இலங்கைக் கடற்படை தாக்குதல், கடற்கொள்ளையர்கள் கொள்ளை,
நீதித்துறை தண்டனை, அபராதம், சிறைச் சாலைக் கொடுமைகளா?
ஒன்றிய அரசு கண்டும் காணாமல் இருப்பது ஏன்?
தமிழின மீனவர் உரிமை கிட்டும் வரை நமது போராட்டம் தொடரும்
நாகையில் மீனவர் உரிமைப் போராட்டத்தில் தமிழர் தலைவர் உரை முழக்கம்
சென்னை, அக். 2 தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்வது, கடற்கொள்ளையர்கள் பொருள்களைப் பறிப்பது இலங்கை நீதிமன்றத்தில் தண்டனை, அபராதம், சிறையில் கொடுமை – இவ்வளவு நடந்தும் ஒன்றிய பிஜேபி அரசு கண்டும் காணாமல் இருப்பானேன்? தமிழ்நாட்டு மீனவர்களின் உரிமையை மீட்கும் வரை நமது போராட்டம் தொடரும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
இலங்கை அரசைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் – பெருந்திரள் கூட்டம்!
நேற்று (1.10.2024) மாலை நாகையில் தமிழ்நாட்டு மீனவர்களை அவமானப்படுத்தும், உரிமைகளைப் பறிக்கும் இலங்கை அரசைக் கண்டித்து நாகையில் நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டம் பெருந்திரள் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கண்டன உரையாற்றினார்.
அவரது கண்டன உரை வருமாறு:
தமிழ்நாட்டு மீனவர்களை மொட்டையடித்து, அவமானப்படுத்திய இலங்கை அரசைக் கண்டித்து நடைபெறக்கூடிய இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – பெருந்திரள் கூட்டத்தை மிகக் குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்த தோழர்களே, தாய்மார்களே, சகோதரர்களே, பெரியோர்களே, மீனவத் தோழர்களே, அனைத்துக் கட்சிப் பொறுப்பாளர்களே, ஊடக நண்பர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.
மீனவர் துயரம் – ரத்தம் கொதிக்கிறதே!
நம் நாட்டு மீனவர்களுக்கு ஏற்பட்ட அநீதியைக் கண்டவுடன், ஆத்திரத்தோடு, வேகமாக உடனடியாக நான், நம்முடைய மாநில அமைப்பாளர் ஜெயக்குமார் அவர்களைத் தொடர்பு கொண்டேன். அதேபோல, நாகை மாவட்டத் தலைவர் நெப்போலியன், புபேஸ் குப்தா ஆகியோரைத் தொடர்பு கொண்டேன்.
காரணம், கடற்கரையில் நம்முடைய மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டு நீண்ட காலமாகக் கொதித்துக் கொண்டிருக்கின்றோம்.
நம்முடைய இயக்கம் மனிதாபிமான இயக்கம்; நம்முடைய இயக்கம் சுயமரியாதை இயக்கம். சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டை காணுகின்ற இயக்கம் – அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கவேண்டும் என்பதை வலியுறுத்தக் கூடிய அறிவாசான் தந்தை பெரியார் அவர்களுடைய இயக்கம்.
இந்த இயக்கத்தில் இருக்கின்ற நமக்கு, நம் கண் எதிரில், நம் சகோதரர்களின் உரிமைகள் பறிக்கப்படுவது மட்டுமல்ல, மானமும் பறிக்கப்படுகிறது என்பதை நினைக்கின்றபொழுது ரத்தம் கொதிக்கின்றது. ரத்தக் கண்ணீர் வடிக்கின்ற நிலை.
பல பேர் கண்டும், காணாமல் இருக்கிறார்கள்; யாருக்கோ வந்த விருந்து என்று நினைக்கக் கூடிய அளவிற்கு.
இந்தப் போராட்டம் யாருக்காக?
நாம் நடத்துகின்ற இந்தப் போராட்டம், இன்றைக்கு மிக முக்கிய தேவையாகும். சற்று நேரத்திற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசும்பொழுது சொன்னேன், ‘‘இது ஒரு முடிவல்ல; இது ஒரே ஒரு நிகழ்ச்சி அல்ல; அக்கிரமம் எப்பொழுது தொடர்ந்தாலும், தொடர்ந்து அதைக் கண்டித்து, மீனவர்களுக்கு ஒரு பாதுகாப்பு அரணை உருவாக்கித் தீருவதற்கான உரிமையை, இந்த அணி உருவாக்கும்”. இதில் கட்சி இல்லை; பேதமில்லை. மனிதாபிமானம் இருக்கிறது.
