என்னே வியப்பு! பூமியை வலம் வரும் ‘இரண்டாம் நிலா’

Viduthalai
3 Min Read

பூமியில் இரண்டு நிலாக்கள் தோன்றும் ஒரு வானியல் அற்புதம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். பூமியின் ஈர்ப்பு விசையால் ஒரு சிறுகோள் (Asteroid) ஈர்க்கப்பட்டு, பூமியைச் சுற்றும் ஒரு தற்காலிகமாக ‘சிறிய-நிலா’ ஆகப் பிரகாசிக்கப் போகிறது.

இந்தத் தற்காலிக விண்வெளிச் சுற்றுலாவாசி செப்டம்பர் 29-ஆம் தேதி தொடங்கி, இரண்டு மாதங்கள் வரை பூமியின் சுற்றுப்பாதையில் சுற்றி வரும். அதன் பிறகு பூமியின் ஈர்ப்பு விசையிலிருந்து தப்பித்துச் செல்லும். கெட்ட வாய்ப்பாக, இந்த இரண்டாம் நிலா மிகவும் சிறியதாகவும், மங்கலாகவும் இருக்கும் என்பதால், வெறும் கண்களால் அதனைத் தெளிவாகப் பார்க்க முடியாது. ஒரு நல்ல தொலைநோக்கி இருந்தால் இந்தச் சிறிய நிலாவைத் தெளிவாக கண்டு ரசிக்க முடியும்.

பூமியை சுற்ற வரும் இரண்டாம் நிலா

இந்தச் சிறுகோள் முதன்முதலில் ஆகஸ்ட் 7-ஆம் தேதி அன்று நாசாவின் ‘ஆஸ்டிராய்டு டெரஸ்ட்ரியல்-இம்பாக்ட் லாஸ்ட் அலர்ட் சிஸ்டம்’ (ATLAS) மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்க வானியல் கழகத்தின் ஆய்வுக் குறிப்புகளில், விஞ்ஞானிகள் தற்காலிகச் சிறிய நிலவின் பாதையைக் கணக்கிட்டுள்ளதைத் தெரிவித்துள்ளனர்.
விஞ்ஞானிகள் இந்தச் சிறுகோளை ‘2024 PT5’ எனக் குறிப்பிடுகின்றனர். இது அர்ஜுனா சிறுகோள் பெல்ட்டில் இருந்து வந்தது. ர்ஜுனா பெல்ட் பூமியின் சுற்றுப்பாதையை ஒத்த பாறைகளைக் கொண்டுள்ளது. எப்போதாவது, இந்தச் சிறுகோள்களில் சில, நமது கோளுக்கு அருகே, 28 லட்சம் மைல்கள் (45 லட்சம் கி.மீ.) தொலைவில் நெருங்கி வருகின்றன.

ஆய்வில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, 2024 PT5 போன்ற ஒரு சிறுகோள் சுமார் மணிக்கு 3,540 கி.மீ என்ற மெதுவான வேகத்தில் (ஒப்பீட்டளவில்) நகர்ந்தால், பூமியின் ஈர்ப்புப் புலம் அதன் மீது வலுவான தாக்கத்தைச் செலுத்தும். அதன் விளைவாகத் தற்காலிகமாக பூமியால் ஈர்க்கப்பட்டு, பூமியின் சுற்றுப்பாதையில் இருக்கும். இந்தச் சிறுகோள் பூமியைச் சுற்றி இரண்டு மாதங்கள் வரை பயணிக்கும்.

வானியலாளர், மற்றும் ‘Awesome Astronomy’ போட்காஸ்ட் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான முனைவர் ஜெனிபர் மில்லார்ட், பிபிசியின் ‘டுடே’ நிகழ்ச்சியில், “செப்டம்பர் 29-ஆம் தேதி சுற்றுப்பாதையில் நுழையும். இந்தச் சிறுகோள் நவம்பர் 25-ஆம் தேதி வெளியேறும் என்று கணிக்கப்பட்டுள்ளது” என்றும் கூறினார்.
“2024 PT5 தமது கோளின் முழு சுழற்சியை முடிக்கப் போவதில்லை, அதன் சுற்றுப்பாதையை மாற்றிக் கொண்டு, பூமியால் ஈர்க்கப்பட்டு, சில காலத்துக்கு பின்னர் அது அதன் சொந்த சுற்றுப் பாதையில் தொடரும்,” என்று அவர் கூறினார்.

எப்படி பார்ப்பது?

2024 PT5 சிறுகோள் தோராயமாக 32 அடி (10மீ) நீளம் கொண்டது. இது பூமியின் நிரந்தரமான நிலவுடன் ஒப்பிடுகையில் மிகவும் சிறியது. இந்தச் சிறுகோள் அளவில் மிகச்சிறியது என்பதாலும், மங்கலான பாறையால் ஆனது என்பதாலும் வீட்டில் இருக்கும் சாதாரண தொலைநோக்கியைப் பயன்படுத்தி பூமியில் இருந்து பார்க்க முடியாது.
“நல்ல தொழில்முறைத் தொலைநோக்கிகளால் இதனைப் பார்க்க முடியும். எனவே, நீங்கள் இந்தச் சிறிய புள்ளி போன்று இருக்கும் அற்புதமான சிறுகோளைப் பார்க்க முடியும். இணையத்தில் வெளியாகும் படங்கள் வாயிலாகவும் பார்க்க முடியும்,” என்று முனைவர் மில்லார்ட் கூறினார்.

இதுபோன்ற சிறிய நிலவுகள் இதற்கு முன்னதாகவும் தோன்றியுள்ளன. மேலும், பல சிறுகோள்கள் கவனிக்கப்படாமல் போயிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. சில சிறுகோள்கள் மீண்டும் மீண்டும் பூமியின் சுற்றுப்பாதைக்கு வருகின்றன. ‘2022 NX1’ என்ற சிறுகோள் 1981-இல் சிறிய நிலவாக மாறியது. 2022-இல் மீண்டும் அது தோன்றியது.
எனவே, இம்முறை நீங்கள் சிறிய நிலவைப் பார்க்கமுடியாவிட்டால் கவலைப்பட வேண்டாம். விஞ்ஞானிகள் ‘2024 PT5’ எனும் இந்தச் சிறுகோள் 2055-இல் மீண்டும் பூமியின் சுற்றுப்பாதைக்குத் திரும்பும் என்று கணித்துள்ளனர். “இந்தச் சிறுகோளின் கண்டுப்பிடிப்பு, நமது சூரியக் குடும்பத்தில் நாம் கண்டுபிடிக்காதது இன்னும் எவ்வளவு இருக்கிறது என்பதைப் பிரதிபலிக்கிறது,” என்கிறார் முனைவர் மில்லார்ட்.

“நாம் கண்டுபிடிக்காத பல்லாயிரக்கணக்கான வானியல் அற்புதங்கள் உள்ளன, எனவே நம் இரவு வானத்தைத் தொடர்ந்து கண்காணித்து இந்த வான்பொருட்கள் அனைத்தையும் கண்டுபிடிப்பதன் முக்கியத்துவத்தை இது எடுத்துக் காட்டுகிறது என்று நினைக்கிறேன்,” என்கிறார் முனைவர் மில்லார்ட்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *