மேனாள் அமைச்சர் செந்தில்பாலாஜிமீது ஒன்றிய அரசின் அமலாக்கத் துறை போட்டுள்ள வழக்கில், கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வரும் அவருக்கு 471 நாள்களுக்குப் பிறகு உச்சநீதிமன்றம் பிணை (ஜாமீன்) வழங்கியிருக்கிறது.
பொதுவாக உச்சநீதிமன்றத்தின் பல பிணை வழக்குத் தீர்ப்புகளில், பிணை வழங்குவதில், ஒரு பொது சட்ட மரபு, முன்மாதிரிகளும் எப்போதும், ‘‘பிணை என்பது விதி, சிறை என்பது ஒரு விதிவிலக்கு’’ என்று குறிப்பிடப்பட்ட நிலையில், இவரது வழக்கில் இவருக்கு இப்போதுதான் நீதி வழங்கப்பட்டு இருப்பது, தாமதித்து வழக்கப்பட்டிருக்கிறது என்றாலும், தவறக்கூடாத சிறப்பான தீர்ப்பு இது!
இதில் அமலாக்கத் துறையின் அதீதமான போக்கினையும் ஒதுக்கி, நியாயம் கிடைத்துள்ளது, வரவேற்கப்படவேண்டிய ஒன்றாகும்.
ஒரு சில நிபந்தனைகளுடன் பிணை கொடுக்கப்பட்டு, சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுகிறார்.
மனித உரிமைக் கண்ணோட்டத்தில் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய முக்கிய தீர்ப்பு இது!
நமது அரசமைப்புச் சட்டம் வாழுகிறது இதன்மூலம்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.
சென்னை
26.9.2024