திராவிடர் கழகமான தாய்க் கழகத்திற்கு முத்து விழா:
சமூக அரசியல் வடிவம் பெற்று சாதித்துள்ள தி.மு.க.விற்கு பவள விழா!
‘முத்தும், பவளமும்’ அணிகலன் என்றாலும், நமக்குப் பணி– படைக்களங்களே!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை
ஒரு நூற்றாண்டிலேயே தன்னால் உருவாக்கப்பட்ட ஓர் இயக்கத்தின் வெற்றியை நேரில் கண்டு மகிழ்ந்த தலைவர் தந்தை பெரியார் – இயக்கம் திராவிடர் இயக்கம் மட்டுமே – அதற்கு முத்து விழா; திராவிடர் இயக்கத்தின் கொள்கைகளை செயல்மலர்களாக்கிப் பவள விழா காண்கிறது தி.மு.க. என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
திராவிடம் என்ற வரலாற்றுக் கடலில், ஏராளமான முத்தும், பவளமும் அணி அணியாக நமக்கு உள்ளதில் அள்ளிக் கொண்டே இருப்பதால்தான், அறிவால் அடிமைப்பட்டு, உணர்வால் மரத்துப்போன நமது திராவிட இனம், கடந்த ஒரு நூற்றாண்டுக்குமேலாக ஏற்றமிகு, ‘மான எழுச்சியைக்’ கண்டு உயர்ந்து வருகிறது.
புதிய விடியலைத் தந்த நீதிக்கட்சி!
‘நீதிக்கட்சி‘ என்று வெகுமக்களால் அன்று எளிமையாக அழைக்கப்பட்ட திராவிடர் இயக்கம், அரசியலில் கால் பதித்து, இழந்த நம் இன உரிமை மனித உரிமைகளை மீட்டெடுத்து ஒரு புதிய விடியலை நாட்டுக்குத் தந்தது!
‘திராவிடம் – திராவிடர்‘ என்பது ஏதோ ஒரு குறுகிய பகுதியோ, குறுகிய எண்ணத்தையோ மய்யப்படுத்தி முளைத்த தத்துவம் அல்ல!
திராவிடம் ஒரு தத்துவத்தின் பண்பொழில்!
மொழியால், பண்பாட்டால், நாகரிகத்தால், மானு டத்தையே தனது நேசிப்புக்குரிய எல்லையாக்கிக் கொண்டு, யாதும் ஊரே, யாவரும் கேளிர், உலகம் ஓர் குலம், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சமத்துவம், உழைப்பையே அளவாகக் கொண்டு உயரும் உன்னத சமநிலை, சம ஈவு இவற்றை உலகெங்கும் விதைத்து வளர்ந்த, வளரும் ஓர் அருமையான எடுத்துக்காட்டாகும்!
108 ஆண்டுகளுக்குமுன் அது பல பெயர்களைச் சூட்டிக்கொண்டே (அவை மக்களால் சூட்டப்பட்டவை) வளர்ந்தது.
சிந்துவெளி நாகரிகம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வெளிச்ச நாகரிகம்!
அதற்கு நேர் எதிரான மற்றொரு தத்துவம்தான் ஆரியம்! மனிதர்களை – மனிதர்களாகவே மதிக்காது கீழே தள்ளி, மிருகங்களைவிடக் கேவலமாக்கி, ஆதிக்கம் செலுத்தி, அதற்குப் பாதுகாப்பு அரணாக கடவுள், மதம், ஜாதி, சடங்கு, சம்பிரதாயங்கள், புராணங்கள், இதிகாச போதைகளின் ஆதரவால் பட்டுப்போன நிலையிலும், வேரூன்றி, பளபளப்பை பரபரப்பாகக் காட்டும் ஒரு பாதகத் தத்துவம்!
இரண்டுக்கும்தான் பல நூற்றாண்டுகளாக கருத்தியல் போர் நடைபெற்று வருகின்றது, புத்தர்காலம் முதல்!
அதனை தமிழ்நாட்டில் உணரச் செய்து, அறிவு கொளுத்திய இயக்கம்தான் நூற்றாண்டைத் தாண்டி, சமூகத்தில் ஒருபுறத்தில் ஓர் அறிவுப் போர் நடத்தியும், அரசியலில் அதன் தத்துவங்களைச் செயல்படுத்தி, மானமும், அறிவும், உரிமைகளை மீட்டெடுக்க அரசியல் களமாட்டம் நடத்தும் ஒரு சூழல்; அத்திசையைக் காட்டி, அதில் முன்னோடியாக பாதையைச் செப்பனிட்டு புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றி, சமூகநீதிக் கொடி பறக்கும் புதியதோர் சமூகத்தினைப் படைக்கும் மற்றொரு அரசியல் குழல் என்ற இந்த இரட்டைக் குழல்களைக் கொண்ட ஒரு புதுமை அமைப்பாக நாளும் வரலாறு படைத்து வருகின்றன!
திராவிடர் கழகம் தோன்றியது!
நீதிக்கட்சி, பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் என்ற பெயர்களை வரலாற்று அடிப்படையிலும், புதியதோர் உலகு படைக்க திராவிடர் கழகம் என்று மாற்றினார் தந்தை பெரியாரும், அவர்தம் தன்னலம்பாரா தகைசால் தோழர்களும் தொண்டர்களும்!
அதற்கு (திராவிடர் கழகத்திற்கு) கடந்த ஒரு மாதம் முன்பு முத்துவிழா – 80 ஆண்டுகள் – சேலத்தில் பெயர் மாற்றம் அடைந்து!