இந்தப் போராட்டம் எங்களுக்காக மட்டுமல்ல நண்பர்களே, மீனவர்களுக்காக மட்டுமல்ல – இந்த தேசத்திற்காக, இந்த நாட்டிற்காக. எங்கள் தோழர் அன்பழகன் சொன்னார் அல்லவா – மீனவர் தோழர்களின் தலைகளை மொட்டையடித்தார்கள் சிறைச்சாலையில் என்று சொல்வது இருக்கிறதே – இது ஒரு பெரிய ‘சாபக்கேடு’ இந்திய நாட்டிற்கு, இந்திய அரசுக்கு.
ஒரு தேசத்தினுடைய, ஒரு நாட்டினுடைய, அதிலும் பெரிய நாடு – உலக நாடுகளிலேயே நாங்கள் இந்த அளவிற்கு வளர்ச்சி பெற்று இருக்கிறோம் – ‘‘சப்கா சாத், சப்கா விகாஸ்” என்று எங்கே பார்த்தாலும் பேசிக் கொண்டிருப்பார் நம்முடைய பிரதமர் மோடி அவர்கள். ‘விஸ்வகுரு’ நான்தான் – உலகத்திற்கே வழிகாட்டி என்று சொல்பவர்.
உலகத்திற்கே வழிகாட்டி இருக்கின்ற ஒரு நாட்டைச் சேர்ந்த மீனவர்களை, நம்முடைய பக்கத்து நாடான, நம்முடைய தயவினாலே வாழுகின்றவர்கள் – இன்னுங்கேட்டால், அவர்கள் உயிர் போகின்ற நிலையில், கைகொடுத்ததுபோன்று, இந்திய அரசும், மாநில அரசும் அந்த நாட்டிற்கு வாழ்வாதாரத்தைக் கொடுத்தது. பணம் கொடுக்கவில்லையென்றால், இலங்கை அரசாங்கமே இல்லை இன்றைக்கு.
இலங்கை அவதிப்பட்ட போது நிவாரணப் பொருள்களை கப்பல் முலம் மனிதாபிமானத்தோடு அனுப்பி வைத்தவர் தமிழ்நாட்டு முதலமைச்சர்
எங்களுடைய முதலமைச்சர் நிவாரணப் பொருள்களை கப்பலில் அனுப்பினார். அது எங்கள் மனிதாபிமானம். ஆனால், உங்களுக்கு, மனிதாபிமானம் என்றால் என்னவென்று புரியவில்லை.
ஏன் புரியவில்லை?
புரிகிறது – ஆனால், மனம் இல்லை உங்களுக்கு; காரணம், தமிழ்நாட்டு மீனவர்கள் உங்கள் இனம் இல்லை என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆகவேதான், உங்களுக்கு மனம் இல்லை என்று சொல்லக்கூடிய சூழல் இருக்கிறது.
எனவே நண்பர்களே, மீனவர்களுடைய உரிமையைக் காப்பாற்றுவது மட்டுமல்ல இன்றைய கண்டன ஆர்ப்பாட்டம், இன்றைய அறப்போராட்டம். இந்தத் தேசத்தின் மானத்தையும் காப்பாற்றுவதற்காகத்தான், இந்த ஒன்றிய அரசின் மானத்தையும் காப்பாற்றுவதற்காகத்தான் இந்தப் போராட்டம் – மோடி அரசுக்கும் சேர்த்துத்தான்.
நீங்கள் ஒருமைப்பாட்டை பேசுகிறீர்கள்; அதை நாங்கள் செயல்படுத்திக் காட்டுகின்றோம்.
நீங்கள் வெறுப்பை விதைக்கிறீர்கள் – நாங்கள் இணைப்பை உங்களுக்குக் காட்டுகிறோம். அதைத்தான் எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் சொன்னார்கள். அவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது முக்கியமல்ல – இந்தத் தேசத்திற்காக, இந்த நாட்டிற்காக அவர்கள் தெளிவாக எடுத்துச் சொன்னார்கள்.
மானம் – மனிதாபிமானம் வேண்டாமா?
மானம் என்று சொல்லுகிறபொழுது, அது எவ்வளவு முக்கியம். நீங்கள் அடிக்கடி சொல்லுகின்ற வார்த்தை ‘தேசாபிமானம்’ இருக்கிறதே, அதில் இருக்கின்ற மானம் என்னாயிற்று? ‘மனிதாபிமானம்’ – எல்லாவற்றிலும் ‘மானம்’ இருக்கிறது. ஆனால், ஒன்றிய அரசிடம்தான் அதைக் காணவில்லை. அதுதான் வேதனையான விஷயம்!
அந்த உணர்வை உண்டாக்கவேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் பெருந்திரள் கூட்டம்.
சுயமரியாதை இயக்கம் என்றால் அதுதான்! சுயமரியாதை என்பது ஒரு கட்சிக்குச் சொந்தமானதல்ல; மனிதர்களாக வாழுகின்ற எல்லோருக்கும் சொந்தமானதாகும்.
நம்முடைய பிரதமர் மோடி அவர்கள், தமிழ்நாட்டிற்கு வரும்பொழுது, திருவள்ளுவர்பற்றியும், பாரதியாரைப்பற்றியும் பேசுவார். அந்த பாரதியார் ‘‘காக்கை குருவி எங்கள் ஜாதி” என்று பாடினார். மனிதர்கள் மட்டுமல்ல, காக்கை குருவியும் எங்கள் ஜாதி என்று சொன்ன நேரத்தில், காக்கை, குருவியைக் கூட சுடுவதற்கு உரிமை கிடையாது. ஆனால், நம் மீனவ சகோதரர்கள் சுடப்படுகிறார்கள், தாக்கப்படுகிறார்கள், வேட்டையாடப்படுகிறார்கள்.
வேட்டையாடுவது போதாதென்று, அவர்களுடைய வாழ்வாதாரத்தை அழித்தது போதாதென்று, அவர்களை மொட்டையடித்து அவமானப்படுத்துகிறார்கள்.
இங்கே எங்களுடைய தாய்மார்கள், சகோதரிகள் இவ்வளவு பேர் வந்திருக்கிறார்கள்; போராட்ட உணர்வோடு அவர்களெல்லாம் வந்திருக்கின்றார்கள். பெரியாரிடம் பயின்றது அது – ‘‘மானமும் அறிவும்தான் ஒரு மனிதனுக்கு அழகு” என்று அவர் பாலபாடத்தைச் சொல்லிக் கொடுத்தார்.
மானம் அவ்வளவு மிக முக்கியம். நிர்வாணமாக வாழு என்று சொன்னால், ஒப்புக்கொள்வார்களா? முடியாது.
அப்படிப்பட்ட சூழலில், எங்களுடைய மீனவ சகோதரர்கள் இன்றைக்கு அவமானப்படுத்தப்படுகிறார்கள். மீனவர்களுடைய வாழ்வாதாரம் எப்படிப்பட்டது என்பது இயல்பாக எல்லோருக்கும் தெரியும்.
நான் கடலூர்காரன்; அவர்களோடு ஒன்றி இருந்தவன். எங்கள் மாவட்டத்தில் கடலோரத்தில் இருக்கக் கூடியவர்கள். எங்களை வாழ வைத்து, உயிரோடு இருக்கக் கூடிய அளவிற்கு, உலக மக்களையே வாழ வைத்துக் கொண்டிருக்கக் கூடிய ஒரு உணவு முறை இருக்கின்றது என்றால், அது மீன் உணவுதான். மருத்துவர்கள்கூட பரிந்துரை செய்வார்கள். ‘‘நீங்கள் மட்டன் எல்லாம் சாப்பிடாதீர்கள்; கடலுணவு சாப்பிடுங்கள்” என்று. மட்டன் கடைக்காரர்கள் கோபித்துக் கொள்ளக்கூடாது. இது மருத்துவர்களின் கருத்து.
நல்ல ஆரோக்கியமான உணவு சாப்பிடவேண்டுமா? மீன் சாப்பிடுங்கள். அந்த மீனைப் பிடித்து, மீனவர்களா சாப்பிடுகிறார்கள்? நமக்குத்தானே கொடுக்கிறார்கள், மக்களுக்குத்தானே கொடுக்கிறார்கள். அழகாகச் சொன்னார் மாரி அவர்கள்.
