பேறு கால மரணம் – தடுத்து நிறுத்த சுகாதாரத்துறை செயலாளர் தலைமையில் 18 பேர் குழு!

viduthalai
3 Min Read

சென்னை, அக். 3– தமிழ்நாட்டில் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் பேறுகால உயிரிழப்பு விகிதத்தை 45.5இல் இருந்து 10 ஆக குறைக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை செயலர் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் பேறுகால உயிரிழப்பு விகிதம் ஒரு லட்சம் பிரசவங்களுக்கு 45.5 என்ற அளவில் உள்ளது. அதை குறைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. பிரசவத்துக்கு பிறகு ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, உயர் ரத்த அழுத்தம், கிருமி தொற்று, இதய பாதிப்புகள் ஆகியவைதான் பேறுகால உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

இதையடுத்து, பேறுகால உயிரிழப்புகளை தடுக்க, மாநில அளவிலான செயலாக்க குழுவை அமைக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு தேசிய நலவாழ்வு குழுமம் அறிவுறுத்தியது.

அதன்படி, சுகாதாரத் துறை செயலர் சுப்ரியா சாஹுவை தலைவராக கொண்டு18 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல, அந்தந்த மாவட்டஅளவில் ஆட்சியர் தலைமையில் 10 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட உள்ளது. பேறுகால உயிரிழப்புகளை கண்காணித்து, அதை தடுக்கும் நடவடிக்கைகளில் இக்குழுவினர் ஈடுபட வேண்டும்.

மருத்துவ கட்டமைப்புகள்: அனைத்து துறையினரும் ஒருங்கி ணைந்து இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அனைத்து இடங்களிலும் உரிய மருத்துவ கட்டமைப்புகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அடுத்த 2 ஆண்டுகளுக்குள் பேறுகால உயிரிழப்பு விகிதம் லட்சத்துக்கு 10 என குறையும் வகையில் செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவமழை  வானிலை ஆய்வு மய்யம் முக்கிய அறிவிப்பு!

சென்னை, அக்.3- தமிழ்நாட்டில் அக்டோபர் 20ஆம் தேதி வழக்கமாக தொடங்கும் வட கிழக்கு பருவமழை முன்னதாக தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அக்டோபர் 3ஆவது வாரம் தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மய்யத்தின் தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன், சென்னையில் 1.10.2024

அன்று அளித்த பேட்டி:

தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கியதில் இருந்து செப்டம்பர் 30ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 39 செமீ பெய்துள்ளது.

இந்த காலகட்டத்தில் இயல்பாக மேற்கண்ட பகுதிகளில் 33 செமீ மழை பெய்யும். ஆனால் இப்போது 18 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. இந்நிலையில், பருவமழையின் அளவை கணக்கிடும் போது 19 சதவீதம் வரை கூடுதலாகவோ குறைவாக இருக்கும்பட்சத்தில் இயல்பான அளவாகவே கருதப்படும்.

தென் மேற்கு பருவமழையின்போது திருநெல்வேலியில் இயல்பைவிட மிக அதிகமாகவும், 17 மாவட்டங்்களில் இயல்பைவிட அதிகமாகவும், 16 மாவட்டங்களில் இயல்பாகவும், 6 மாவட்டங்களில் இயல்பைவிட குறைவாகவும் மழை பெய்துள்ளது. தஞ்சை புதுக்கோட்டை நீங்கலாக டெல்டா மாவட்டங்களில் இயல்பைவிட குறைவாக மழை பதிவாகியுள்ளது.

தென்மேற்கு பருவமழையை பொருத்தவரையில் கடந்த ஆண்டை ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் இயல்பைவிட 14 சதவீதம் அதிகமாக மழை மழை பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டில் 8 சதவீதம் இயல்பாக மழை பதிவாகி இருந்தது. சென்னையில் கடந்த ஆண்டில் 74 சதவீதமும், இந்த ஆண்டு 43 சதவீதமும் இயல்பைவிட அதிகமாக மழை பதிவாகியுள்ளது.

வட கிழக்கு பருவமழையை பொறுத்தவரையில் அக்டோபர் 20ஆம் தேதிதான் தொடங்கும். இந்த ஆண்டு அக்டோபர் 3ஆவது வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேரளா, ஆந்திரா, தெற்கு கருநாடகா, ராயலசீமா, தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக 112 சதவீதம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வட கிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் 2021ஆம் ஆண்டில் இயல்பைவிட 63 சதவீதம் அதிகமாகவும் இருந்தது. வட கிழக்கு பருவமழையை பொறுத்தவரையில் லா-நினா எ்ன்பது ஒரு முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது.
அதன்படி செப்டம்பர் மாதத்தில் பசிபிக் கடல் பகுதியில் வெப்ப அளவு இயல்பைவிட குறைந்துள்ளது. லா-நினா உருவாவதற்கு சுமார் 80 சதவீதம் வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஆனாலும் கடந்த 1940இல் இருந்து 2021ஆம் ஆண்டு வரை எடுத்துக் கொண்டால், 23 வருடங்கள் லா-நினா நிகழ்வு இயல்பாகவும், 13 வருடங்கள் இயல்பைவிட குறைவாகவும் இருந்தது.

சுமார் 69 சதவீதம் இயல்பைவிட அதிகமாக இருந்துள்ளது. 31 சதவீதம் இயல்பைவிட குறைவாக இருந்துள்ளது. இந்த லா-நினாவை மட்டும் காரணமாக சொல்ல முடியாது. 2010, 2021 ஆகிய ஆண்டுகளில் லா-நினா நிகழ்வு இருந்தது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *