அண்மைக் காலத்தில் நம் மனதை உறுத்தும் நிகழ்வுகளில் முதன்மையானது ஆடம்பரத் திருமணங்கள் தொடங்கி பல வகை விளம்பர வெளிச்சங்கள் – அருவருக்கத்தக்க அலங்காரங்கள், பணத் திமிரின் படாடோப வெள்ளம் பாய்ந்து, பல மனிதர்களை – குறிப்பாக ஏழ்மை நடுத்தரக் குடும்பத்தவர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கி வருகிறது!
‘நுகர்வோர் கலாச்சாரம்’ என்ற ‘கன்சுமரிசம்’ (Consumerism), தொலைக்காட்சி மற்றும் ஏடுகளில் பார்க்கும் விளம்பரங்களால் மயக்கப்பட்டு (அதுவும் ஒரு வகை போதைதான்) தங்களது பொருளாதாரத் தகுதிக்கு அப்பாற்பட்டு, ஓப்பீடு வாழ்க்கையான போலி வாழ்க்கையை வாழ்ந்து, இறுதியில் நாசமாகிறார்கள்.
ஆடம்பரக் கார்கள், அதி நவீன கைத்தொலைபேசிகள் முதலியன எல்லாம் ஏதோ அன்றாட இன்றியமையாதவைகளாகவே எண்ணிக் கொண்டு, அவற்றைப் பெறுவதற்காக பணம் திரட்டுவதில் பல குறுக்கு வழிகளையும், ஒழுங்கீனமும், ஒழுக்கக் குறைபாடும் நிறைந்த செயல்களிலும் கூச்ச நாச்சமின்றி ஈடுபட்டு இறுதியில் மானங்கெட்டு தங்களது வாழ்க்கையை சீரழித்துக் கொள்ளுகிறார்கள்!
வங்கிகள் சேமிப்புக்காகவும், பணப் பாதுகாப்புக்காகவும் பயன்பட்டதிலிருந்து மேலும் அடுத்த கட்டத்திற்குத் தாவி, கிரெடிட் கார்டு (Credit Card System) என்பதை சரியாகப் பயன்படுத்தாமல், தம்மிச்சை போல், தாறுமாறாக கடன் வாங்கி சேமிப்பை இழப்பதோடு, நிரந்தரக் கடன்காரர்களாகவே வாழும் அவல வாழ்வை வாழுகின்ற கொடுமை கண் கூடு!
36 சதவிகித வட்டியாம் ‘Credit Card System’ என்ற இந்த ‘கடன் அட்டை’ வசதியைப் பயன்படுத்துகிறவர்களுக்கு (மூன்று வட்டி)!.
கையில் பணமாகக் கொண்டு போனால் பாதுகாப்புப் பிரச்சினை ‘தலைவலி’ உண்டு என்பதால் இந்த கார்டு முறை – பணம் எடுத்துப் புழங்குவது – ATM என்ற பணம் பெறும் வசதி எல்லாம் நல்லதற்குப் பயன்படுவது வரவேற்கத்தக்கது என்றாலும் அதனைத் தவறாகப் பயன்படுத்தி கார்டுகளைக் கண்டறிவது, பிறரது வங்கிக் கணக்குகளைச் சூைறயாடுவது போன்ற செயல்களும் – பல மோசடி, ஏமாற்றுகளைச் செய்து, வாழும் கொடுமையும் மற்றோர்புறம்!
பல போலி மின்னஞ்சல்கள் மூலம் நம்மைப் பதற வைப்பது போன்ற, நமக்கு மிக நெருக்கடி தருவதுபோல – ‘‘தான் ஏதோ ஒருவரிடம் சிக்கிக் கொண்டதாகவும், அவருக்கு உதவ அவசரமாக இந்தத் தொகையை அனுப்புங்கள்’’ என்றும் பொய்த் தகவல் வருகிறது. அவைகளைச் சமாளிக்க வேண்டும் – எது உண்மை? எது போலி என்று கண்டிப்பதே மிகக் கடினமானது.
ஒரு நண்பரிடமிருந்து இப்படி அவசர அபாய உதவி குறித்த தகவல் ஒரு முறை எனக்கு வந்தது. எங்கேயோ இக்கட்டில் மாட்டிக் கொண்டதுபோல! நான் பதறவில்லை – கதறவில்லை.
காரணம் மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டே பக்கத்தில் உட்கார்ந்திருந்த நண்பரிடம் காட்டினேன். அவர் வேறுயாரும் இல்லை. அந்த மின்னஞ்சலில் பாதிக்கப்பட்டதாக அவசர நிதி உதவி தேவை என்று யார் கேட்டாரோ – யார் குறித்து அச்செய்தி வந்ததோ அவர்தான் என் அருகில் இருந்த நண்பர்!
எப்படிப்பட்ட மோசடி பார்த்தீர்களா? ஆடம்பரப் பொருள்களை வாங்கி தற்பெருமைக்கு ஆர்ப்பரித்து வெளிச்சம் போடுவதினால் என்ன லாபம்?
ஆடம்பரத் திருமணங்கள், அதனை அறிவிக்க ஆடம்பர திருமண அழைப்பிதழ்கள் – ஆடம்பர விருந்துகள் (அது பசியாற அல்ல; தனது பண பலத்தை பாரில் உள்ளவர்களுக்குப் பறைசாற்றவே!)
எளிமை மெல்ல விடைபெறும் வேதனை அங்கிங்கெனாதபடி எங்கும் விளம்பர நோய், தொற்று நோயாகப் பரவி, ஏழை எளியவர்களையும், நடுத்தர வருமானக்காரர்களையும் கெடுத்து வருகிறது!
(வளரும்)