வாசிங்டன், அக்.1 பெரியார் பன்னாட் டமைப்பின் சார்பில் திட்டமிடப்பட்டு மிகவும் சிறப்பாக இளையோர் விழாவாகக் கொண்டாடப்பட்டது.
பெரியார் பன்னாட்டமைப்புத் தலைவர் சோம.இளங்கோவன் வரவேற்பும், சமூகநீதி உறுதிமொழியும் சொல்லித் தொடங்கி வைத்தார். திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் ஒழுங்கு செய்து – கவின் நிகழ்ச்சிகளை நடத்தினார்.
தமிழ்நாட்டு குழந்தைகளைப் போட்டிக்கென பதிவு செய்து செப் 22 ஆம் நாள் 200க்கும் மேற்பட்டக் குழந்தைகள் தங்கள் திறமைகளைப் பெரியார் பற்றிய கருத்துக்களாக வெளிப்படுத்தினர். கண்கவர்ந்தது மட்டுமன்றிக் கொள்கை ஓவியங்களாகப் படைத்து வியப்பில் ஆழ்த்தினார்கள். பேச்சுப்போட்டியில் வயதிற்கேற்றார்போல் பேசிய மழலை முதல் இளைய தலைமுறையினரின் கருத்தாழமிக்கப் பேச்சுகள் அவர்கள் எவ்வளவு தூரம் பெரியாரை உள்வாங்கியுள்ளனர் என்பதை வெளிப்படுத்தியது.
பாட்டுப் போட்டியில் புரட்சிக் கவிஞரின் பாடல்கள் பாடப்பெற்றன. கட்டுரைகள் எழுதிக் கருத்துகளை வெளியிட்டோர் தந்தை பெரியாரின் கருத்துக் கருவூலங்களை அலசி ஆராய்ந்து எழுதியுள்ளனர்.
மிகவும் சிறப்பாக ‘கொகூட்’ என்னும் போட்டியில் சிறப்பாக கேட்கப்படும் கேள்விகளுக்குச் சரியான விடையை யார் விரைவாக அளிக்கின்றார்களோ அவர்களுக்கு அதிகம் மதிப்பெண் தரப்படும் .உடனுக்குடன் அது திரையில் தெரியும். தேர்ந்தெடுத்தக் கேள்விகளுக்கு இளையோர் உடனுக்குடன் பதில் பதிவு செய்து மகிழ்ந்தனர்.
இவை அனைத்தும் செப் 23ஆம் நாள் அமெரிக்க வாழ் குழந்தைகளுக்கு நடந்தன. பெரியார் பன்னாட்டமைப்பு நிர்வாகக் குழு உறுப்பினர் தமிழ் மணி நிகழ்ச்சிகளை மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்து வழங்கினார். மழலைகள் பாட்டுடன் தொடங்கி, பேச்சு, கட்டுரை, ஓவியம், சிலம்பம் என்று தங்கள் திறமைகளைத் தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளிப்படுத்தினர் . தமிழரல்லாதவர்களும் கலந்து கொண்டது சிறப்பானதாகும். ‘கொகூட்’ போட்டி மிகவும் விறு விறுப்பான போட்டியாக நடந்தது. ஆண்டுதோறும் ஊக்கத் தொகை அளித்து வரும் பெரியார் பன்னாட்டமைப்பு இந்த ஆண்டு இணையத்தில் வெற்றி பெற்று வரும் கரிகாலன் அவர்களை அழைத்துப் பெருமைப்படுத்தி அவருக்கு 25,000 ரூபாய் பரிசுத்தொகை அறிவித்தது. அவர் மகிழ்சசியுடன் சிறப்பான உரை ஆற்றினார்.
தமிழ்நாட்டுக் குழந்தைகள் – பங்கு பெற்றோர் அனைவருக்கும் ஒன்றரை ஆண்டு OTT. Periyar Vision மற்றும் சிறப்பாகச் செய்தவர்களுக்கு ஓராண்டு ‘பெரியார் பிஞ்சு’ம் பரிசளிக்கப்படும். அமெரிக்கக் குழந்தைகட்கு ‘பெரியார் பிஞ்சு’ இணைய தளம் மூலமாகவும், சிறப்புப் பரிசுத் தொகையும் வழங்கப்படும். கலந்து கொண்ட அனைவருக்கும், ஏற்பாட்டாளர்களுக்கும், நடுவர்களுக்கும் பெரியார் பன்னாட்டமைப்புப் பொருளாளர் அருள்செல்வி நன்றி கூறினார்.