“ஆடும் வரை ஆடி உடல்
ஆடுகின்ற காலம் வந்து
தேடுதடா தேவனவன் வீட்டை – அவன்
தேடவில்லை இன்னும் எந்தன் ஏட்டை”
என்று எழுதும் கண்ணதாசன், இளமைக் காலத்தில் ஆடும்வரை ஆடினேன், இறுதிக் காலத்தில்தான் தேவனின் வீட்டைத் தேடுகிறேன், அதாவது அதிகம் பக்தி செலுத்துகிறேன், கோயில் குளங்களுக்கு அலைகிறேன் என்று சொல்கிறார்.
இதுதான் பெரும்பாலான மனிதர்களின் வாழ்க்கையில் நிகழ்கிறது. கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் என எல்லா வழிபாட்டுத்தலங்களிலும் 50 வயதிற்கு மேற்பட்டவர்களின் கூட்டம்தான் நிரம்பி வழிகிறது. என்ன காரணம்? வாழ்க்கை நாற்பதைத்தாண்டும்போது மெலிதாக எட்டிப்பார்க்கும் வியாதிகள் மரணத்தைக் குறித்த அச்சத்தை லேசாய் உருவாக்குகின்றன. வயது ஏற ஏற அந்த அச்சம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதனால்தான் பெரும்பாலோர் வாழ்வின் இறுதிக்காலத்தில் அதிதீவிர பக்தர்களாக மாறிவிடுகின்றனர்.
ஆனால், இளமைக் காலம் என்பது அப்படி இல்லை, “இளம் கன்று பயம் அறியாது” என்பது பழமொழி. இளமையில் மரணம் குறித்தோ, இந்த வாழ்க்கைக்கு ஒரு முடிவு உண்டு என்றோ துளியும் எண்ணமின்றிதான் பெரும்பாலும் வாழ்கிறோம். அதனால்தான் பகுத்தறிவு, கடவுள் மறுப்பு என்பவை இளமைக் காலத்தில் தீவிரமாக இருக்கிறது. கடவுளை ஏற்றுக்கொள்கிறவர்கள் கூட அதில் அவ்வளவு பிடிப்பு இல்லாமல், “ஒரு சம்பிரதாயத்திற்காக வணங்குகிறேன், இவற்றிலெல்லாம் எனக்கு உடன்பாடு இல்லை” என்று பேசுவதைப் பார்க்க முடிகிறது.
ஆனால், தன் இளமைக் காலங்களில் கடவுள் நம்பிக்கை கொண்ட நபராக இருந்துவிட்டு, வயது ஏற ஏற பகுத்தறிவில் முதிர்ச்சி பெற்ற பழுத்த நாத்திகவாதியாக ஒருவர் மாறினார் என்றால் அவர் பெரியார்தான். தான் கடவுள் மறுப்பாளனாக மாறியது மட்டுமில்லாமல்
தன்னைப்போலவே ஒரு பெரும் நாத்திகப் பட்டாளத்தை உருவாக்கியவரும் அவர்தான். இப்போதும் தமிழ்நாட்டில் ஒருவர் தன்னை நாத்திகர் என்று சொல்கிறார் என்றால் அவரை பெரியார் கட்சியா என்று கேட்பதுதான் வழக்கமாக இருக்கிறது. அந்த அளவிற்கு கடவுள் மறுப்பின் முழு அடையாளமாகத் திகழ்பவர் பெரியார்.
கடவுள் என்ற கற்பனை மக்கள் வாழ்வில் எவ்வளவு இழிவை கொண்டுவந்து சேர்க்கிறது என்பதை உணர்ந்து கொண்ட பெரியார், அந்த நம்பிக்கையை சமூகத்திலிருந்து உடைத்தெறிவதற்காக அவர் நடத்திய தீவிரமான போராட்டங்களெல்லாம் அவரின் முதிர்ந்த வயதில் நடத்தப் பட்டவைதான்.
ஒருவனை உயர்ந்தவன், மற்றவனை தாழ்ந்தவன் என்று சொல்லும் வருணாசிரம கொள்கை இந்து கடவுள்களோடு ஒன்றாக பின்னிப் பிணைந்திருக்கிறது. ஜாதி இழிவை ஒழிக்க வேண்டுமெனில் இந்துக் கடவுள்களை ஒழித்தாக வேண்டும் என்று முடிவெடுத்த பெரியார் 1953ஆம் ஆண்டு பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டத்தை நிகழ்த்தினார். பிள்ளையார் என்கிற கடவுள் ஸநாதன எதிர்ப்புப் போராட்டத்தில் தனக்கு முன்னோடியான புத்தரை அவமதிப்பதற்காகவே உருவாக்கப்பட்டது என்று கருதிய பெரியார் அதை புத்தபூர்ணிமா தினத்தில் நடத்தினார். அப்போது அவரது வயது 74.
1971இல் சேலத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டை நடத்தினார் பெரியார். அதில் வடநாட்டில் ராமலீலா என்கிற பெயரில் ராவணனது பொம்மைகள் எரிக்கப்படுவதால், மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில் ராமனது படத்தை எரிக்கவேண்டுமென்று திட்டமிட்டு அதன்படி எரித்தார் பெரியார். கடவுள்களைக் கொண்டு மக்களை ஏமாற்றிப்பிழைக்கும் பார்ப்பனக்கூட்டத்திற்கு இந்த மாநாடு பெரும் உறுத்தலை ஏற்படுத்தியது.