அது வெறும் பெயர் மாற்றம் மட்டுமல்ல; இரண்டின் (நீதிக்கட்சி – பார்ப்பனரல்லாதார் இயக்கம்) கலவையாகி ஜொலித்த தனித்தன்மை கொண்ட இயக்கமாக, ‘‘திராவிடர் கழகம்‘‘ 1944 இல் சேலத்தில் புத்தாக்கம் பெற்று, புதியதோர் பாதை அமைத்தது.
முந்தைய பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்று அழைக்கப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற அரசியல் இயக்கமும், சுயமரியாதை இயக்கம் என்ற சமூகப் புரட்சி இயக்கமாகி, புதிய பரிமாணம் பெற்று வளர்ந்தது!
அதற்கு அய்ந்தாண்டுகளுக்குப் பிறகு, காலத்தின் தேவையாக, திராவிட முன்னேற்றக் கழகமாக அதன் அரசியல் அமைதிப் புரட்சிக்கான திராவிட இயக்கம் மலர்ந்தது.அந்த முத்தும், பவளமும் இப்போது நமது மக்களுக்கு, இன வரலாற்று வெளிச்சம் பரப்ப தொண்டு செய்து வருகிறது – சாதனை சரித்திரத்தில் சமூக இழிவை நீக்கவும், சமத்துவ சமூகநீதிக் கொடி தலைதாழாது பறக்கவும்.
அரசியல் களத்தில் நின்று
போராடும் இயக்கம் தி.மு.க.!
‘அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றம்; அனைவருக்கும் அனைத்தும் கிடைத்தலே எமது ஆட்சிக்கான இலட்சிய இலக்கு‘ என்று பகுத்தறிவு, சுயமரியாதை, சமூகநீதி, மானுட உரிமைகளை முன்னெடுத்து அரசியல் களத்தில் போராடும் ஓர் இயக்கம் தி.மு.க.
அது ‘பவளத்தை‘ தந்துள்ளது 75 ஆண்டுகளில்!
முத்துவிழாக் கொண்டாடும் அதன் தாய்க்கழகமோ கொள்கை முத்துக்களை மூழ்கி எடுத்து, ‘‘முத்துக் குளிக்க வாரீகளா?’’ என்று மக்களை அழைத்து, மான வீரர்களாக, சமத்துவ மனிதர்களாக, சமூகநீதிப் போராளிகளாக அவர்களைக் களத்தில் இறங்கி கம்பீரத்துடன் உலா வருகின்றது!
உலகில் எங்கும் காணாத ஒரு ஒப்பற்ற தனித்தன்மை பூண்ட இருபெரும் கூர்முனைகளைக் கொண்ட ஓர் அதிசய இயக்கங்கள் இவை!
பன்னூறு ஆண்டுகளில் காணாத சமூக மாற்றம் – ஒடுக்கப்பட்டு, உரிமை மறுக்கப்பட்ட ஓர் இனத்தின் எழுச்சி ஓங்கி, அதன் தத்துவ கர்த்தா முத்தும் பவளமும் மலையாக அணிந்து – ‘‘பெரியார் உலக மயமாகிறார்; உலகம் பெரியார் மயமாகிறது!’’
வெற்றிகளைத் தம் வாழ்நாளில் கண்டு மகிழ்ந்தவர் தந்தை பெரியார்
எண்ணிப் பாருங்கள்,
விரலை மடக்குங்கள்!
1. உலகில் எந்த ஒரு பகுதியிலாவது ஒரு புரட்சி இயக்கத்தின் கொள்கை வெற்றிகளை அவர்தம் வாழ்நாளில் நேரில் கண்டு மகிழ்ந்து, மறைந்த தலைவர் தந்தை பெரியாரைத் தவிர வேறு உண்டா?
2. அவரால் உருவாக்கப்பட்ட சீடர்களே ஆட்சி அமைத்து, அவ்வாட்சியை, அவர் வாழ்ந்தபோதே, அவருக்கே காணிக்கையாக்கி சட்டமன்றத்தில் – அதுவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஓர் ஆட்சித் தலைமை பிரகடனப்படுத்திய வரலாறு உண்டா?
1929 இல் செங்கற்பட்டு சுயமரியாதை மாநாட்டுத் தீர்மானங்களை, இந்த (தி.மு.க.) ஆட்சி நாயகர்களான தந்தை பெரியார்தம் தொண்டர்களின் ஆட்சியால் செயலாக்கம் பெற்று வருகின்றன – 1969 முதல் தொடர்ந்து இன்றைய ‘திராவிட மாடல்‘ ஆட்சி நமது ஒப்பற்ற முதலமைச்சரின் தலைமையில் நடைபெறும் இன்ைறய காலகட்டம்வரை சோதனைகளைச் சாதனை களாக்கி, சாதனை சரித்திரமாக மலரச் செய்து – வெற்றிக் கனிகளாக்கி, மக்களைச் சுவைக்க வைக்கும் வரலாறுதான், இந்த முத்தும், பவளமும்!
‘‘ஆயிரம் ஆண்டெனும் மூதாட்டி
அவள் அணிந்திராத அணி (ஆம், முத்தும், பவளமும்)யாவார் –
அவள் அறிந்திராத அறிவாவார் பெரியார்!’’
– புரட்சிக்கவிஞர்
உலகம் பெரியார் மயம் –
பெரியார் உலக மயம் – புரிகிறதா?
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
3.10.2024