வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் திருவள்ளுவர் பிறந்தாரா? வழக்கு தள்ளுபடி

Viduthalai
2 Min Read

சென்னை, செப்.21- திருவள்ளுவர் எப்போது பிறந்தார் என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை என்பதால், வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தநாளை கொண்டாட உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில், திருவள்ளுவர் திருநாள் கழகத் தலைவர் பேராசிரியர் டாக்டர் சாமி தியாகராஜன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘பொங்கல் விழாவுக்கு மறுநாள் தமிழ் மாதம் தை 2ஆம்தேதி திருவள்ளுவர் நாளாக கொண் டாடப்பட்டு வருகிறது.
அன்றைய நாளை தமிழ்நாடு அரசு விடுமுறை நாளாக அனு சரிக்கிறது. ஆனால் உண்மையில் திருவள்ளுவர் வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திரத் தில் பிறந்தவர் என்பதால் அன்றைய நாளை திருவள்ளுவர் பிறந்த நாளாக அறிவிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

வைகாசி மாதம்
இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பாக விசார ணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், ‘கடந்த 1935-ஆம் ஆண்டு நடந்த கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட மறைமலையடிகள் போன்ற தமிழறிஞர்கள், வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில்தான் திருவள்ளுவர் பிறந்ததாக குறிப்பிட்டுள்ளனர். 600 ஆண்டு களுக்கு முன்பாக மயிலாப்பூரில் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோவிலில், வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தன்றுதான் திருவள்ளுவர் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. எனவே அன்றைய நாளை திருவள்ளுவர் பிறந்த நாளாக அறிவிக்க வேண்டும்’ என வாதிட்டார்.

ஆதாரம் இல்லை
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதிட்ட அரசு தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன், “தமிழர் திருநாளான பொங்கல் மறுநாள் தை 2-ஆம் தேதி திருவள்ளுவரை போற்றும் விதமாக திருவள்ளுவர் நாளாக கொண்டாடப்படுகிறது. ஆனால் அந்த நாள் திருவள்ளுவர் பிறந்த நாளாக அறிவிக்கப்படவில்லை. மனுதாரர் கூறுவதுபோல வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் திருவள்ளுவர் பிறந்தார் என்பதற்கு எந்த ஆதா ரமோ ஆவணமோ இல்லை” என வாதிட்டார்.

ஆதாரங்கள் இல்லை
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது-
திருவள்ளுவர் வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில்தான் பிறந்தார் என அறுதியிட்டுக்கூற எந்தவொரு ஆதாரமும் இல்லாத நிலையில், அந்த நாளை அவருடைய பிறந்த நாளாக அறி விக்கும்படி அரசுக்கு உத்தரவிட முடியாது.
ஆயிரத்து 330 குறள்கள் மூலமாக மனிதகுலத்தின் வாழ்வியலுக்கு வழிவகை செய்து கொடுத்துள்ள திருவள்ளுவரின் பிறந்த நாளைக் கண்டறிய ஆராய்ச்சியில் இறங்கிய போது, அவரது பிறந்தநாள் குறித்த எந்தவொரு தீர்க்கமான ஆதாரங்களும் கிடைக்கவில்லை.

அதனால், மனுதாரர் கோரிக் கையை ஏற்று வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தநாள் கொண்டாட உத்தர விட முடியாது. தை 2ஆம் தேதியை திருவள்ளுவர் நாளாக அறிவித்த அரசின் உத்தரவில் எந்தவொருஇடத்திலும் பிறந்த நாள் எனக் குறிப்பிடவில்லை.

தடைஇல்லை
அதேநேரம் மனுதாரர் சார்ந்துள்ள அமைப்பு வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தன்று திருவள்ளுவரின் பிறந்த நாளை தங்களது விருப்பம் போல கொண்டாட எந்தவொரு தடையும் இல்லை. இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன். இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *