மூத்திரப்பை கையேந்தி ஊர்ஊ ராக
மூடத்தை ஓட்டிக்கால் வெட்டி யவன்நீ!
ஆத்திகர்கள் பின்னிவைத்த சூழ்ச்சி வலையை
அறிவென்னும் கத்தியாலே அறுத்த வன்நீ!
சாத்திரங்கள் எல்லாமே புளுகு மூட்டை
சாய்த்துவிடும் எனஉண்மை உணர்த்தி யவன்நீ!
சூத்திரர்கள் எனகுனிய வைத்த முதுகை
சுரணையூட்டி நிமிர்த்திநிற்க வைத்த வன்நீ!
நீவந்த பின்னால்தான் எங்கள் வீட்டில்
நின்றிருந்த பழமைகளும் எரியக் கண்டோம்!
நீவந்த பின்னால்தான் எங்கள் நெஞ்சில்
நியாயத்தின் நினைவுகளும் எழும்பக் கண்டோம்!
நீவந்த பின்னால்தான் இந்த நாட்டில்
நின்றமூடம் முடமான காட்சி கண்டோம் !
நீவந்த பின்னால்தான் தாழ்ந்தி ருந்தோர்
நிமிர்ந்துதலை நடக்கின்ற துணிவு கண்டோம்!
சிந்தனையைத் தூண்டிவிட்டே அறிவால் எந்தச்
சிறுவினையும் செய்கவென்றே முழக்க மிட்டு
இந்நிலத்தில் பகுத்தறிவுப் பாதை வெட்டி
இருக்கின்ற சூத்திரர்க்கே உணர்வை ஊட்டி
மந்தையென வாழ்ந்தோர்க்கு மதியை ஈந்து
மறுமலர்ச்சி வரலாற்றை புதிதாய் ஆக்கித்
தந்திட்ட பெரியாரை நாம்ம றந்தால்
தலைநிமிர்ந்த நாம்மீண்டும் தாழ்ந்து போவோம் !
பெரியாரை நினைப்போம் என்றும்!!-பாவலர் கருமலைத்தமிழாழன்
Leave a comment