ஒன்றிய அரசின் வக்பு வாரிய சட்டம்: ஆர்.எஸ்.எஸ். எடுத்த முடிவு மேனாள் ஒன்றிய அமைச்சர் ரகுமான்கான் குற்றச்சாட்டு!

viduthalai
2 Min Read

சென்னை, செப். 28- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் ‘வக்பு சட்டத்திருத்த மசோதா-2024 ஆலோசனைகளும் ஆட்சேபனைகளும்’ கருத்தரங்கம் சென்னை, தேனாம்பேட்டை காம ராஜர் அரங்கத்தில் நேற்று (27.9.2024) நடைபெற்றது. இக்கருத்தரங்கில் மேனாள் ஒன்றிய அமைச்சர் கே.ரகுமான் கான் பேசியதாவது:

ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள வக்பு சட்டத்திருத்த மசோதா முஸ்லிம்களின் மத உரிமையில் தொடுக்கப்பட்டுள்ள தலையீடு.
இந்த நடவடிக்கை நாக்பூர் ஆர்எஸ்எஸ் எடுத்த முடிவு ஆகும்.வக்பு சொத்துகள் என்பவை முஸ்லிம் மன்னர்களும், முஸ்லிம் அல்லாத மன்னர்களும், செல்வந்தர் களும் இறைபணி நோக்கத்துக்காக கொடையாக வழங்கியவை.

அர்ப்பணிப்புக்காகவும், மத பணிகளுக்காகவும் அளிக்கப் பட்டவை. அத்தகைய வக்பு சொத்து களை அபகரிக்க ஒன்றிய அரசு முயற்சி செய்கிறது. முஸ்லிம்களிடம் ஏராளமான சொத்துகள் குவிந்து கிடக்கின்றன என்ற தோற்றத்தை மற்ற மத மக்களிடையே உரு வாக்கும் நோக்கில் ஒன்றிய அரசு இந்த சட்ட திருத்தத்தை கொண்டு வருகிறது. சுமார் 25 ஆண்டு கால ஆலோசனைகளுக்கு பின்னர் 1956 வக்பு சட்டத்தில் தேவையான சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.

அப்படி இருக்கும்போது இப்போது திடீரென மீண்டும் சட்டத் திருத்தங்கள் கொண்டுவர வேண்டிய அவசியம் என்ன? வக்பு சொத்துகளை வேறு பெயருக்கு மாற்ற முடியாது. ஒரு சொத்து வக்பு சொத்தாக மாற்றப்பட்டுவிட்டால் அது காலம்முழுவதும் வக்பு சொத்து தான் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

தற்போது இருக்கிற வக்பு சட்டத்தில் வக்பு வாரியத்துக்கு தன்னாட்சித் தகுதி அளிக்கப் பட்டுள்ளது. ஆனால், புதிய சட்டத் திருத்தத்தில் தன்னாட்சித் தகுதி பறிக்கப்பட்டு அரசு தலையீடு அதிகம் ஏற்படும். முந்தைய சட்டத்தில் வக்பு வாரியம் விதி முறைகளை மீறினால் மட்டுமே அரசு அதில் தலையிட முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக அறிமுகவுரை ஆற்றிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்காதர் மொய்தீன், ‘‘வக்பு சட்டத்தில் திருத்தம் என்ற பெயரில் ஏறத்தாழ 160 திருத்தங்களை கொண்டு வந்துள்ளனர். சுமார் 70 புதிய சேர்க்கைகள் சேர்க்கப் பட்டுள்ளன.
திருத்தம் என்று சொல்லி சட்டத்தில் உள்ள அனைத்து அம்சங்களையும் அடியோடு மாற்றி விட்டனர். உண்மையில் வக்பு சட்டத்தை இல்லாமல் செய்ய முயற்சிக்கிறார்கள். இந்த சட்டத்திருத்த மசோதா மதச்சார் பின்மை, மத உரிமை, கூட்டாட்சி, அடிப்படை உரிமை அனைத்துக்கும் எதிரானது’’ என்று குறிப்பிட்டார்.

கேரள சட்டப்பேரவை எதிர்க் கட்சி துணைத் தலைவரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய பொதுச் செயலாளருமான பி.கே.குஞ்ஞா லிக்குட்டி, திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய அமைப்புச் செயலாளர் இ.டி.முஹம்மது பஷீர், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் பி.ஏ.காஜா முயினுத்தீன், தேசிய துணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துஸ் ஸமது ஸமதானி, தமிழ்நாடு வக்பு வாரிய தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.நவாஸ்கனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *