாக’ அதிகரிக்கப் போகிறது. செலவு குறைப்பு என்பது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் என்றால், இதனை எப்படி புரிந்து கொள்வது?
அரசமைப்புச் சட்டத்தை
மாற்ற முயற்சி!
இவ்வளவு சமரசத்திற்குப் பிறகு, ஒரே நேரத்தில் தேர்தல் முன்மொழிவு அதன் தார்மீக அதிகாரத்தையும் இழக்கும். ஜனநாயகப் போராட்டத்தின் மூலம் வேரூன்றி உள்ள அரசமைப்புச் சட்டத்தையும் மோடி அரசு மாற்ற முயற்சிப்பது கவலை அளிக்கிறது. முன்மொழிவு நேர்மையாக இருந்தால் கடந்த 10 ஆண்டுகளில் அனைத்துத் தேர்தல்களும் ஏன் நீட்டிக்கப்பட்டுள்ளன பாரம்பரியமாக ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட இமாச்சல் மற்றும் குஜராத் தேர்தல் ஏன் பிரிக்கப்பட்டன. முன்மொழிவின் உண்மைத் தன்மை குறித்து பல சந்தேகங்கள் எழுகின்றன…பிறகு என்ன? ஒரே தேசம், ஒரே அரசியல் கட்சி- அல்லது ஒரே தேசம், ஒரே தலைவர் இதுதானே அடுத்த கேள்வியாக இருக்கும்?
நன்றி: ‘தீக்கதிர்’, 30.9.2024