சிறையில் மொட்டை அடிப்பது
அவமானம் இல்லையா?
மீனவர்களுடைய மனிதாபிமானத்தைப் போற்றுவதற்கு உங்களுக்கு மனமில்லையா? இதுதானே எங்கள் கேள்வி.
மனிதாபிமானம் ஒரு பக்கம்; அதில் அடங்கியிருக்கின்ற மானம் அதைவிட மிக முக்கியமானது. மீனவர்களை மொட்டையடிக்கிறார்கள்.
தயவு செய்து எண்ணிப்பாருங்கள், சிறைக் கைதிகளை மொட்டையடிப்பது என்பது, தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் இருந்தது. ஆனால், அந்த முறை இப்பொழுது உண்டா? என்றால், கிடையாது. நீதிமன்றங்கள் அதனை அனுமதிப்பதில்லை.
நாங்கள் எல்லாம் வழக்குரைஞர்கள். நாங்கள் படிக்கின்றபொழுது, வழக்குரைஞராக இருந்தவர், பிறகு தலைமை நீதிபதியாக இருந்தவர், பிறகு உச்சநீதிமன்ற நீதிபதியானார். நம்முடைய சிதம்பரம் அவர்களுடைய மாமனார் அவர்.
அவரை நாங்கள் விருந்தினராக எங்களுடைய விடுதிக்கு அழைத்திருந்தோம். அப்பொழுது அவர் சொன்னார், ‘‘எங்களுக்கு வருமானம் எப்படி வரும் என்று சொன்னால், வியாழக்கிழமை ஒருவர்மீது வழக்குப் போட்டு, வெள்ளிக்கிழமை அன்றைக்கு அவரை தண்டிப்பது போன்ற ஏற்பாடுகளை செய்வார்கள்” என்றார்.
அந்த வழக்குரைஞர் என்ன சொன்னார் தெரியுமா? ‘‘வெள்ளிக்கிழமை தண்டிக்கப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கக்கோரி வழக்குரைஞரான நாங்கள் போனால், அதற்கு அதிகமான பீஸ் வாங்குவோம். அதிகமான வருமானத்திற்கு வழி செய்வோம்” என்றார்.
அரசியல் கட்சிக்காரர்களுக்குக்கூட சிறைச்சாலையில் மொட்டையடிப்பார்கள். எங்கள் தோழர் ஏ.வி.பி. ஆசைத் தம்பியை வாலிப வயதில், மொட்டையடித்தார்கள். அவமானப்படுத்துவதற்காக இதுபோன்று செய்த நேரத்தில், அதைக் கண்டித்து பெரியார், அண்ணா போன்றவர்கள் கண்டனத்தைத் தெரிவித்தார்கள்.
ஏனென்றால், சிறைச்சாலைக்குள் சென்று மொட்டையடித்துக் கொண்டு வெளியே வந்தால், அது பெரிய அவமானமாகக் கருதப்பட்டது அன்றைய காலகட்டத்தில்.
திருப்பதிக்குப் போய் மொட்டையடிப்பதோ, பழனிக்குப் போய் மொட்டையடிப்பதோ அது அவமானமில்லை – அது வேண்டுதல் என்று சொல்லிவிடுவார்கள். ஆனால், சிறைச்சாலைக்குள் சென்று மொட்டையடித்துக் கொண்டு வந்தால், அது அவமானமாகக் கருதப்பட்டது. அந்த முறை இன்றைக்கு ஒழிக்கப்பட்டு விட்டது.
பக்கத்து நாடுகளுக்கு நில எல்லை என்று சொல்லும்பொழுது, வேலி போடுவதோ, மதிற்சுவர் போடுவதோ என்பது இருக்கும். அதைத் தாண்டுபவர்களைக் கைது செய்து, தண்டிக்கப்படுவது வழமைதான்.
ஆனால், கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்பொழுது, காற்று அடித்தால், படகு வேகமாகப் போகும். உடனே சடன் பிரேக் போடுவதற்கு வழி உண்டா? பொது அறிவு கொண்டு சிந்தித்துப் பார்க்கவேண்டாமா? மனிதாபிமானத்தோடு இந்தப் பிரச்சினையை அணுகவேண்டாமா?
அப்படி எல்லையைத் தாண்டும் மீனவர்களைப் பிடித்துக் கொண்டு போய், அவர்களுக்குத் தண்டனை கொடுப்பதா?
மீன் வளத்துறை என்பதை “மீனவர் நலத்துறை” என்று மாற்யிவர் நமது முதல் அமைச்சர்
மீனவர்களுடைய வாழ்வாதாரம் என்பதற்கு, எங்கெங்கோ கடனுதவி பெற்று, ஒரு படகை தயார் செய்து, மீன் பிடித் தொழிலை செய்கிறார்கள். ஒரு பக்கம் இலங்கைக் கடற்படையினரின் கொடுமை – இன்னொரு பக்கம் கடற்கொள்ளையர்களின் கொடுமை. அதைத் தாண்டி சிறைச்சாலையில் கொடுமை; அதையும் தாண்டி நீதித்துறையில் அபராதம், தண்டனை.
நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும் நண்பர்களே, மீனவச் சகோதரர்கள் நம்முடைய சகோதரர்கள். கடைசி வீட்டில் தீப்பிடிக்கிறதே என்று நாம் நினைக்கக்கூடாது; அந்தத் தீ நம் வீட்டிற்கும் வரும். எல்லோருக்கும் அந்தத் தொல்லைகள் வரும்.
மீனவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கக்கூடிய நிலை வரும்பொழுது, ஓர் அரசு, ஒன்றிய அரசு, அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றது. தமிழ்நாடு அரசைப் பொறுத்தவரையில், அதனுடைய எல்லையைத் தாண்டிப் போக முடியாது.
ஆனாலும், இன்றைய தமிழ்நாடு அரசு, ‘திராவிட மாடல்’ அரசு – முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்
பதவியேற்றவுடன், செய்த முதல் மாற்றம் என்ன தெரியுமா?
மனிதாபிமானம் நிறைந்த திராவிட மாடல் அரசு – ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை – வாய்ப்பு மறுக்கப்பட்ட சமுதாயத்தை பாதுகாக்க, சமூகநீதிக்கான சரித்திர நாயகர் என்ன செய்தார் தெரியுமா?
மீன் வளத் துறை என்றுதான் அதற்கு முன்புவரை இருந்ததை, ‘‘மீனவர் நலத்துறை” என்று மாற்றினார்.
முதலில், மீனவர் நலம்; இரண்டாவது மீன் வளம். மீனவர் நலமாக இருந்தால்தான், மீன் வரும். இதுதான் பகுத்தறிவு அடிப்படை – சுயமரியாதை அடிப்படை.
அரசியலுக்காகப் பேசவில்லை
மீனவர்கள் பிரச்சினையில், தமிழ்நாடு அரசான திராவிட மாடல் அரசு என்னென்ன செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் செய்து கொண்டிருக்கின்றது.
இங்கே சகோதரர் மாரி அவர்கள் ஒரு கருத்தைச் சொன்னார். கடலில் மீன் பிடிப்பது நமக்குள்ள உரிமை என்றார்.
இப்பொழுது மட்டும் நாங்கள் இந்தப் பிரச்சினையை கையில் எடுக்கவில்லை. இதை அரசியலுக்காக நாங்கள் கையில் எடுக்கவில்லை. கச்சத்தீவைப்பற்றி தேர்தல் நேரத்தில் பலர் பேசுவார்கள். ஆனால், நாங்கள் அப்படியல்ல. எங்களுடைய ரத்தத்தின் ரத்தம் – சதையின் சதை – எங்கள் உணர்வாளர்கள் – எங்கள் உறவுகள். காலில் அடிபட்டால், கண்களில் கண்ணீர் வரும். ஏனென்றால், நாங்கள் ஒரே மாதிரி இருப்பவர்கள்.
ஆனால், ஒன்றிய அரசு துடிப்பதில்லையே, உங்களுக்கு மரத்துப் போய்விட்டதே!
ஒரு செய்தியை உங்களுக்குச் சொல்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தபொழுது, எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சித் தலைவராக கருத்திருமன் இருந்தார். அன்றைக்கு அண்ணா அவர்கள் முதலமைச்சர்.
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் கருத்திருமன் பேசும்பொழுது, ‘‘நாங்கள் ஆட்சிக்கு இருந்த காலத்தில் நடைபெற்றதைச் சொல்லி குற்றம் சாட்டுகிறீர்களே” என்றார்.
