சென்னை, அக்.1- 2022-2023 ஆம் ஆண்டு அதிக வேலைவாய்ப்பு வழங்கிய மாநிலம் தமிழ்நாடு என்று ஒன்றிய அரசு தெரி வித்துள்ளது.
ஒன்றிய அரசின் புள்ளியியல் அமைச்சகம் தொழிற்துறை குறித்த 2022-2023 ஆம் ஆண்டுக்கான மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், நாடு தழுவிய அளவில் ஒரு கோடியே 84 லட்சத்து 94 ஆயிரத்து 962 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்புகளை உருவாக்கியதில் முன்னணியில் இருக்கும் முதல் 5 மாநிலங்களின் பட்டியலை யும் வெளியிட்டுள்ளது. அதில், 15 சதவீத பங்களிப்பினை வழங்கி தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது.
அதாவது 2022-2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு 27 லட்சத்து 74 ஆயிரத்து 244 வேலைவாய்ப்புகளை உருவாக்கியிருக்கிறது. தமிழ்நாட்டிற்கு அடுத்தப்படியாக 12.84 சதவீத பங்களிப்பினை வழங்கி மராட்டியம் 2 ஆவது இடத்திலும், 12.62 சதவீத பங்களிப்பினை கொடுத்து குஜராத் 3 ஆவது இடத்திலும், 8.04 சதவீதத்துடன் உத்தரப்பிரதேசம் 4 ஆவது இடத்திலும், 6.58 சதவீத பங்களிப்பினை தந்து கருநாடகா 5 ஆவது இடத்திலும் அங்கம் வகிக்கின்றன.
இதேபோல நாட்டிலேயே அதிக தொழிற்சாலைகள் உள்ள மாநிலங்கள் பட்டியலில் 15.66 சதவீதம் பெற்று தமிழ்நாடு முதல் இடத்தில் இருக்கிறது. 12.25 சதவீதத்துடன் குஜராத் 2 ஆவது இடத்திலும், 10.44 சதவீதத்துடன் மராட்டியம் 3 ஆவது இடத்திலும், 7.54 சதவீதத்துடன் உத்தரப்பிர தேசம் 4 ஆவது இடத்திலும், 6.51 சதவீதத்துடன் ஆந்திரா 5 ஆவது இடத்திலும் உள்ளன.
துணை முதலமைச்சர்
உதயநிதி ஸ்டாலின்
இதுதொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலை தளபதிவில் கூறியிருப்பதாவது:-
‘திராவிட மாடலு’க்கு மற்றுமொரு மணிமகுடம். இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகளைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு என்றும், அதிகமானோருக்கு வேலைவாய்ப்பை வழங்குவதிலும் தமிழ்நாடு முதலிடம் என்றும் ஒன்றிய அரசின் புள்ளி யியல் அமைச்சகத்தின் அறிக்கை தெரி விக்கிறது. கலைஞர் ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட தொழில் கொள்கையின் நீட்சி யும், நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முயற்சியும் இப்போது நல்ல விளைச்சலை தந்துக்கொண்டிருக்கின்றன. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியால் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக 2030 ஆம் ஆண்டுக்குள் உயர்த்திடுவதற்கான பணிகள் நம் ‘திராவிட மாடல்’ அரசால் தொடரும், உயரும்.
இவ்வாறு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
டி.ஆர்.பி.ராஜா
தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது பதிவில் கூறியுள்ளதாவது:-
‘‘நாம் கொண்டு வரும் லட்சக்கணக்கான கோடி முதலீடுகளில் ஒவ்வொரு ரூபாயும் நமது இளைஞர்களுக்குத் தரமான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாக கொண்டது’’ என்று எங்களது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழுத்தமாகக் கூறி வருகிறார். தற்போது ஒன்றிய அரசு வெளியிட்ட முடிவு கள் அதை பற்றி பேசுவதாக உள்ளது. ஒன்றிய அரசு வெளியிட்ட 2022-2023 தொழில்துறை ஆண்டறிக்கையின்படி, இந்தி யாவில் உருவாக்கப்பட்டுள்ள அனைத்து தொழில்துறை வேலைகளில் 15 சதவீத பங்களிப்பினை தமிழ்நாடு வழங்கியிருக்கிறது. தொழில்துறையில் நாம் நாட்டின் தலைசிறந்த வேலை கொடுப்பவராக மாறியிருப்பதை இது காட்டுகிறது. வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியில் நாம் இடைவிடாமல் கவனம் செலுத்தி வருவதற்கு இது ஒரு சான்றாகும். இதுதான் ‘திராவிட மாடலின்’ செயல்பாடு.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.