அதனால் பெரியார் ராமன் சிலையை செருப்பால் அடிப்பது போன்று, அம் மாநாட்டில் நடக்காத ஒன்றை சித்திரமாக, சோ ராமசாமி தனது துக்ளக் பத்திரிகையில் வெளியிட்டார். மேலும் அதே படத்தை 3 லட்சம் சுவரொட்டிகள் தயாரித்து தமிழ்நாடெங்கும் ஒட்டினார். “நான் நினைத்ததை விட அதிகமாக இந்த நிகழ்ச்சியை பார்ப்பனர்கள் பிரபலப்படுத்திவிட்டனர்.
இதுதான் அவர்களின் முட்டாள்தனம்” என்று கேலி செய்தார் பெரியார். கடவுளுக்கும், மூட நம்பிக்கைக்கும் எதிராக இவ்வளவு தீவிரமான பிரச்சாரங்களை நிகழ்த்தியபோது அவருக்கு வயது 92.
வயது முதிர்ந்த காலத்தில் தோன்றும் மரண பயத்தை முதலீடாகக் கொண்டுதான் கடவுள் எனும் வியாபாரமே நடக்கிறது. ஆனால் கடவுளுக்கு மட்டுமல்ல, மரணத்தைக் கண்டும் அஞ்சாத பெரியார் பொது உளவியல் விதிகளைக் கூட உடைத்தெறிந்தார்.
ஒரு இளைஞன் கூட உணர்ச்சி வேகத்தில் செய்யத் தயங்கும், பல காரியங்களை மிக நிதானமாக சிந்தித்து, எந்தவித பதற்றமும், பயமும் இல்லாமல் செய்தவர் பெரியார்.
பெரியாரைப் போலவே ஆரம்பத்தில் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக இருந்துவிட்டு, பின் கடவுள் மறுப்பாளர்களாக மாறியவர்களில் சிலரை நாம் பார்த்திருக்கக்கூடும். அவர்கள் தன் சொந்த பிரச்சினைகளுக்காக கடவுளிடம் வேண்டிக் கொண்டதாகவும், அவை எதுவும் தான் வேண்டிக்கொண்டபடி நடக்காததால், அந்த விரக்தி யிலிருந்து கடவுளை மறுக்கத் துவங்கியதாகவும் கூறக் கேட்கிறோம்.
இவ்வாறு கடவுளை மறுத்தவர் அல்ல பெரியார். அவருக்கும் ஒரு சொந்த அனுபவம் உண்டு, அது காசியில் பார்ப்பனர்கள் எவ்வாறு பிற ஜாதியாரை நடத்துகின்றனர் என்கிற அனுபவம். கடவுளின் பெயரால் அவர்கள் எவ்வாறு பித்தலாட்டம் செய்கின்றனர் என்னும் அனுபவம். அதிலிருந்து பார்ப்பனரல்லாத மக்களை எவ்வாறு மீட்டெடுப்பது என்கிற சமூக நோக்கத்திற்காக நாத்திகம் பேசியவர்தான் பெரியார்.
நோய்கள் மரணத்தின் முன்னறிவிப்பு என்றால், தனது 85ஆவது வயதிலிருந்து தான் இறக்கும் வரை சிறுநீரக பிரச்சினையால் அல்லலுற்றவர் பெரியார். தனக்கு சிறுநீர் எப்போது கழிகிறது என்பதைக்கூட உணர்ந்து கொள்ள முடியாதபடி அதற்கென்று தனியாக டியூப் செருகப்பட்டு அதை ஒரு பாத்திரத்தில் பிடித்துக் கொட்டுகிற நிலையிலும் கூட மரணத்தைக்குறித்து அஞ்சாதவர் பெரியார். அந்த உடல்நிலையிலும் வெவ்வேறு ஊர்களுக்குப் பயணித்துச் சென்று, மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் நடத்தி தனது பகுத்தறிவுப் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
1969இல் பேரறிஞர் அண்ணா புற்றுநோயினால் மரணமடைந்தபோது அவருக்கு வயது 60. திராவிடத்தை வெறுக்கும் பார்ப்பனக்கூட்டம் அண்ணாவின் மரணத்தை வெடிபோட்டுக் கொண்டாடியது. அண்ணா நாத்திகம் பேசியதால்தான் சீக்கிரம் இறந்துவிட்டதாக அவர்கள் கூறினர். இதற்கு கடுமையான எதிர்வினையாற்றினார் பெரியார். “அட முட்டாளே அண்ணாதுரையை விடத் தீவிரமாக கடவுளை எதிர்ப்பவன் நான்தான், இப்போதும் கூட தொடர்ந்து பிரச்சாரம் செய்துகொண்டுதான் இருக்கிறேன். எனக்கு வயது 90, உன் கடவுள் என்னை ஒன்றும் செய்யவில்லையே” என்று பதிலடி கொடுத்தார்.
கடவுள் உண்மை என்று நம்புபவர்கள் கூட மரண பயத்தில் தான், தன் இறுதிக் காலத்தில் கூடுதல் பக்தி செலுத்துகின்றனர். அவர்கள் தங்கள் சுயநலத்திற்காக கடவுளையும் கூட பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கின்றனர். ஆனால் மரண பயத்தை வென்ற பெரியார், தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தார். கடைசிவரை கடவுளை மறுத்தார். அதனால் அவர், தான் நம்பாத கடவுளையும் கூட ஏமாற்றவில்லை. ஆனால் ஆடும்வரை ஆடிவிட்டு சாகப் போகும்போது சங்கரா சங்கரா என்பவர்கள், தங்களையும் ஏமாற்றிக் கொள்கிறார்கள்; தாங்கள் நம்புவதாக சொல்லும் கடவுளையும் ஏமாற்றுகிறார்கள்.