உடனே முதலமைச்சர் அண்ணா அவர்கள், ‘‘அதனால்தான், நாங்கள் இங்கே; நீங்கள் அங்கே என்று” (எதிர்க்கட்சியினர் அமர்ந்திருக்கும் பகுதியை நோக்கி கையைக்காட்டினார்).
அதனால்தான் நாங்கள் ஆட்சியை இழந்தோம் என்று கருத்துருமன் ஒப்புக்கொண்டார். அந்தப் பெருந்தன்மை இருந்தது அவருக்கு.
ஆகவே நண்பர்களே, மீனவ சகேதாரர்களுடைய வாழ்க்கையை நீங்கள் பாதுகாக்கவேண்டாமா? அவர்களுடைய வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டாமா? அவர்களுடைய நிலை என்ன? என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும்.
நம்முடைய மீனவர்களை இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, சிறைச்சாலையில் இருக்கின்றபொழுது, நம்முடைய மீனவத் தாய்மார்கள் படுகின்ற வேதனையை தொலைக்காட்சியில் பார்க்கும்பொழுது, அந்தக் குடும்பத்தினர் கதறும் காட்சியைப் பார்க்கும்பொழுது, எங்களுடைய ரத்தம் கொதிக்கிறது.
தமிழ்நாட்டில் ஒரு பழமொழி சொல்வார்கள், ‘‘பெண் என்றால், பேயும் இறங்கும்” என்று. ஆனால், இவர்களின் மனம் இரங்கவில்லையே!
தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள்தான் சொல்வார், ‘‘பேயை விட, பேய் பிடித்தவன் அதிகமாக ஆடுவான்” என்று.
அதுபோன்று, இலங்கையில் உள்ள புதிய அரசாங்கம், அதிகமாகப் பேய்ப் பிடித்து ஆடுகிறது. அந்தப் பேயை ஓட்டுவதற்காகத்தான் இந்த அணி. நம்முடைய மீனவர்கள் படும் துயரை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றது ஒன்றிய அரசு.
பிரதமரைச் சந்தித்தும் முதல் அமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார்
நம்முடைய மீனவ நண்பர்கள் யாரோ அல்ல; அவர்கள் அனாதைகள் அல்ல – அப்படிப்பட்டவர்களுடைய வாழ்க்கையை நாசமாக்கும் வரையில் – நாள்தோறும் அவர்களைத் தாக்குவது, படகுகளை சேதப்படுத்துவது, அவர்களுடைய வலைகளை அறுப்பது என்பதைத் தாண்டி, இன்றைக்கு அவர்களை மொட்டையடிக்கின்ற நிலைக்கு வந்துவிட்டார்கள் என்று சொன்னால், இதைவிட கோளாறு வேறு என்ன இருக்க முடியும்?
இந்தக் கூட்டத்திற்கு நாங்கள் ஏற்பாடு செய்வதற்கு முன்பு, நம்முடைய முதலமைச்சர் அவர்கள், கடந்த 27 ஆம் தேதி டில்லிக்குச் சென்று, பிரதமர் மோடி அவர்களை சந்தித்து, மூன்று கோரிக்கைகளை வைத்தார். அந்த மூன்று கோரிக்கைகளில் மிக முக்கியமான கோரிக்கை, மீனவர்கள் தாக்கப்படுவதையும், அசிங்கப்படுத்துவதையும் தடுக்கவேண்டும் என்பதுதான்.
அதற்குப் பிறகு நாம் எல்லோரும் நம்பினோம், இலங்கையில் புதிய ஆட்சி ஏற்பட்டு இருக்கிறதே, இனிமேலாவது நல்ல நிலை திரும்பும் என்று.
அய்.நா.வில் வழக்குத் தொடர வேண்டும் ஆனால், நம்முடைய நாட்டில் ஒரு பழமொழி உண்டு, ‘‘வாளு போச்சு, கத்தி வந்தது, டும் டும் டும்” என்று. அதுபோல, பழைய ஆட்சியே பரவாயில்லையே, புது ஆட்சியை விட என்று சொல்லக்கூடிய நிலைதான்.
ஆகவேதான், மீனவ சகோதரர்கள் என்று சொல்பவர்கள், இந்த நாட்டின் குடிமக்கள் அல்லவா!
நம்முடைய மீனவ சமுதாயத்தைச் சார்ந்தவர்களுக்கு, இலங்கையில், யாழ்ப்பாணத்தில் எத்தனை சிறைச்சாலைகள் இருக்கிறதோ, எத்தனை நீதிமன்றங்கள் இருக்கிறதோ, அத்தனையும் தெரியும். ஆனால், இலங்கை மீனவர்களுக்குத் தமிழ்நாட்டுச் சிறைச்சாலைகளோ, தமிழ்நாட்டு நீதிமன்றங்களோ தெரியாது. இதுதான் மனிதாபிமானம்!
இப்படிப்பட்ட சூழ்நிலையில், இன்றைக்கு இந்தக் காட்சி இருக்கிறதே, அது தொடரக்கூடாது.
மனிதநேயத்திற்கே விரோதமான செயலாகும் – இலங்கை அரசு நடந்துகொண்டவிதம். அதற்காகவே அய்க்கிய நாடு சபையில் வழக்குத் தொடரவேண்டும். எங்கள் மீனவர்களை அவமானப்படுத்தியது தவறு; அதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது என்று கேட்கவேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. ஆனால், அப்படி கேட்கவேண்டிய இடத்தில், மன்னார்குடி அய்யர்தான் இருக்கிறார்; வெளியுறவுத் துறை அமைச்சராக.
40க்கு 40 வெற்றி பெற்றவர்கள் நாம்
மீனவர்களுடைய வாழ்வாதாரத்திற்குப் பாதுகாப்பு கொடுக்கவேண்டியது நம்முடைய கடமையல்லவா! அதை எல்லாவற்றையும்விட நண்பர்களே மீண்டும் சொல்கிறேன், இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மிக முக்கியமாக “We, the people of India, having solemnly resolved to constitute India into a Sovereign, Socialist, Secular, Democratic Republic and to secure to all its citizens: Justice, social, economic and political;
முதலில் இறையாண்மை, இரண்டாவதாக, மதச்சார் பின்மை, மூன்றாவதாக சமதர்ம, ஜனநாயகக் குடியரசு.
ஜனநாயகத்தில் எல்லோருக்கும் உரிமை உண்டு. மீனவ சமுதாயத்தினரிடம் ஓட்டு வாங்கும்பொழுது வருவீர்களே! தேர்தல் நேரத்தில், கச்சத்தீவைப்பற்றி மோடி பேசினாரே – இப்பொழுது அதுபற்றி ஏதாவது வாயைத் திறக்கிறார்களா?
தமிழ்நாட்டில் எப்படியாவது வெற்றி பெற்றுவிடவேண்டும் என்று நினைத்து, ‘‘ரோடு ஷோ” போனார். நாம் சென்றால், அது பேரணி; அவர்கள் இங்கே சென்றால், அது ‘‘ரோடு ஷோ” – அயோத்தியில் சென்றால், அது ‘‘காட் ஷோ” – எல்லா ஷோவையும் செய்தார். கடைசியில் பெரியார் மண்ணில் அவர்கள் ஓரிடத்தில்கூட வெற்றி பெறவில்லை. 40-ம் நமதே என்று சொன்ன நம்முடைய முதலமைச்சருடைய உழைப்பும், தோழர்களுடைய உழைப்பும் 40 இடங்களையும் பெற்றுத் தந்தது.
அந்தக் கோபம் அவர்களுக்கு இருக்கலாம். அதற்காக மீனவ சமுதாயத்தைத் தண்டிக்கலாமா?
குஜராத் மீனவர்களுக்கு ஒரு நீதி தழ்நாட்டு மீனவர்களுக்கு வேறு ஒரு நீதியா?
ஆசிரியர்கள் கோபித்துக் கொள்ளக்கூடாது; சில ஆசிரியர்கள் என்ன செய்வார்கள் என்றால், பலமாக இருக்கின்றவர்களை அடிக்கமாட்டார்கள்; பலவீனமாக இருப்பவரை பயமுறுத்துவதற்காக ஓங்கி அடிப்பார்கள். ஏனென்றால், பலவீனமாக இருப்பவர்கள் திருப்பி அடிக்கமாட்டார்கள் என்பதால்தான்.
அதுபோன்று, பலகீனமாக யார் இருக்கிறார்களே, அவர்களைத் தாக்குகிறார்கள். நம்முடைய மீனவத் தாய்மார்களின் வாழ்க்கை பாதுகாப்பாக இருக்கவேண்டாமா?
நம்மை வாழ வைத்த மீனவ சமுதாயத்திற்காக நாம் போராடவேண்டாமா? அவர்களின் வாழ்க்கைக்கு நாம் பாதுகாப்பாக இருக்கவேண்டாமா? என்பதை நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.
அதற்காகத்தான் இந்தப் போராட்டம் – இந்தப் போராட்டம் என்பது மனிதநேயப் போராட்டமாகும். இந்தப் போராட்டம் என்பது யாருக்காகவோ அல்ல – நம்முடைய மீனவ சகோதரர்களுக்காக – நம்முடைய நாட்டின் மானத்தைக் காப்பாற்றுவதற்காக – நம்முடைய உரிமைகளைக் காப்பாற்றுவதற்காக.
அதற்கு நம்முடைய மாநில அரசு – திராவிட மாடல் அரசு எப்படி உறுதுணையாக இருக்கிறதோ, அந்த அரசுக்கு நாம் துணையாக இருந்து, போராடவேண்டிய நேரத்தில் போராடுவோம் – வாதாடவேண்டிய நேரத்தல் வாதாடுவோம் என்பதை நன்றாகப் புரிந்து, அனைவரும் ஒன்று சேருவோம்.
அனைவரும் இங்கே சிறப்பாக சொன்னதைப்போல, புதுச்சேரி மாநிலத்திலிருந்து மேனாள் அமைச்சர் அய்யா கமலக்கண்ணன் அவர்கள் வந்திருக்கின்றார். அதுபோன்று எல்லா பகுதிகளிலும் இருந்து இங்கே வந்திருக்கின்றார்கள்.
குஜராத் மீனவர்கள் அடிபட்டால் பரவாயில்லை என்று நாம் சொல்லமாட்டோம். ஆனால், குஜராத் மீனவர்களுக்குக் காட்டும் அதே மனிதாபிமானத்தை, தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் காட்டுங்கள் என்றுதான் சொல்லுகிறோம்.
வெற்றி கிட்டும் வரை போராடுவோம்!
ஆகவே நண்பர்களே, இது தொடக்கம்! தொடர்ந்து பல இடங்களில், பல ரூபங்களில் இந்தப் போராட்டம் தொடரும்.
நாங்கள் இதுவரையில் போராடிய எந்த விஷயத்திலும் தோற்றது கிடையாது.
பெரியார் சொன்னார், ‘‘என்னுடைய போராட்டங்களில் எல்லாம் வெற்றி கிடைப்பது கொஞ்சம் தாமதமாகலாம்; ஆனால், உறுதியான வெற்றி கிடைக்கும்” என்றார்.
எனவே, இது மனித உரிமைப் போராட்டம் – மானப் போராட்டம் – தேசத்தைக் காப்பாற்றுவதற்கான, இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான போராட்டம்.
இந்தப் போராட்டத்தில் அனைவரும் ஒன்று சேர்ந்திருக்கின்றோம். இவ்வளவு குறுகிய காலத்திற்குள் இந்தப் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்த நாகை மாவட்ட திராவிடர் கழகத் தோழர்களைப் பாராட்டுகிறோம். அருமையான ஏற்பாடுகளை செய்திருக்கிறார்கள். குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் உள்பட எல்லோரும் வந்திருக்கிறீர்கள். தாய்மார்கள் ஏராளம் வந்திருக்கிறீர்கள். அனைவருக்கும் நன்றி!
இதுபோன்ற போராட்டங்கள் தொடரவேண்டும்!
இந்த அக்கிரமத்திற்கு முற்றுப்புள்ளி – நிரந்தர முற்றுப் புள்ளி வைக்கவேண்டும்.
அனைவருக்கும் நன்றி கூறி, விடைபெறுகிறேன்.
போராடுவோம்! போராடுவோம்!
வெற்றி பெறுவோம், நிச்சயமாக!
மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்போம்!
இது எங்களுடைய மனிதாபிமானப் பிரச்சினை – உரிமைப் பிரச்சினை! நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கண்டன உரையாற்றினார்.